தாலிபன்களின் பெண்ணிய அணுகுமுறை
தாலிபன்கள் ஆஃப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, அவர்கள் பெண்களை அணுகிய முறையின் காரணமாக சர்வதேச அரங்கில் மிக மோசமான பெயரைப் பெற்றிருந்தனர். "பெண்களின் கட்டுப்பாடும், பெருமையும் மீண்டும் புனிதமடையும் விதமான பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக்குவதே" இலட்சியம் என்று அவர்கள் கூறினார்கள்,[1] புர்தாவில் வாழ்வது தொடர்பான பஷ்துன்வலி நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது.[2]
பொது இடங்களில் பெண்கள் கட்டாயமாக, பர்கா அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர், ஒரு தாலிபன் செய்தி தொடர்பாளர் கூறுவதாவது, ஒரு பெண்ணுடன் தொடர்பற்ற ஆண்களின் "சீரழிவுக்கு பெண்களின் முகமே ஆரம்பப் புள்ளி" என்றார்.[3] அவர்கள் பணி புரியவோ அல்லது எட்டு வயதுக்கு மேலே படிக்கவோ அனுமதிக்கப்படவில்லை, எட்டு வயது வரையும் கூட அவர்கள் குரானை மட்டுமே படிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், கல்வி கற்க விரும்பும் பெண்கள், கோல்டன் நீடில் சூயிங்க் ஸ்கூல் போன்ற, மறைவிட பள்ளிகளில் சேர்வதற்கு தூண்டப்பட்டனர், இதில் கல்வி பயிலும் மாணவிகளும், அதன் ஆசிரியர்களும் தாலிபன்களிடம் சிக்கினால், கொல்லப்படும் அபாயத்தை மீறியும் இவ்வாறு செய்தனர்.[4][5] ஆண் பாதுகாவலர் இல்லாமல் பெண்கள் ஆண் மருத்துவர்களால் சிகிச்சைப் பெறவும் அனுமதிக்கப்படவில்லை, இதனால் நோய்கள் சிகிச்சையளிக்கப்படாமலே இருக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. தாலிபன் சட்டங்களை மீறுபவர்களுக்கு, பொது இடங்களில் கசையடிகள் வழங்கப்பட்டனபிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag[6] 16 வயதுக்கு குறைந்த பெண்களின் திருமணத்தை தாலிபன் அனுமதித்தது, சில இடங்களில் ஊக்குவித்தது. அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் கருத்துப்படி, ஆஃப்கன் திருமணங்களில், 80 சதவீதமானவை கட்டாயத்தால் செய்யப்படுகின்றன.[7]
பொருளடக்கம் |
பாலினக் கொள்கைகள் [தொகு]
எட்டு வயது முதல் பெண்கள் நெருங்கிய ரத்த உறவு, கணவன் அல்லது ஒரு திருமணம் சார்ந்த உறவு (மஹ்ரம் என்பதைக் காணவும்) ஆகியோர் தவிர வேறு யாருடனும் நேரடியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.[8] பிறக் கட்டுப்பாடுகளாவன:
- ரத்த உறவினர் யாரேனும் ஒருவர் உடன் இல்லாமல் அல்லது பர்கா (பர்க்கா, புர்கா அல்லது புர்க்கா என்றும் அழைக்கப்படுகிறது) அணியாமல் பெண்கள் தெருக்களில் வருவது கூடாது.
- பெண்கள் குதிகால் உயரமான காலணிகளை அணியக்கூடாது, ஏனெனில் இச்சையைத் தூண்டக்கூடிய பெண்களின் காலடி சத்தங்களை ஆண்கள் கேட்கக் கூடாது.
- பொது இடங்களில் பெண்கள் உரக்க பேசக்கூடாது, ஏனெனில் புது மனிதர்கள் யாரும் அவர்களின் குரலைக் கேட்கக்கூடாது.[9]
- தெருவிலிருந்து வீட்டிலுள்ள பெண்கள் பார்க்கப்படுவதைத் தவிர்க்க, தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள எல்லா வீடுகளின் ஜன்னல்களும் வண்ணம் பூசப்பட்டோ அல்லது திரையிடப்பட்டோ இருக்க வேண்டும்.
- பெண்களைப் புகைப்படம் எடுப்பதோ, வீடியோ எடுப்பதோ தடை செய்யப்பட்டது, அதே போல பத்திரிகை, செய்தித்தாள்கள், புத்தகங்கள், கடைகள் அல்லது வீடு போன்ற இடங்களில் பெண்களின் புகைப்படங்கள் வெளியிடப்படுவது தடை செய்யப்பட்டது.
- "பெண்கள்" என்ற சொல்லைப் பெயரில் கொண்ட எந்த இடத்தின் பெயரும் மாற்றப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, "பெண்கள் தோட்டம்" என்ற பெயர் "வசந்த தோட்டம்" என்று பெயர் மாற்றப்பட்டது.
- பெண்கள் தங்கள் வீடுகளின் பால்கனிகளில் நிற்பது தடைசெய்யப்பட்டது.
- ரேடியோ, தொலைக்காட்சி அல்லது பொதுக்கூட்டங்கள் போன்ற இடங்களில் எந்த விதத்திலும் பெண்கள் தோன்றுவது தடைசெய்யப்பட்டது.[10]
ஆடைக் கட்டுப்பாடு [தொகு]
கண்ணைப் பறிக்கும் நிறமுடைய ஆடைகள் தடைசெய்யப்பட்டன, ஏனெனில் அவை பாலுணர்வைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளனவாம்.[10] 1996ஆம் ஆண்டில் இடப்பட்ட ஒரு தாலிபன் ஆணையின்படி, "ஒரு பெண் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் விதத்தில் ஃபேஷனான, அலங்காரமான, இறுக்கமான மற்றும் ஈர்க்கும் விதமான ஆடைகளை அணிந்தால், அவர்கள் இஸ்லாமிய ஷரியாவினால் சபிக்கப்படுவார்கள், அவர்கள் சொர்க்கத்துக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது."[11][12] நகப்பூச்சு பூசுவதற்கு அனுமதியில்லை.
