தமிழ்த் திரைப்பட வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்த் திரைப்படங்கள் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மட்டுமல்லாது கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்ற ஓர் ஊடகமாகும்.

நகரும் படம்[தொகு]

19 ஆம் நூற்றாண்டு காலத்தில் லூமியேர் சகோதரர்களின் கண்டுபிடிப்பான நகரும் படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு "எட்வர்டு" என்ற ஆங்கிலேயர், சென்னையில், முதல் நகரும் படக்காட்சியை திரையிட்டுக் காட்டினார். "விக்டோரியா பப்ளிக் ஹால்" என்ற அரங்கில், "சினிமாஸ்கோப்" என்று விளம்பரப்படுத்தப்பட்டு, திரையிடப்பட்ட அக்காட்சி, தமிழ்த்திரையில் பல மாறுதல்கள் ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது. இவ்வெளியீட்டைத் தொடர்ந்து, பல நகரும் படக் காட்சிகள், சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. 1900 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, 'மவுண்ட் தெரு'வில் "வார்விக் மேஜர்" என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் 'எலெக்ட்ரிக்' திரையரங்காகும். மின் விளக்கு மூலம் ஒளிவீசும் வசதியுடன் இருந்ததால், இந்த அரங்கிற்கு அப்பெயர் வழங்கப்பட்டது.

முதல் திரையரங்கு[தொகு]

1905 இல் திருச்சி புகையிரதத்தில் வேலை பார்த்து வந்த "சுவாமிக்கண்ணு வின்சென்ட்" என்பவர், 'எடிசன் சினிமாட்டோகிராப்' என்ற, திரைப்படம் காண்பிக்கப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தார். தென்னிந்தியாவின் முதல் அரங்காக இத்திரையரங்கு விளங்கியது."சுவாமிக்கண்ணு வின்சென்ட்", பல ஊர்களுக்குச் சென்று "இயேசுவின் வாழ்க்கை" என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த, "ரயிலின் வருகை' (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள், பல ஆண்டுகளுக்குப் பின்னர், கோயம்புத்தூரில் "வெரைட்டி ஹால்" என்ற அரங்கை அமைத்து, "வள்ளி திருமணம்" போன்ற படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

நிரந்தரத் திரையரங்குகள் உருவாகாத நேரத்தில், அவரே அதற்கான உபகரணங்களோடு, தமிழகம் முழுதும் சுற்றி படங்களைத் திரையிட்டிருக்கிறார். ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும், இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக, அப்போது வெளிநாட்டில் இருந்த, படம் தயாரிக்கும் கம்பெனியிடம், ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். சினிமா மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு, தமிழகம் முழுதும் டெண்ட் திரையரங்குகள் நிறைய உருவாக்கியிருக்கிறார்.

1914 ஆம் ஆண்டு சென்னையில் "வெங்கையா" என்பவரால் கட்டப்பட்ட "கெயிட்டி" அரங்கே, இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட, முதல் திரையரங்கு (இத்திரையரங்கு இன்றளவும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது).

முதல் தென்னிந்தியத் திரைப்படம்[தொகு]

இத்திரையரங்கை அடுத்து, சில நிரந்தரத் திரையரங்குகள் கட்டப்பட்டன. 1912 ஆம் ஆண்டிற்குப் பின், மும்பையில் தயாரான, "ஹரிச்சந்திரா" போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இத்திரைபடங்கள் பெற்ற வரவேற்புகளின் காரணத்தினால், மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் ஆர். நடராஜ முதலியார், கீழ்ப்பாக்கத்தில், "இந்தியா பிலிம் கம்பெனி" என்னும் நிறுவனத்தை நிறுவி, 1916 இல், "கீசக வதம்" என்ற சலனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.

