திட்டக் குழு (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திட்டக் குழு
துறை மேலோட்டம்
அமைப்பு தலைமைகள்
வலைத்தளம்www.planningcommission.nic.in

இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும். 2014 இல், தனது முதல் சுதந்திர தின உரையில், பிரதம மந்திரி நரேந்திர மோடி, திட்டக் குழு கலைக்கப்படும் என்று அறிவித்தார்.[1] திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

சுதந்திரத்திற்கு முன்[தொகு]

1934ல் விசுவேசுவரய்யா பொருளாதார வளர்ச்சிக்கான தனது ‘இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற புத்தகத்தில் 10 ஆண்டுகளுக்கான திட்டத்தை உருவாக்கியிருந்தார்.இந்திய அரசுச் சட்டம், 1935 சட்டத்தின் அடிப்படையில் 1937ல் ராஜதானிகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டது .இதில் எட்டு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது.1937ல் கூடிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், ‘தற்போதைய முக்கியமான, மக்களின் (வறுமை, வேலையின்மை, நோய், பஞ்சம், கல்வி, சுரண்டல் போன்ற) உடனடிப் பிரச்சனைகளை ஆராய்ந்து, இவற்றிற்கு தீர்வுகாணும் வகையில் திட்டங்களை வகுத்துக்கொடுக்க வேண்டும் என்று, ராஜதானிகளில் உள்ள நிபுணர்களைக் கேட்டுக்கொள்வதாக’ ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.ரஷ்யப் புரட்சியும், அங்கு செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களும் , அதன் மூலம் அங்கு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும், சமூக மாற்றங்களும் இந்திய விடுதலைப் போராளிகளையும் ஈர்த்தது. அறிவியல்பூர்வமான வளர்ச்சி கொண்டதாக அமைய வேண்டும் என்று எண்ணிய மேகநாத சாஃகா , அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை சந்தித்து, இந்தியாவின் வறுமையை ஒழிக்கவும், எல்லா வகையிலும் வளர்ச்சியை எட்டவும், தேசிய திட்டக்குழு ஒன்றினை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.[2]

சுதந்திரத்திற்கு பிறகு[தொகு]

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் வளங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தியும், உற்பத்தியைப் பெருக்கியும், வேலைவாய்ப்பை அதிகரித்தும் மக்களின் வாழ்க்கைத்தரம் வளர வழிசெய்வதற்காக ஒரு திட்டக் குழு உருவாக்கப்பட்டது. 1950 மார்ச் 15ம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதைப் பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும். ஜவகர்லால் நேரு இதன் முதல் தலைவராவார்.

1951ல் முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டது ஆனால் இந்தியா பாக்கிஸ்தான் போரால் 1965ல் தடைபட்டது. அடுத்த இரண்டாண்டுகள் வரட்சியும், நாணய மதிப்பிழப்பும், விலையேற்றமும், வளம் குன்றலும் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இடையூராகயிருந்தது. அடுத்து மூன்று ஆண்டுத் திட்டங்கள் 1966 முதல் 1969 வரை போடப்பட்டு, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 1969ல் தொடங்கப்பட்டது.

1990-91ல் நிலையில்லாத, அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த மத்திய அரசியலால் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1990ல் தொடங்கப்படவில்லை. அதனால், 1990-91 மற்றும் 1991-92 ஆண்டுகளை ஆண்டுத் திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 1992ல் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. முதல் எட்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் பொதுத் துறையில் கவனம் செலுத்தப்பட்டு அடிப்படை மற்றும் கனரக தொழிலில் முதலீடு செய்யப்பட்டது ஆனால் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து பொதுத் துறையில் கவனம் குறைக்கப்பட்டு, தற்போது பொதுவான தேசிய வளர்ச்சியை நோக்கித் திட்டமிடப்படுகிறது.

அமைப்பு[தொகு]

திட்டக் குழுவின் தலைவராக நாட்டின் பிரதமரும், நியமன அடிப்படையில் மத்திய அமைச்சருக்கு நிகரான துணைத் தலைவரும், இதர துறை சார்ந்த நிரந்தர உறுப்பினர்களும் மற்றும் பகுதிநேர உறுப்பினர்களும் இதன் அங்கத்தவர்களாவார்கள். பொருளாதாரம், தொழிற்துறை, அறிவியல் மற்றும் பொது நிர்வாக வல்லுனர்களே நிரந்திர உறுப்பினர்களாகவும், முக்கிய அமைச்சகத்தின் அமைச்சர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள்.

நிதி ஆயோக்[தொகு]

திட்டக்குழுவிற்கு மாற்றாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு துணை தலைவராக அரவிந்த் பனகாரியா ஜனவரி 5ஆம் தேதி 2015 அன்று நியமிக்கப்பட்டுள்ளார். ராஜிவ் குமார் துணை தலைவராகவும் இருந்துள்ளார்.தற்போது நிதி ஆயோக் தலைவராக சுமன் பெரி உள்ளார்.

பணிகள்[தொகு]

1950ல் இந்திய அரசு கொண்டுவந்த தீர்மானத்தின் படி திட்டக்குழுவின் பணிகள் பின்வருவன.

  1. தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட நாட்டின் பொருள், மூலதனம் மற்றும் மனித வளங்களை அடையாளங்கண்டு நாட்டின் தேவைக்குக் குறைவானவற்றை அதிகரிக்கச் செய்தல்
  2. நாட்டின் வளங்களை மிகவும் பயனுள்ள மற்றும் சமச்சீரான பயன்பாட்டுக்கு ஏற்படி திட்டமிடல்.
  3. முன்னுரிமைகளின் அடிப்படையில் வளங்களை ஒதிக்கீடு செய்து திட்டமிட, கட்டங்களை வரையறை செய்தல்.
  4. பொருளாதார வளர்ச்சியைத் தாமதப்படுத்தும் காரணிகளை அடையாளம் காட்டுதல்.
  5. திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான தக்க சமூக மற்றும் அரசியல் நிலைமைகளைத் தீர்மானித்தல்.
  6. திட்டத்தின் வெற்றிகரமான ஒவ்வொரு நிலைக்கும் தேவைப்படும் போதிய இயந்திரங்களைக் கண்டறிதல்.
  7. ஒவ்வொரு கால நிலையிலும் திட்ட வளர்ச்சியை மதிப்பீடு செய்து, மேலும் வெற்றிக்குத் தேவையான அளவீடு மற்றும் கொள்கை ரீதியாக ஆலோசனை வழங்குதல்.
  8. மத்திய, மாநில அரசுகளின் பிரச்சனைகளை ஆராய்ந்து, அல்லது நடப்பு பொருளாதார நிலை, கொள்கை, வளர்ச்சித் திட்டங்களின் சாதகநிலைக்கேற்ப இடைக்கால அல்லது துணைப் பரிந்துரைகள் அளித்து வளர்ச்சியை சீராக்குதல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "திட்டக் கமிஷன் கலைப்பா? இடதுசாரிகள் எதிர்ப்பு". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 17 ஆகத்து 2014. p. 1. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2014.
  2. இரா.சோமசுந்தர போசு (3 செப்டம்பர் 2014). "திட்டக் கமிஷனை கலைப்பதா?". தீக்கதிர் தமிழ் நாளிதழ். p. 4. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 3 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திட்டக்_குழு_(இந்தியா)&oldid=3916620" இலிருந்து மீள்விக்கப்பட்டது