போக்குவரத்து [தொகு]
பொது இடங்களில் நடத்தைத் தொடர்பான கட்டுப்பாடுகள், பெண்களின் சுதந்திரம், போக்குவரத்து ஆகியவற்றில் தீவிரமான தடைகளை ஏற்படுத்தியது. இதனால் ஒரு புர்காவை வாங்க முடியாத அல்லது மஹ்ரம் ஒருவரும் இல்லாத பெண்களுக்கு மிகவும் தீவிரமான பாதிப்புகள் ஏற்பட்டது. அந்த பெண்கள் கிட்டத்தட்ட வீட்டுச்சிறையிலேயே இருந்தனர்.[2] சாலையில் தனியாக நடந்ததற்காக மிக மோசமான முறையில் தாக்கப்பட்ட ஒரு பெண், "என் தந்தை சண்டையில் இறந்து விட்டார்...எனக்கு கணவரோ, சகோதரனோ அல்லது மகனோ இல்லை. நான் தனியாக செல்லாவிட்டால் எவ்வாறு உயிர் வாழ்வது?" என்று கேட்டாள்.[13]
டெர்ரெ டெஸ் ஹோம்மஸ் என்ற அரசு சாரா நிறுவனத்தின் களப் பணியாளர், தாஸ்கியா மாஸ்கான் என்ற, காபூலின் மிகப்பெரிய கருணை இல்லத்தில், பெண்களின் போக்குவரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்ணுற்றதாக தெரிவித்தார். அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த, பெண் பணியாளர்கள் கிட்டத்தட்ட 400 பேர், தங்களுடைய வேலைகளிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், மனதை எளிதாக்குவதற்காகவும் கூட வெளியே விடப்படாமல் ஒரு ஆண்டுக்கும் மேலாக பூட்டி வைக்கப்பட்டனர்.[8] பெண்களின் போக்குவரத்தை மிகவும் பாதித்த அரசாணைகளாவன:
- தன்னுடைய மஹரம்கள் உடன் இருந்தால் கூட, பெண்கள் பைசைக்கிள்கள் ஓட்டுவதற்கு தடை.
- ஒரு மஹரம் உடன் இல்லாமல், டாக்ஸியில் செல்வதற்கு தடை.
- ஆண்களும் பெண்களும் ஒரே பேருந்தில் பயணம் செய்வதைத் தடுக்க, வெவ்வேறு பேருந்து சேவைகள்
அறிமுகப்படுத்தப்பட்டன.[9]
கிராமப்புற பெண்களின் வாழ்க்கை குறைவான அளவுக்கே பாதிப்படைந்தன, ஏனெனில் அவர்கள் பொதுவாக பாதுகாப்பான ரத்த உறவு சார்ந்த நபர்களிடையே வாழ்ந்து வந்தனர் அல்லது பணிபுரிந்து வந்தனர். அவர்களுடைய கூட்டுத்தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் ஓரளவுக்கு சுதந்திரம் அவர்களுக்கு அவசியமாகிறது. இந்த பெண்கள் அருகிலுள்ள நகரத்துக்கு சென்றால், அதே நகர்புற கட்டுப்பாடுகள் அவர்களுக்கும் பொருந்தக்கூடும்.[1]
வேலைவாய்ப்பு [தொகு]
ஆண்களும் பெண்களும் இணைந்து பணிபுரியும் பணிச்சூழலை அனுமதிக்கும் முந்தைய அரசாங்கங்களின் சட்டங்களை தாலிபன் ஏற்றுக் கொள்ள மறுத்தது. அவை புர்தா மற்றும் ஷரியா சட்டம் ஆகியவற்றை மீறுவதாகும் என்று தாலிபன் கூறியது.[3] 1996 -ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி, எல்லா பெண்களும் வேலைகளில் இருந்து தடை செய்யப்பட வேண்டும் என்று தாலிபன் ஆணையிட்டது.[14] அரசாங்கப் பணியாளர்களில் 25 சதவீதம் பேர் பெண்கள் என்றும், மற்றத் துறைகளில் ஏற்படும் இழப்புகளையும் கணக்கில் எடுத்தால், பல்லாயிரக்கணக்கான பெண்கள் வேலையிழப்பைச் சந்தித்து பாதிப்படைகிறார்கள் என்றும் கணக்கிடப்பட்டது.[8] இது தனிப்பட்ட வீட்டு வருவாயில் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கியது, குறிப்பாக, வலுவற்ற அல்லது விதவையின் பொறுப்பில் உள்ள குடும்பங்கள் மிக அதிக பாதிப்பை எதிர்கொண்டன. மேலும் இம்மாதிரியான வீடுகள் ஆஃப்கானிஸ்தானில் மிகவும் சாதாரணமாக காணப்படுபவையாகும்.
பெண்களைப் பணியாளர்களாக கொண்ட பணி வழங்குபவர்களுக்கு அடுத்தக்கட்ட இழப்பு ஏற்பட்டது. அனைத்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களும் பெண்களாக இருந்ததால், காபூல் முழுவதும், குழந்தைகளுக்கான ஆரம்பக்கல்வி நிறுத்தப்பட்டது. 1996ஆம் ஆண்டில் காபூல் நகரத்தை தாலிபன்கள் கைப்பற்றியவுடன், கல்வி கற்ற குடும்பத்தினர் அனைவருமே அந்நகரத்திலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.[2][15] ஆஃப்கானிஸ்தானில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர், தாயும் சேயுமாக பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர், ஏனெனில் பெரும்பாலான குடும்பங்களின் முக்கிய வருவாய் இழக்கப்பட்டதால், அவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டனர்.