1916 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கிய மௌனப் படத் தயாரிப்பைத் தொடர்ந்து, மேலும் சில தயாரிப்பாளர்கள், படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் "ஏ.நாராயணன்". "ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்" என்ற நிறுவனத்தை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, தென்னிந்தியாவின் திரைப்படத் தொழிலுக்கு, முக்கியமான பங்கு வகிப்பவராவார். சென்னையில், நூற்றுக்கும் மேற்பட்ட சலனப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விபரண அட்டைகளுடன் தென்னிந்தியாவின் பல நகரங்களிலும் திரையிடப்பட்டன. ஆனால், நாகர்கோயிலில் தயாரான "மார்த்தாண்டவர்மன்" என்ற ஒரு படம், இன்றுவரை பாதுகாத்து வைக்கப்பட்டதாகும். திரைப்படக் காட்சிகள் நிலை கொள்ள ஆரம்பித்ததைக் கண்ட பிரித்தானிய அரசு, இந்த மக்கள் தொடர்பு சாதனத்தைத் தன் கட்டுபாட்டுக்குள் வைக்கத் தீர்மானித்தது. தொடர்ந்து இந்திய ஒளிப்பதிவு சட்டத்தின் மூலம், தணிக்கைத் துறையை 1918 ஆம் ஆண்டில் செயல்படுத்தியது. 1927 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான "தி மெட்ராஸ் பில்ம் லீக்" நிறுவப்பட்டது. 1939 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் முதல் தலைவராக எஸ். சத்தியமூர்த்தி கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேசும் படம்[தொகு]

தமிழில் பேசும்படம் தயாரிக்கும் முதல் முயற்சி, மும்பையிலுள்ள "சாகர் மூவிடோன்" என்ற நிறுவனத்தால், 1931 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. "குறத்திப் பாட்டும் டான்ஸூம்" என்ற நான்கு ரீல்கள் (அடிகள்) கொண்ட குறும்படமே, தமிழில் முதன்முதலில் வெளி வந்த பேசும் படம். அதே வருடம் "எச். எம். ரெட்டி' இயக்கத்தில் முழுநீள தமிழ்ப் படமான "காளிதாஸ்" வெளிவந்தது.

முதல் நான்கு ஆண்டுகளில், தமிழ்த் திரைப்படங்கள் மும்பையிலும், கொல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. சென்னையில், ஒலிப்பதிவு தொழில் நுட்ப வசதிகள் அற்ற அவ்வாண்டுகளில், 1934 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முதல் பேசும் பட தயாரிப்பு நிறுவனம் நிறுவப்பட்டது.ஒரே காட்சியில் இருவர் தோன்றும் துருவா (1935) திரைப்படத்தில் நவீனத் தொழில்நுட்பம் முதல் முதலாகக் கையாளப்பட்டது. அத்திரைப்படத்தில் சிவபாக்கியம், ஒரு ராணியாகவும்,கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

முதல் ஐந்து ஆண்டுகளில், தமிழ்த் திரைப்படங்கள், புராணக்கதைகளினை மையமாக வைத்து வெளிவந்தன. அதிலும், நிறுவன நாடகங்கள் மூலம் பிரபலமாகி இருந்த இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகளே. இக்காலகட்டத்தில்தான் முதல் சமத்துவக் கதையொன்று தயாரிக்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டு சமத்துவக் கதைகளை கொண்ட மூன்று படங்கள் வெளிவந்தன. கௌசல்யா என்ற திகில் படமும், இதையடுத்து, வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலான மேனகா, டம்பாச்சாரி போன்றவை திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன.பின்னர் சமத்துவத் திரைக்கதைகள் கொண்ட திரைப்படங்கள் மற்றும் சில புராணக்கதைகளும் நாடகப்படங்களாக வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

1937 இல் வெளியான சிந்தாமணி, ஒரே திரையரங்கில், ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ்ப்படம், என்ற புதிய சாதனை படைத்தது. 1939 ஆம் ஆண்டு வாஹினி, ஜெமினி நிறுவனங்கள் சென்னையில் அமைக்கப்பட்டன. தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்,தணிக்கை வாரியம் காவல்துறை ஆணையாளர்களினால் செயல்பட்டது. 1918 ஆம் ஆண்டு ஆரம்பித்த தணிக்கை, சுதந்திரப் போராட்டத்திற்கு வலுவூட்டிய, ஒத்துழையாமை இயக்க ஆண்டுகளில், கடுமையானதாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.சில படங்கள், தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டன. தேசியக் கருத்துக்களையோ, காந்தீய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன. ஆகவே , புராணக் கதைகளையும், மாயாஜாலக் கதைகளையுமே தயாரிப்பாளர்கள் விரும்பினர்.