தாலிபன்களின் தலைவர், முஹமத் ஓமர், வேலையிழந்த பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாதம் 5 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு தொடர்ந்து ஊதியம் பெறுவார்கள் என்று வாக்களித்தார். ஆனாலும் இது குறுகிய கால சலுகை மட்டுமே.[16] ஒரு தாலிபன் பிரதிநிதி கூறியதாவது: "வேலை செய்யாமல், வீட்டில் இருக்கும் 30,000 பெண்களுக்கு மாதாந்திர ஊதியங்கள் வழங்குவதன் மூலம், தாலிபன்கள் பெண்களின் உரிமையை கட்டுப்படுத்துகிறார்கள் என்று குற்றஞ்சொல்லுபவர்களின் மூக்கை உடைத்துள்ளோம். இந்த நபர்கள் அடிப்படையற்ற காரணங்களை வைத்து காபூலில் உள்ள பெண்களை தாலிபன்களுக்கு எதிராக திருப்புகின்றனர்." என்று குறிப்பிட்டார்.[3]
பெண்கள் பணிபுரியக் கூடாது என்பதை உறுதி செய்ய, தாலிபன் விரிவான குடும்பம் அல்லது ஜகாத் எனபடும் கருணை முறையை வலியுறுத்தினார்கள். ஆனாலும், பல ஆண்டுகால போராட்டத்தின் காரணமாக குடும்பங்கள் தங்களைத் தாங்களே சார்ந்திருத்தல் சிக்கலாக இருந்தது.[2] சட்டப்பூர்வ தகுதி ஆண்களை மட்டுமே சார்ந்திருந்தது, அதாவது உணவு தேவை ஆண் உறவினரால் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒரு பெண் ஆண் உறவினர்கள் யாரும் இல்லாமல் இருப்பதற்கான சாத்தியங்கள், வெளியுறவு அமைச்சராக இருந்த முல்லா கௌஸ் என்பவரால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. ஆஃப்கன் மக்களில் மிக குறைவான சதவீதத்தில் இருந்த இம்மாதிரியான பெண்கள் பெற்ற சர்வதேச கவனமும், அக்கறையும் அவரை மிகவும் ஆச்சரியப்படுத்தின.[8] கிராமப்புற பெண்களுக்கு, சிறிய அளவிலான மாற்றங்களே இருந்தன, ஏனெனில் அவர்களின் வாழ்க்கையானது, சம்பளமில்லாத வீட்டு, வேளாண்மை மற்றும் உற்பத்தி பணிகளைச் சார்ந்திருந்தது.
பெண் உடல்நல பணியாளர்கள், இந்த வேலைவாய்ப்பு தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டார்கள், ஆனாலும் அவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலும் சூழலிலும் மட்டுமே பணிபுரிந்தனர். பிரிக்கப்பட்ட பேருந்து அமைப்பு மற்றும் பரவலாக பெண்களுக்கு எதிராக நடந்து வந்த வன்முறை போன்றவை, சில பெண்களை வேறு வழியின்றி வேலையை விடுமாறு தூண்டியது. மீதமுள்ள பெண்கள், பலர் அரசாங்கத்துக்கு பயந்தும், பணிபுரியும் வாரத்தில் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தும், தாலிபன் படைகளின் கண்களில் படாமல் தவிர்த்து வந்தனர்.[2] கைனாகாலாஜிக்கல், கருத்தடை மற்றும் செவிலியர் பணிகள் தொடர்ந்து நடைபெற இந்த பெண்கள் அதிமுக்கியமானவர்கள் ஆவர். ரப்பானி ஆட்சியின்போது, காபூலின் முல்லலாய் மருத்துவமனையில், 200 பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர், ஆனால் தாலிபன்களுக்கு கீழ் அவர்கள் வெறும் 50 பேராக குறைந்தனர். 2002 -ஆம் ஆண்டில் தாலிபன்களின் வீழ்ச்சிக்கு பின்னர் ஆஃப்கானிஸ்தானில் பணிபுரிய வந்த அரசுசாரா நிறுவனங்கள், பெண் உடல்நலப் பணியாளர்களின் பற்றாக்குறை அவர்களுடைய பணிக்கு மிகப்பெரும் தடையாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர்.[17]
பணித் தடையில் இருந்த மற்றொரு விலக்கத்தின் காரணமாக, மனிதவள பணியாளர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் சேவையில் ஈடுபட அனுமதித்தது. தாலிபன்களின் பிரித்தல் வரைமுறைகளின்படி, ஆபத்தான பெண்களை அணுகுவது அல்லது வெளிப்படையான ஆய்வை மேற்கொள்வது போன்றவற்றுக்கு அனுமதி பெற்றவர்கள் மதிப்பிட முடியாத அளவு பெறுமதி மிக்கவர்கள். இந்த விதி விலக்கும் முழு தாலிபன் இயக்கத்தால் வழங்கப்படவில்லை, இதனால், பெண்கள் பங்கேற்பும் பங்கேற்பின்மையும் ஒவ்வொரு நிகழ்விலும் வேறுபட்டது.[2] குறிப்பாக, ஹிராத் நகரம் தாலிபன்களின் பெண் அடக்குமுறைகளினால் அதிகமாக பாதிக்கப்பட்டது, ஏனெனில் இந்நகரமே 1995 ஆம் ஆண்டுக்கு முன்பு, ஆஃப்கானிஸ்தானில் மிகவும் முற்போக்கான, காஸ்மோபாலிடன் பகுதிகளில் ஒன்றாக இது இருந்து வந்தது. பெண்கள் மிகவும் குறைவான வரம்புடைய பணிகளில் பணிபுரிய மட்டுமே அனுமதிக்கப்பட்டனர், ஆனால் இதுவும் தாலிபன் அதிகாரிகளால் தடுக்கப்பட்டது. ஹிராத் நகரின் புதிய கவர்னர் முல்லா ரசாக், அவருடைய அலுவலகத்தைத் தாண்டிக்கூட பெண்கள் நடக்கக்கூடாது என்று ஆணைகள் பிறப்பித்தார். ஏனெனில் அவர்களுடைய கவனத்தை சிதறடிக்கும் இயல்பை அவர் வெறுத்தாராம்.[18]
கல்வி [தொகு]
ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வி அளிக்கும் இஸ்லாமியக் கடமையைத் தாங்கள் கடைபிடிப்பதாக தாலிபன்கள் கூறினார்கள். ஆனாலும், 8 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கல்வி கற்பதைத் தடை செய்யும் ஒரு ஆணையும் தாலிபன்களால் பிறப்பிக்கப்பட்டது. மவுலவி கலாமாதின் என்பவர், இது ஒரு தற்காலிக நிறுத்தம் மட்டுமே, வெவ்வேறு பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளைத் தடுக்குமாறு வசதிகளும், சாலை பாதுகாப்பும் ஏற்படுத்தப்படும் வரை மட்டுமே இது பின்பற்றப்படும் என்று கூறினார். புதிய கல்வித்திட்டத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதற்கு, உலிமா குழுவை அழைப்பதற்கு முன்பு தாலிபன் ஆஃப்கானிஸ்தான் முழுமையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பியது. அது இஸ்லாமிய முறையாக இருந்தாலும் கூட, முஜாஹதீன் முறை கல்வியை மாற்ற விரும்பியது.[2]
இந்த நடைமுறைகளைக் கொண்டு வர சர்வதேச அளவில் உதவி வரும் அமைப்புகளிடம் தாலிபன் அவகாசம் கேட்டது மற்றும் பெண்ணுரிமையை உடனடியாகக் கொண்டு வர வலியுறுத்தி ஆதரவு அளித்த அந்த அமைப்புகளை விமர்சித்தது.[1] தாலிபன் அவர்களுடைய செயல்களைப் பெருமையாக நம்பினார்கள், ஒரு தாலிபன் பிரதிநிதி, ஈரானிய பேட்டி ஒன்றில், "வேறெந்த நாடுகளும் பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகளை விடவும் அதிகமான உரிமைகளை நாங்கள் அளித்துள்ளோம். கடவுளும் அவருடைய தூதரும் கூறிய உரிமைகளை நாங்கள் பெண்களுக்கு அளித்துள்ளோம், அதாவது பெண்கள் வீட்டிலேயே தங்கி, மத ரீதியான வழிகாட்டுதல்களை ஹிஜாப் முறையில் [தனிப்பட்ட முறையில்] பெற அனுமதித்து உள்ளோம்" என்று கூறினார்.[2]
பெண்கள் பணிசெய்வதற்கான தடையானது, கல்வி முறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. காபூலில் மட்டும், இந்த தடையால் 106,256 பெண்கள், 148,223 ஆண்கள் மற்றும் 8,000 பல்கலைக்கழக பெண் இளங்கலை பட்டதாரிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். 7,793 பெண் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர், இந்த நடவடிக்கையால் கல்வி வழங்கும் முறை அடியோடு பாதிப்படைந்தது, திடீரென ஏற்பட்ட கல்வி வழங்குவோர் பற்றாக்குறையால் 63 பள்ளிகள் மூடப்பட்டன.[8] சில பெண்கள் உள்ளூர் குழந்தைகளுக்காக மறைவிட பள்ளிகளை அவர்களின் வீடுகளில் நடத்தினர், அல்லது தையல் பள்ளிகள் போன்ற பெயர்களில் மறைவாக பிற பெண்களுக்கு கல்வி கற்பித்தனர். இதற்கான எடுத்துக்காட்டு கோல்டன் நீடில் சூயிங்க் ஸ்கூல் போன்றவையாகும். இதில் பயின்றவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி அளித்தவர்கள் ஆகிய அனைவரும், தாலிபன்களால் கண்டுபிடிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை அறிந்தே இருந்தனர், ஆனால் கடுமையான தாலிபன் ஆட்சியில் இருந்த அவர்களுக்கு இம்மாதிரியான செயல்கள், ஒரு வகை சுய நிர்ணய உரிமையையும், நம்பிக்கையையும் தந்தது.[13]
உடல்நலம் [தொகு]
தாலிபன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதிக்கப்பட்டனர், ஆனால் விரைவிலேயே, எந்தவொரு ஆண் மருத்துவரும் மருத்துவ ஆலோசனையின் பெயரில் பெண் உடலைத் தொடக்கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்டது.[13] குறைவான பெண் உடல்நல பணியாளர்கள் இருந்ததால், கவனிப்பைப் பெற பெண்கள் நீண்ட தொலைவுகள் பயணம் செய்ய வேண்டியிருந்தது, மேலும் குழந்தை பிறப்புக்கு முன்பான சிகிச்சைகள் பெறுவதற்கான மருத்துவமனைகள் குறைந்தன.[2]
காபூலில் பல பெண்கள், அங்கீகாரமற்ற மருத்துவமனைகளை அவர்களின் வீடுகளில் நடத்தத் தொடங்கினர், ஆனாலும், மருத்துவப் பொருட்களைப் பெறுவது கடினமாகவும் அவற்றின் செயல்பாடுகள் குறைவாகவும் இருந்தன. சிகிச்சையின்மையின் காரணமாக பல பெண்கள் முன்கூட்டியே இறப்பது அல்லது நோய் பாதிப்படைவது போன்றவை நிகழ்ந்தன. மஹரம் ஆதரவு மற்றும் போதுமான வழிகளைக் கொண்ட குடும்பங்கள், பாகிஸ்தானில் சிகிச்சையைப் பெற அனுமதிக்கப்பட்டனர்.[13]