சென்னை ராஜதானியில், 1937 முதல் 1939 வரை, காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்தது. அப்போது தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில்தான், தியாக பூமி,மாத்ருபூமி போன்ற நாட்டுபற்றைப் போற்றும் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தன. இத்திரைப்படங்களில், தேசியக் கருத்துகளும், அரசியல் பிரச்சாரமும் ஆங்கிலேயர்களுக்குத் தெரியாவண்ணம் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், தணிக்கை நடைமுறையில் இல்லாததால், அந்தப் படங்களுக்கு, திரைக்கு வந்தபோது பிரச்சனைகள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டாம் உலகப் போரில்,ஆங்கிலேய அரசு இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அரசுகள் விலகிய போது, ஆங்கிலேய அரசு, தியாகபூமி போன்ற படங்களுக்குத் தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது. போர்க்காலத்தில் கச்சாபிலிம் தட்டுபாடு காரணமாகத் திரைப்படங்கள் இயக்கப்படுவது வெகுவாகக் குறைந்தன.

திரைப்பட இதழ்கள்[தொகு]

திரைப்படங்களை, அதன் ஆரம்ப வருடங்களில் பத்திரிகைகள் கண்டு கொள்ளவே இல்லை. 1927இல் 'மூவி மிரர்' என்ற ஆங்கில மாத இதழை எஸ். கே. வாசகம், சென்னையில் துவக்கினார். இதுவே, தென்னிந்தியாவில் திரைப்படத்திற்கான முதல் பிரத்தியேகமான இதழ். (பின்னர் இதன் பெயர் அம்யூஸ்மென்ட் வீக்லி என்று மாற்றப்பட்டு, வார இதழாக வெளிவந்தது) முதல் தமிழ் படம் வந்த நான்கு ஆண்டுகள் கழித்து, 1935 இல் தான் முதல் தமிழ் திரைப்பட இதழ் சினிமா உலகம் பி. எஸ். செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது. பின்னர் "சில்வர் ஸ்கிரீன்" என்ற வார இதழும், ஆடல்-பாடல் இதழும் தோன்றின. பல சினிமா இதழ்களுக்கிடையே குண்டூசி, பேசும் படம் போன்ற இதழ்கள் சிறப்புற்று விளங்கின.

திரைப்படப் பாடகர்கள்[தொகு]

அன்றைய திரைப்படங்களில், பாட்டே முக்கிய அம்சமாக விளங்கியது. இரவல் குரல் கொடுக்கும் தொழில் நுட்ப வசதி அறிமுகமாகாத அந்தக் காலத்தில், பாடும் திறமை பெற்றவர்களே நடிகர்களாக நடிக்க முடிந்தது. பி. யு. சின்னப்பா, எம். கே. தியாகராஜ பாகவதர்,டி. ஆர். மகாலிங்கம் என அன்று புகழ்பெற்ற நடிகர்கள் யாவரும், வாய்ப்பாட்டில் வல்லவர்கள், கர்நாடக சங்கீதம் நன்கு பயின்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இசை வல்லுநர்களான எம். எம். தண்டபாணி தேசிகர்,ஜி. என். பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி போன்றோரும் தமிழ்த் திரையுலகில் பிரகாசித்தனர்.

இரவல் குரல் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்தபின், பின்னணி பாடகர்கள் வர, இசை வல்லுனர்கள், நடிகர்களாக ஜொலித்த காலம் முடிவுற்றது. இப்போது, பல கர்நாடக இசை வல்லுநர்கள், வெற்றிகரமான பின்னணி பாடகர்களாக இயங்குவது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட வசனம்[தொகு]

திரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த மணிமேகலை திரைப்படத்திற்கு சோமையாஜுலுவும், 1943 ஆம் ஆண்டு வந்த சிவகவி திரைப்படத்திற்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படங்களில் இலக்கியத் தமிழ்க் கொண்ட சொல்லாடல் முக்கிய இடம் பெற்று, வசனகர்த்தாக்கள் நட்சத்திர அந்தஸ்த்துப் பெற்றனர். திரைப்படத்தில், வார்த்தை ஜாலங்களின் ஆதிக்கத்தை இது மேலும் வலுப்படுத்தியது. மாறாக பிம்பங்கள் மூலம் கதையை நகர்த்தும் திறமை வளரவில்லை. இன்றளவும் பாத்திரப் பேச்சு, தமிழ் திரைப்படங்களில் ஓங்கியிருப்பது திரைப்படத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றது. தமிழின் தொன்மை, இனிமை, தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு ஆகியன, உரையாடல் மற்றும் பாடல்களாக தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடம் பெற்றன. 1953 ஆம் ஆண்டு வெளிவந்த ஔவையார் திரைப்படம் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