1996 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், பெண்கள் பாரம்பரியமான ஹம்மாம் எனப்படும் பொதுக்குளியல்களை அணுகுவதிலிருந்து தடுக்கப்பட்டனர், ஏனெனில் சமூகமயமாதல் இஸ்லாமுக்கு எதிரானதாக கூறப்பட்டது. இந்த எளிய சுடு-நீர் மரபு பெண்களால் விரும்பப்பட்டது மற்றும் ஒருசில இடங்களில் மட்டுமே நீரோட்டத்தைக் கொண்ட இந்நாட்டில் இது மிகவும் முக்கியமான வசதியாகும். சுகாதாரம் மற்றும் உடல்நலம் ஆகியவை மறுக்கப்பட்ட காரணத்தால், சொறி மற்றும் பிறப்புறுப்பு சார்ந்த நோய்த்தொற்றுகள் பெண்களிடையே அதிகரித்தது என்று ஐநா கணித்தது.[8] நஸ்ரீன் க்ரோஸ் என்ற ஆஃப்கன்-அமெரிக்க எழுத்தாளர், பல ஆஃப்கன் பெண்கள் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் இறைவனிடம் பிராத்தனை செய்ய முடியாமல் இருக்கின்றனர், ஏனெனில் "பெண்கள் மாதவிடாய்க்கு பின்பு குளிக்காமல் பிராத்தனை செய்யக்கூடாது" என்று இஸ்லாம் கூறுகிறது என்றார்.[19] 1998 ஜூன் மாதத்தில், தாலிபன் பெண்கள் பொது மருத்துவமனைகளுக்கு வரக்கூடாது என்று தடைசெய்தது, அதற்கு முன்பு அவர்கள் பொது மருத்துவமனைகளின் பெண்கள் வார்டுகளுக்கு செல்லலாம் என்றிருந்தது. இதனால் காபூலில் ஒரே ஒரு மருத்துவமனையில் மட்டுமே பெண்கள் சிகிச்சை பெற முடியும் என்றானது.[15]
கட்டாய வீட்டுக்காவல் [தொகு]
பெண்கள் கட்டாயமாக வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டதால் அவர்கள் மன அழுத்தம், பிரிவு மற்றும் மனச்சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர், இதனால் குடும்ப நற்சூழலும் மோசமான நிலையடைந்தது. 160 பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், 97 சதவீதம் பெண்கள் தீவிரமான மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் 71 சதவீதம் பெண்கள் அவர்களின் உடல்நலம் குறைவடைந்து வருவதாகவும் கண்டறியப்பட்டனர்.[8] காபூலில் வசிக்கும் லடிஃபா என்ற எழுத்தாளர்:[13]
இந்த குடியிருப்பு ஒரு சிறை அல்லது மருத்துவமனையைப் போல இருக்கிறது. எங்கள் அனைவரையும் மவுனத்தின் பாரம் அழுத்துகிறது. நாங்கள் யாருமே பெரிதாக எந்த காரியத்தையும் செய்யாததால், எங்களுக்கு இடையே பேசிக்கொள்ளவும் எதுவும் இருப்பதில்லை. எங்களுடைய உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள இயலாதவர்களாக ஆகிவிட்டோம், ஒருவரையொருவர் பயத்தினாலும் அவநம்பிக்கையாலும் மூடிக்கொள்கிறோம். அனைவருமே ஒரே கருங்குழியில் விழுந்திருப்பதால், எங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு கூட ஏதுமிருப்பதில்லை, எங்கள் பார்வையும் கூட தெளிவற்றதாகி விட்டது.
நாட்டிலிருந்த அழகு நிலையங்களை தாலிபன் மூடி விட்டது.[20][21][22] நகப்பூச்சு போன்ற காஸ்மெடிக் பொருட்களும் ஒப்பனையும் தடை செய்யப்பட்டனச்.[23]
பெண்களின் கலாச்சார நடைமுறைகளில் தாலிபன்களின் கட்டுப்பாடுகள் பல பகுதிகளில் இருந்தது. "பெண்கள்" என்ற சொல்லைக் கொண்ட இடங்களின் பெயர்கள் அந்த சொல் இல்லாமல் மாற்றப்பட்டன. ஒரு புதிய நபர் பெண்ணின் குரலைக் கேட்பது முறையற்றதாக கருதப்பட்டதால் பெண்கள் சத்தமாக சிரிப்பது தடை செய்யப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் பெண்கள் பங்கேற்பதோ அல்லது ஒரு ஸ்போர்ட்ஸ் கிளப்பில் பெண்கள் நுழைவதோ தடை செய்யப்பட்டது.[24] இம்மாதிரியான சிக்கல்களை, தி ரெவல்யூஷனரி அசோசியேஷன் ஆஃப் தி வுமன் ஆஃப் ஆஃப்கானிஸ்தான் (RAWA) என்ற அமைப்பு கையாண்டது. இந்த அமைப்பை மீனா கேஷ்வர் கமல் என்ற பெண்மணி தொடங்கினார். இந்த பெண்மணி செய்த பல பணிகளுடன், பெண்களின் பத்திரிகை என்ற இரு மொழி இதழையும் 1981 ஆம் ஆண்டில் உருவாக்கினார். 1987 -ஆம் ஆண்டு தன்னுடைய 30 வயதில் படுகொலை செய்யப்பட்டார் ஆனாலும் ஆஃப்கன் பெண்களிடையே ஒரு கதாநாயகியாக இருந்து வருகிறார்.
தண்டனைகள் [தொகு]
தண்டனைகள் பெரும்பாலும் பொது இடங்களில் வைத்தே தரப்பட்டன. ஒரு முறையான பார்வையாளர் கூட்டத்துடன் விளையாட்டு அரங்கங்களில் அல்லது நகர மையங்களில் அல்லது தன்னியல்பான தெரு அடி உதையும் இதில் அடங்கும். மிக கொடூரமான தண்டனைகளுக்கு பயந்தே குடிமக்கள் வாழ்ந்து வந்தனர் ஏனெனில் கருணை என்பது அவர்களுக்கு கிடைக்கவே இல்லை. சட்டங்களை மீறும் பெண்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.[8] எடுத்துக்காட்டுகள்:
- அக்டோபர் 1996ல் நகப்பூச்சு பூசியிருந்ததால் ஒரு பெண்ணின் கட்டைவிரலின் நுனி கத்தரிக்கப்பட்டது.[8]
- டிசம்பர் 1996ல் ரேடியோ ஷாரியா, 225 காபூல் பெண்கள் ஷாரியா ஆடை நெறிமுறையைக் கடைபிடிக்காத காரணத்தால் சிறை பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர் என்று அறிவித்தது. அவர்கள் செய்த சிறிய குற்றத்திற்கான தண்டனையாக, அவர்கள் அவர்களுடைய கால்களிலும், பின்புறத்திலும் பிரம்படி பெற்றார்கள்.[25]