விவரணப்படங்கள்[தொகு]

இந்திய திரைப்பட வரலாற்றில், தனியிடம் பெற்ற விவரணப் படம், ஏ. கே. செட்டியார் தயாரித்து 1940 இல் வெளிவந்த 'மகாத்மா காந்தி'. ஏ.கே.செட்டியார் தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்து, பல்லாயிரக்கணக்கான அடிகள் கொண்ட இந்தப் படத்தைத் தயாரித்தார். காணாமல் போனதாகக் கருதப்பட்ட, 1953 இல் ஹாலிவூட்டில் எடுக்கப்பட்ட இதன் ஆங்கிலப் படியானது, டாக்டர் வெங்கடாசலபதி என்பவரால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, ஜனவரி 19, 2006 இல் சென்னையில் காண்பிக்கப்பட்டது.[1]

தமிழ்நாட்டில் விவரணப் படம் எடுப்பது, சலனப்படக் காலத்திலேயே தோன்றியிருந்தாலும், அதன் வளர்ச்சி குன்றியேயிருந்தது. விவரணப் படங்களுக்கென்றே உருவான 16 மில்லி மீட்டர் காமிராவும், புரொஜக்டரும் தமிழ்நாட்டில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் இந்திய அரசின் திரைப்படப் பிரிவு பல சீரிய விவரணப் படங்களை தயாரித்தது. இவை மொழி மாற்றம் செய்யப்பட்டு, தமிழக திரையரங்குகளில் காட்டப்பட்டன. ஆனால் திரையரங்க உரிமையாளர்களின் பொறுப்பின்மையாலும், விளம்பரப் படங்களின் ஆக்கிரமிப்பாலும், விவரணப்படங்களைக் கதைப் படங்களுடன் திரையரங்குகளில் திரையிடும் வழக்கம் தற்போது மறைந்து விட்டது. இந்த நிலையில், அண்மையில் விவரணப் படங்கள் திரையரங்குகளில் கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. விவரணப் பட இயக்கம், தமிழ்நாட்டில் குன்றிபோனதற்கு ஒரு முக்கிய காரணம், மக்களிடையே திரைப்பட ரசனை வளராமல் போனதும், டாக்குமென்டரி என்ற திரைப்பட வகைக்கான ஆர்வலர்கள் உருவாகாததும்தான். திரைப்படம் என்றவுடன் கேளிக்கைத் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே எண்ணும் நோக்குதான், இந்த வளர்ச்சியை தடுத்து விட்டது. ஆயினும் 'ஒரு கண் ஒரு பார்வை' (1998) விவரணப் படமெடுத்த ஞான. ராஜசேகரன், 'அதிசயம் அற்புதம்' (1997) எடுத்த சிவகுமார் போன்றோரை விவரணப்பட இயக்குநர்களாக குறிப்பிட வேண்டும். 1990இல் சலம் பென்னுர்கர் எடுத்த 'குட்டி ஜப்பானின் குழந்தைகள்', விருதுகள் பெற்ற ஒரு விவரணப்படம்.

இரண்டாம் உலகப்போரின் பின்னர்[தொகு]

உலகப்போர் ஓய்ந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின், திரைப்படத்துறை மீண்டும் தொழில் ரீதியாக வளர ஆரம்பித்தது, திரைப்படத் தயாரிப்பு அதிகரித்தது. படங்களுக்கு வரவேற்பும் கூடியது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டவுடன், போட்டோங் திரையரங்குகள் பெருகி, திரைப்படம் கிராமவாசிகளையும் எட்டியது. இந்த ஆண்டுகளில் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கிய சில படங்கள் வெளிவந்த அதே சமயத்தில் பாதாள பைரவி (1951), கணவனே கண் கண்ட தெய்வம் (1955) போன்ற மாயாஜாலப் படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தின. எஸ். எஸ். வாசன் இயக்கிய சந்திரலேகா (1948) பொழுது போக்கு படங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி, வியாபார ரீதியில் பெரும் வெற்றியைக் கண்டது. மாயாஜாலம், பக்தி, தமிழ்ப்பற்று இவை மூன்றும் கலந்த படைப்பாக வந்த முக்கிய படைப்புகளில் ஒன்று ஒளவையார். நாடக ஆசிரியர்களாகப் புகழ் பெற்ற சில திராவிட இயக்கத் தலைவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபாடுக் கொண்டனர். 1949 இல் நல்லதம்பி படத்திற்கு கதைவசனம் எழுதி சி. என். அண்ணாதுரை திரையுலகில் பிரவேசித்தார். வேலைக்காரி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது. அவரைத் தொடர்ந்து மு. கருணாநிதி மந்திரி குமாரி (1950) படத்திற்கு வசனம் எழுதினார். சினிமா வரலாற்றாசிரியர்களால், திராவிட இயக்கத் திரைப்படங்கள் என்றழைக்கப்படும் திரைப்படங்கள் பலவும் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன.

அரசியலின் தாக்கம்[தொகு]

மு.கருணாநிதி வசனம் எழுதி வெளியான பராசக்தி (1952)யின் வெற்றிக்குப் பாத்திரப் பேச்சு முக்கிய காரணமானது. இந்த படத்தின் அடுக்குமொழி வசனம், ஒலிநாடாவில் இன்றளவும் விற்பனையாகிறது. சிவாஜி கணேசனின் முதல் படம் என்றும், இந்த படத்திற்குத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டு. கருணாநிதி திரும்பிப்பார் (1953), மனோகரா (1954) உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதிப் புகழ் ஈட்டினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முரசொலி மாறன், ஏ. வி. பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றோரும் திரைப்பட உலகில் வசனகர்த்தாக்களாக பிரவேசம் செய்தனர். இந்தக் காலகட்டத்தில் வசனமே திரைப்படங்களில் மேலோங்கியிருந்தது. காட்சி பிம்பங்களுக்கு முக்கியத்துவம் குறைந்தது. திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்கள் திரையுலகில் பிரவேசித்தது தமிழ்த் திரைப்படத்திற்கும் அரசியலுக்குமான உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. திரைப்பட வசனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் செய்யும் பாணி ஆரம்பம் ஆனது.

1951இல் தென்னகத்தில் முதல் முதலாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற கே. பி. சுந்தராம்பாள், தமிழ்நாட்டு மேல்சபையில் உறுப்பினராக்கப்பட்டு, சட்ட சபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றார். 1952இல் இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. சென்னை உட்பட மும்பை, கல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் பன்னாட்டுத் திரைப்படங்கள் காட்டப்பட்டன. இந்திய திரைப்பட வரலாற்றில் இது ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.

1918 இல் அமுல்படுத்தப்பட்ட இந்தியன் "சினிமாட்டோகிராப்" சட்டம் 1952ல் மறுவடிவில் தோன்றினாலும், உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை. இதே வருடம், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படமான "காடு" சேலம் மாடர்ன் தியேட்டர்சாரின் கூட்டுடன் தயாரானது. 1955ல் திரைபடத்திற்கான தேசிய விருதுகள் அளிக்கும் மரபு உருவானது. அந்த வருடம் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கதையான மலைக் கள்ளன் (எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்தது) தேசிய விருது பெற்றது. 1956ல் தென்னிந்தியாவின் முதல் திரைப்படக் குழுமம் "தி மெட்ராஸ் பிலிம் சொசைட்டி", திருமதி அம்மு சுவாமிநாதனால் அமைக்கப்பட்டது.

1959 ஆம் ஆண்டு, திரைப்படக் கலைஞர்களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு, தமிழ் நடிகர் சங்கம் இயக்குநர் கே. சுப்பிரமணியம் அவர்களால் நிறுவப்பட்டது. எனினும் தொழிற்சங்க இயக்கம் திரையுலகில் வேரூன்ற பல ஆண்டுகள் ஆயின. (ஏற்கனவே 1940ல் சினி டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன்ஸ் என்ற அமைப்பை இயக்குனர் கே. ராம்நாத் நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது).