- மே 1997 -இல் அவசர கால உணவூட்ட முறையைப் பற்றிய ஆராய்ச்சியை, உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் நடத்த வந்த ஐந்து கேர் (CARE) இன்டர்நேஷனல் பணியாளர்கள், மதவாத காவலர்களால் அவர்களுடைய வாகனங்களிலிருந்து இறங்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அந்த காவலர்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கும் ஒலிப்பெருக்கிகளில் அந்த பெண்களை அவமானப்படுத்தி, பின்னர் உலோகம் மற்றும் தோலால் ஆன 1.5 மீட்டர் (சுமார் 5 அடி) நீளமுள்ள சாட்டைகளால் அவர்களைத் தாக்கினார்கள்.[1]
- 1999 -ஆம் ஆண்டில் ஏழு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், தன்னுடைய மோசமான கணவனை கொலை செய்த குற்றத்துக்காக காபூலில் உள்ள காஸி விளையாட்டு அரங்கத்தில், 30,000 பார்வையாளர்கள் முன்னிலையில் மரண தண்டனைப் பெற்றார் (வலதுபுறம் காணவும்). அந்த பெண் மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்து, மிக மோசமான சித்திரவதைகளுக்கு ஆளானார். ஆனாலும் தன்னுடையை மகளைக் (உண்மையான குற்றவாளி) காப்பாற்றும் நோக்கத்துக்காக, வாயைத் திறக்காமலே இறந்து போனாள்.[26]
- ஒரு பெண் அதிகாரமற்ற பள்ளியைத் தன்னுடைய குடியிருப்பில் நடத்தியதைக் கண்டுபிடித்த தாலிபன் குழந்தைகளை அடித்து, அந்த பெண்ணை படிகட்டுகளில் தூக்கி எறிந்தது. இதனால் அந்த பெண்ணின் கால் உடைந்தது அதன் பின்னர் அவளை சிறையிலிட்டனர். தாலிபனுக்கு மற்றும் அதன் சட்டங்களுக்கு கீழ்ப்பட்டு நடப்பேன் என்ற உறுதிமொழியில் கையெழுத்திடாவிட்டால், அவளுடைய குடும்பம் தெருவில் கல்லெறிந்து கொல்லப்படும் என்று மிரட்டப்பட்டாள்.[13]
தாலிபன்களின் அங்கீகாரம் பெறப்படாமலே, தனிப்பட்ட காவல் துறையினாராலேயே, பல தண்டனைகள் வழங்கப்பட்டன, ஏனெனில் பெண்களை தெருவில் வைத்து தண்டிப்பது தாலிபனின் சட்டத்துக்கு எதிரானது. இன்னும் சரியாக சொல்வதானால், பல நிகழ்வுகளில் பெண்கள் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வதற்கு ஆண்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டன: ஆணாதிக்க சமூகம் மற்றும் பெண்களைக் கட்டுப்படுத்துவது ஆண்களின் கடமை என்று கருதப்பட்டதன் விளைவாக இவ்வாறு செய்யப்பட்டது. 1997 -ஆம் ஆண்டில் மவுலவி கலாமாதின் கூறியதாவது. "நாங்கள் பெண்களை நேரடியாக தண்டிக்க முடியாத காரணத்தால் அவர்களுக்கு அழுத்தம் தரும் விதமாக, டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் கடை உரிமையாளர்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறோம்" என்கிறார்.[1] ஆண்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளுக்கான எடுத்துக்காட்டுகளாவன:
- ஒரு டாக்ஸி ஓட்டுநர், முகத்தை மறைக்காத அல்லது ஒரு மஹரமுடன் வராத பெண்ணை வண்டியில் ஏற்றினால், ஓட்டுநருக்கு சிறைவாசமும், அந்த பெண்ணின் கணவருக்கு தண்டனையும் கிடைக்கும்.
- ஒரு பெண் ஆற்றில் துணி துவைக்கும்போது பிடிப்பட்டால், அவள் வீடுவரை இஸ்லாமிய அதிகாரிகளால் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு, அவளின் கணவர்/மஹரம் கடுமையாக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.
- பெண்களுக்கு அளவுகளை எடுக்கும் தையல்காரர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும்.[1]
உலகின் எதிர்வினை [தொகு]
சர்வதேச அமைப்புகளால் தரப்பட்ட எதிர்ப்புகளை, தாலிபன் அரசாங்கம் அசட்டை செய்தது. அவர்கள் இஸ்லாமிய சட்டத்தையே நடைமுறைப்படுத்த முனைந்தனர் மற்றும் ஐநாவின் சட்டத்திட்டங்கள் அல்லது மனித உரிமை சட்டங்கள், நெறிமுறைகள் போன்றவற்றை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் கருவிகளாகவே கருதினார்கள்.[1] 1995 -ஆம் ஆண்டில் ஹிராத் நகரைத் தாலிபன்கள் கைப்பற்றியவுடன், ஐநா சபையானது, பாலினம் சார்ந்த கொள்கைகள் 'மிதமான' அளவிற்கு மாற்றப்படும் என்று எதிர்பார்த்தனர். ஏனெனில் "உதவி வழங்கும் அமைப்புகளுடன் தொடர்புகளைக் கொண்டதால், ஒரு பிரபலமான போராட்டக் குழுவிலிருந்து பொறுப்புள்ள அரசாங்கமாக தாலிபன்கள் முதிர்ச்சியடைந்துள்ளார்கள் என்று ஐநா கருதியது".[8] ஆனால் தாலிபன் சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிய மறுத்தது மற்றும் உதவிகள் நிறுத்தப்படுவதைப் பற்றி கவலைப்படவில்லை.