நட்சத்திர ஆதிக்கம்[தொகு]

ஐம்பதுகளின் துவக்கத்தில், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற எம். ஜி. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன் போன்றோரின் நட்சத்திர ஆதிக்கம் துவங்கியது. அதன் ஆரம்ப அறிகுறிகளை அப்போது வந்த மதுரை வீரன், ரங்கோன் ராதா (1956) போன்ற படங்களில் காணலாம். இவ்விரு நடிகர்களும் தமிழ்த் திரைப்பட உலகில் ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலம் புகழின் உச்சியில் இருந்தனர். அவர்கள் நடிக்கும் படங்களின் இயக்குநரின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறைந்தது. ஆண் நட்சத்திரங்களை சுற்றியே கதைகள் அமைக்கப்பட்டன. ஐம்பதுகளில் திரைப்பட உலகில் தாக்கம் ஏற்படுத்திய மற்றொருவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1954இல் தொடங்கி 1959 வரை பதிபக்தி, பாசவலை போன்ற பல படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. இன்றளவும் அந்த பாடல்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன. இவரது மறைவுக்குப் பின் கண்ணதாசன் பாடலாசிரியர் வரிசையில் முதலிடம் பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் நிகரற்று விளங்கினார்.

வண்ணப்படங்கள்[தொகு]

1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமான "மாடர்ன்" தியேட்டர்சாரின் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது. ஆயினும் கருப்பு வெள்ளைப் படங்கள் அரிதாக, முற்றிலும் வண்ணப்படங்கள் மட்டுமே வர ஏறக்குறைய இருபதாண்டுகளாயின. வண்ணத்திற்கு மாற்றம், தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சியை வெகுவாக பாதித்தது. வண்ணப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிகர்கள் பல உடைகளை மாற்றுவதும், பல இடங்களில் ஒரு பாடலை படமாக்குவதும் வழக்கமாயிற்று. இத்துடன் இசையின் தாக்கமும் சேர்ந்தமை, திரைப்படப்பாடல் காட்சிகளுக்கு ஒரு புதிய வடிவை ஏற்படுத்தியது. பின்னர், இசை விழாவின் வரவு இந்த பாடல் காட்சிகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அறுபதுகளில் தமிழ்த்திரைப்படத் துறை[தொகு]