- 1995 -ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் யுனிசெஃப் (UNICEF), தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருந்த எல்லா பகுதியிலும் செய்யப்பட்டு வந்த கல்விக்கான உதவிகளை நிறுத்தியது, ஏனெனில் அது, கல்வியில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளை கலக்கவிடாமல் தடுப்பது குழந்தைகள் உரிமைகளின் மரபை மீறுவதாகும் என்று கூறியது. 1995ஆம் ஆண்டில் நடந்த பீஜிங் பெண்கள் மாநாட்டுக்கு பின்பு, இந்த நடவடிக்கையானது, பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் யுனிசெஃப்பின் பங்களிப்பை இன்னும் உறுதிப்படுத்தியது.[8]
- 1996ஆம் ஆண்டில் சேவ் தி சில்ரன் (Save The Children -UK) என்ற அமைப்பும் ஆதரவை விலக்கிக் கொண்டது. இதற்கு, குழந்தைகளை கவனித்து கொள்வதில் முதன்மையானவர்களான பெண்களுடன் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று காரணம் கூறியது.[8]
- ஐநாவின் பொது செயலர் பௌட்ரோஸ் பௌட்ரோஸ் காலி, ஆஃப்கனின் பெண்களின் நிலைக் குறித்து கவலை தெரிவித்தார்.[27]
- 1999ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்ப்ரைட் வெளிப்படையாக கூறியதாவது, "நாம் ஆஃப்கானிஸ்தானின் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுகிறோம், அவர்களின் பாதிப்பு கொடிய குற்றம் மற்றும் இதை தடுக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது" என்றார். இது தாலிபன்கள் பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க மறுத்ததற்கு பின்னர் கூறப்பட்டது.[28]
ஜனவரி 2006 இல், ஆஃப்கானிஸ்தானைப் பற்றி லண்டனில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், பெண்கள் மீதான அணுகுமுறை தொடர்பான வரையறைகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேச உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையில், பின்வரும் நோக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது: "பாலினம்: 1389 -இன் இறுதிக்குள் (மார்ச் 20, 2011): ஆஃப்கானிஸ்தானின் பெண்களுக்கான தேசிய செயல் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்; மேலும், ஆஃப்கானிஸ்தானின் எம்டிஜிகளுடன் இணைந்து, எல்லா ஆஃப்கன் நிர்வாக அமைப்புகளிலும், பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கப்படும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் மற்றும் பணிக்கமர்த்தப்பட்டவர்களும் அடங்குவர். மக்கள் சேவையானது வலுப்படுத்தப்படும்."[29] ஆனாலும், 2008 ஆம் ஆண்டு ஜூன் 11 -இல் வெளியிடப்பட்ட அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கையில், "ஆஃப்கானிஸ்தானைப் பொறுத்தவரை இனிமேலும், "வெற்று வாக்குறுதிகள் எதுவும் வழங்கப்படக்கூடாது" என்று அறிவித்தது. பெண்கள் மீதான அணுகுமுறை இன்னமும் நிறைவேற்றப்படாத இலக்காகவே இருந்துவருவதைச் சுட்டிக்காட்டியது.[30]
இதையும் பாருங்கள் [தொகு]
- சவூதி அரேபியாவில் பெண்களின் உரிமைகள்
- கோல்டன் நீடில் சூயிங்க் ஸ்கூல் (Golden Needle Sewing School)
- ஹிஜாப்
- ஆயிரம் அழகான சூரியன்கள் (A Thousand Splendid Suns)
- ஆஃப்கானிஸ்தானில் விபச்சாரம்
- ஆஃப்கானிஸ்தான் பெண்களின் மறுமலர்ச்சி அமைப்பு (Revolutionary Association of the Women of Afghanistan)
குறிப்புகள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 நான்சி ஹட்ச் டுப்ரீ. 'தாலிபன்களுக்கு கீழ் ஆஃப்கன் பெண்கள்' வில்லியம் மெலேவில் (2001) ISBN 0-7864-1090-6. அடிப்படைவாதம் மீண்டும் வந்து விட்டதா? ஆஃப்கானிஸ்தானும் தாலிபன்களும் . லண்டன்: ஹர்ஸ்ட் அண்ட் கம்பனி, ISBN 0-8147-5586-0 ப. 145-166.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 மார்ஸ்டன், பீட்டர். (1998). தாலிபன்: போர், மதம் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் புதிய ஆட்சி . லண்டன்: ஜெட் புக்ஸ் லிட்., ISBN 1-85649-522-1 pp88-101.
- ↑ 3.0 3.1 3.2 எம்.ஜே கோஹரி (2000). தாலிபன்: ஆட்சியைப் பெற்ற வழி . ஆக்ஸ்ஃபோர்டு: ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி ப்ரஸ், ISBN 0-19-579560-1 pp. 108-110.
- ↑ லாம்ப், கிறிஸ்டினா. "தன்னுடைய கவிதைக்காக கொல்லப்பட்ட கவிதாயினி", தி சண்டே டைம்ஸ் , நவம்பர் 13, 2005.
- ↑ சைனோவிட்ஸ், ரான். "ஆஃப்கானிஸ்தான்: ஆசிரியர், 'ஹிராத்தின் தையல் பள்ளி"களுக்கு நல்ல முடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார்", ரேடியோ ஃப்ரீ யூரோப் , மார்ச் 31, 2004.
- ↑ "ஆஃப்கன் தலைநகரில் இருந்த 100 பெண்கள் பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டன", தி நியூயார்க் டைம்ஸ் , ஜூன் 17, 1998.
- ↑ போரின் மையத்தில் ஒரு பெண் வைட் ஆங்கிள், 12/11/07 -இல் பெறப்பட்டது
- ↑ 8.00 8.01 8.02 8.03 8.04 8.05 8.06 8.07 8.08 8.09 8.10 8.11 மைக்கேல் கிரஃபின் (2001). சூறைக்காற்றின் அறுவடை: ஆஃப்கானிஸ்தானில் தாலிபThe Taliban movement in Afghanistan . லண்டன்: ப்ளூட்டோ ப்ரஸ், ப.6-11/159-165.
- ↑ 9.0 9.1 ஆஃப்கானிஸ்தானில் தாலிபன்களால் விதிக்கப்பட்ட தடைகளில் சில
- ↑ 10.0 10.1 தாலிபன்கள் பெண்கள் மீது விதித்த தடைகள்Restrictions Placed on Women by the Taliban
- ↑ புட்சர் & போல்ட், டேவிட் லாய்ன், ப. 235
- ↑ {10}கொடூரத்தின் கதைகளை ஆஃப்கன் பெண்கள் சொல்கிறார்கள்
- ↑ 13.0 13.1 13.2 13.3 13.4 13.5 லட்டிஃபா என்னுடைய மறைக்கப்பட்ட முகம்: தாலிபன்களுக்கு கீழான வளர்ச்சி . UK: விராகோ ப்ரஸ் ப.29-107.
- ↑ UNHCR - ஜனவர் 1995 முதல் பிப்ரவரி 1997 வரையிலான நிகழ்வுகள் காலவரிசையின்படி
- ↑ 15.0 15.1 ரஷீத் தாலிபன் (2000), ப.106
- ↑ எல்லா பெண் சிவில் ஊழியர்களையும் ஆசிரியர்களையும் தாலிபன் பணிநீக்கம் செய்தது
- ↑ UNFPA: செய்திகள்
- ↑ புட்சர் & போல்ட், டேவிட் லோய்ன், ப.243
- ↑ ஐநாவில் அங்கீகாரம் கிடைக்க ஆஃப்கன் பெண்களின் கோரிக்கை
- ↑ வில்லியம்ஸ், கரோல் ஜே. காபூலில் தாலிபன்களுக்கு பின்பு அழகு நிலையங்கள் அழைக்கின்றன, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், டிசம்பர் 15, 2001.
- ↑ கிங்ஸ்டன், ஹைதி. காபூலின் அழகு பள்ளிகளின் வெளியேற்றம், ஜூன் 17, 2007.
- ↑ காபூல் அழகு பள்ளி - ஆஃப்கானிஸ்தான், You Tube , அக்டோபர் 21, 2008.
- ↑ PBS, தாலிபன் பெண்கள், மார்ச் 6 1998
- ↑ www.rawa.org
- ↑ ஆஃப்கானிஸ்தானில் பெண்கள்: தொடரும் உரிமை மீறல்கள் அம்னெஸ்டி இன்டர்நேஷனலிலிருந்து 12/11/07 -இல் பெறப்பட்டது.
- ↑ ஜர்மினாவின் கதை
- ↑ யுனைடெட் நேஷன்ஸ் டெய்லி ஹைலைட்ஸ் 96-10-07
- ↑ உலகம்: தெற்காசியா, ஆல்ப்ரைட் பெண்கள் தொடர்பான விஷயங்களுக்காக ஆஃப்கனை எச்சரித்துள்ளார் பிபிசி, 12/11/07 -இல் பெறப்பட்டது.
- ↑ http://www.ands.gov.af/ands/jcmb/src/jcmb5/3C.%20Table%203%20Executive%20Summary%20of%20all%20benchmarks%20-%20Eng.pdf
- ↑ http://www.amnesty.org/en/for-media/press-releases/afghanistan-no-more-empty-promises-paris-20080611
குறிப்புதவிகள் [தொகு]
- Bureau of Democracy, Human Rights, and Labor (1998-01-30). "Afghanistan Country Report on Human Rights Practices for 1997". US Department of State. http://www.afghanistannewscenter.com/news/1998/february/feb3c1998.htm. Retrieved 2007-03-15.
- Islam for Today (1999). "Restrictions Placed on Women by the Taliban". http://www.islamfortoday.com/afghanistanwomen4.htm. Retrieved 2007-03-27.
- Allan Nacheman (2001-05-03). "Afghan women tell tales of brutality, terror at hands of Taliban". AFP. http://www.geocities.com/CapitolHill/Parliament/1358/talibans-graphic-stories.html. Retrieved 2007-03-27.
- The UN Refugee Agency (2007-04-03). "Chronology of Events January 1995 - February 1997". http://www.unhcr.org/home/RSDCOI/3ae6a84d0.html. Retrieved 2004-04-03.
- UNFPA (2002). "Afghan NGOs Provide Maternal Care Despite Shortage of Skilled Staff". http://www.unfpa.org/news/news.cfm?ID=119&Language=1. Retrieved 2007-04-01.
- Amnesty International (1997-06-01). "Women in Afghanistan: The violations continue". http://web.amnesty.org/library/Index/ENGASA110051997?open&of=ENG-398. Retrieved 2007-03-28.
- Revolutionary Association of the Women of Afghanistan (RAWA) (1997-03-30). "Afghan woman stoned to death for adultery". http://www.rawa.org/stoned.htm. Retrieved 2007-04-01.
- Anton Antonowicz (2002-06-20). "ZARMINA'S STORY". http://www.rawa.org/zarmeena2.htm. Retrieved 2007-04-01.
- CNN-Showbuzz (1999-03-29). "Lenos leading effort to help Afghan women". http://www.cnn.com/SHOWBIZ/News/9903/29/showbuzz/index.html?eref=sitesearch. Retrieved 2007-03-26.dd
- BBC News (2005-05-08). "Jolie urges aid for Afghan plight". BBC. http://news.bbc.co.uk/1/hi/entertainment/4527385.stm. Retrieved 2007-03-26.
- Hillary Clinton (2001-11-04). "New Hope For Afghanistan's Women". TIME. http://www.time.com/time/nation/article/0,8599,185643,00.html. Retrieved 2007-04-01.
- UNICEF (2003). "At a glance: Afghanistan". http://www.unicef.org/infobycountry/afghanistan_statistics.html. Retrieved 2007-04-01.
- Nasrine Gross (2007). "Afghan Women's Request for Recognition at the U.N.". http://www.chicagonetworkjp.org/gross_eng.asp. Retrieved 2007-03-27.
- Department of Public Information (1996-10-07). "UN Daily Highlights". http://www.hri.org/cgi-bin/brief?/news/world/undh/96-10-07.undh.html. Retrieved 2007-04-06.
மேலும் படிக்க [தொகு]
- ஆஃப்கன் பெண்களின் போராட்டம்
- கொடூரமான தாலிபன் தாலிபன்களின் பெண்கள் மீதான மோசமான அணுகுமுறை பற்றிய மோசமான கட்டுரை
- ஆஃப்கானிஸ்தான் பெண்களின் மறுமலர்ச்சி அமைப்பு (RAWA)
- "Student flees Taliban in 'Pakistan's Switzerland' - CNN.com". பார்த்த நாள் 2009-02-03.
- சித்தாந்தங்களின் யுத்தம்: ஒரு பெண், ஒரு பள்ளி மற்றும் தீவிரமான சிக்கலுடைய உறவு.
- சுனிதா மேத்தா (2002). ஆஃப்கன் பெண்களுக்காக பெண்கள்: மரபுகளை உடைத்து எதிர்காலத்தைக் கோருதல். . நியூயார்க்: பால்கிரேவ் மாக்மில்லன். ISBN 0-553-09673-7.
- ரோஸ்மேரி ஸ்கெய்ன் (2001). தாலிபன்களின் கீழ் ஆஃப்கன் பெண்கள். . அமெரிக்கா: மாக்ஃபார்லாண்ட் & கம்பனி, இங்க்.ISBN-0786410906
- Physicians for Human Rights (1998). "The Taliban's War on Women: A health and human rights crisis in Afghanistan" (PDF). http://physiciansforhumanrights.org/library/documents/reports/talibans-war-on-women.pdf. ISBN 1-879707-25-X
- அட்வூட், மார்க்ரெட் (1985). ஹாண்ட்மெய்ட்ஸ் டேல் பப்ளிஷர்: ஆங்கர்