1960ல் சென்னை அடையாறில் திரைப்படக் கல்லூரி நிறுவப்பட்டது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இந்தக் கல்லூரியில் பயின்றவர்களின் தாக்கத்தை காண முடிந்தது. அறுபதுகளின் ஆரம்ப வருடங்களில் சில புதிய இயக்குநர்கள் தோன்றி தமிழ் திரைப்படத்திற்கு வலுவூட்டினார்கள். இதில் நினைவுக் கூறத்தக்கவர் ஸ்ரீதர். 1959ல் வெளியான கல்யாணப்பரிசு படத்தின் மூலம் புகழ் பெற்ற இவர் நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), காதலிக்க நேரமில்லை (1964) போன்ற வெற்றிப் படங்களையும் தந்தார். முக்கோணக் காதல் கதை இவர் படங்களின் அடிப்படை. இதே காலகட்டத்தில் தான் ஏ.பீம்சிங் கும் படங்களை இயக்கினார். பாவ மன்னிப்பு (1961), பார்த்தால் பசி தீரும் (1962) ஆகிய இவரது படைப்புகள் இன்றும் மங்காத புகழுடன் விளங்குகின்றன. நிறுவனநாடகங்களில் வளர்ந்த கே. எஸ். கோபாலகிருஷ்ணன் கற்பகம் (1963) படத்தின் மூலம் இயக்குநரானார். உணர்ச்சி மிக்க குடும்பக்கதைகள் பல எடுத்து சில ஆண்டுகள் புகழோச்சினார், மேடை நாடக ஆசிரியராக திகழ்ந்த கே. பாலசந்தர், நீர்க்குமிழி (1965) படத்தின் மூலம் இயக்குனரானார். பல புதிய நடிகர்களை- கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட- இவர் அறிமுகப்படுத்தினார். இயக்குநரை குறிப்பிட்டு ஒரு படத்தை அடையாளம் காட்டும் சாத்தியம் பாலசந்தர் காலத்தில்தான் துவங்கியது. ஜெயகாந்தனின் குறுநாவலான உன்னைப்போல் ஒருவன் அவராலேயே இயக்கப்பட்டு, 1964ல் படமாக வெளிவந்து, தேச அளவில் விருதைப் பெற்றது. இது யதார்த்த திரைப்படத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. நீர்க்குமிழி மூலம் திரையுலகில் பிரவேசித்த கே.பாலசந்தர், பல படங்களைத் தயாரித்து புகழீட்டினார். தொழில் சாரா நாடக மேடையிலிருந்து வந்த இவரது படைப்புகளின் முக்கிய அம்சங்கள் புதிய முகங்கள், நகர்ப்புற, மத்தியதர மக்களின் பிரச்சனைகள், கண்ணதாசன் பாடல்கள், மக்களிடம் முன்னமே வெற்றி பெற்றிருந்த நாடகங்கள் போன்றவையே, இதே சமயம் பாவமன்னிப்பு (1961) போன்ற அகில இந்திய விருது பெற்ற படங்களை பீம்சிங் அளித்தார். இவரது படங்கள் வெற்றிபெற சிவாஜிகணேசன் போன்ற நட்சத்திரக் கூட்டமைப்பு, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை, குடும்ப உறவுகளைச் சார்ந்த கதைகள் போன்றனவே, ஏ.பி.நாகராஜன் சரஸ்வதி சபதம் (1966) போன்ற சில புராணப்படங்களை தயாரித்து கடவுளர்களையும், தேவர்களையும் வண்ணத்தில் காட்டினார். புராணப் படங்களுக்கு தமிழ் திரைப்படத்தில் சிறிது காலம் மறுவாழ்வு கிடைத்தது. 1963ல் மாநில அளவில் திரைப்பட விருதுகள் அமைக்கப்பட்டன. காவல்காரன் இவ்விருதைப் பெற்ற முதல் படம். அறுபதுகளின் மற்றொரு முக்கிய சிறப்பு, நட்சத்திரங்கள் அரசியலில் போட்டோடையாக ஈடுபட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போது எஸ். சத்தியமூர்த்தியின் உந்துதலினால் கே.பி.சுந்தராம்பாள், வி. நாகையா உட்பட பல திரைப்படக் கலைஞர்கள் போட்டோடையாக அரசியலில் ஈடுபட்டனர். இந்த ஈடுபாடு பிற்காலத்திலும் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் திரைப்படமும், அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கும் சமீபகால வரலாறு, உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திராவிட இயக்கங்களுடன் இணைந்திருந்த என். எஸ். கிருஷ்ணன்,கே. ஆர். ராமசாமியிலிருந்து பின்னர் எம்.ஜி.இராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன் உட்பட பலர் நேரடி அரசியலில் இறங்கினர். 1967ல் தேனி பகுதியிலிருந்து எஸ்.எஸ்.ஆரும், பரங்கி மலை தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆரும் தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபையில் நுழைந்தனர். எம்.ஜி.ஆரின் படங்களில் போட்டோடையாகவும், குறியீடுகள் மூலமாகவும் கட்சிப் பிரச்சாரம் வெளிப்படுத்தப் பட்டது. வண்ணப்படங்களில் அரசியல் கட்சிகளின் கொடியின் நிறங்கள்; குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டன. இத்துடன் ரசிகர் மன்றத்தின் ஆதரவும் சேர்ந்து, நட்சத்திர அரசியல்வாதிகளின் கைகளைப் பலப்படுத்தியது.

1972இல் தி.மு.கவிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனிக் கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் ஆதரவுடனும், நட்சத்திர ஆளுமையின் துணையுடனும் அவரது அரசியல் வாழ்வு உயர்ந்தது. 1977 இல் எம்.ஜி.ராமசந்திரன் தமிழக முதல்வரான பின், திரைப்படத்துறைக்குப் பயனளிக்கும் திட்டங்கள் சிலவற்றை அமுலாக்கினார். மூப்படைந்த திரைப்படக் கலைஞர்களின் ஓய்வூதியத்தை ரூ.75ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தினார். சிறந்த படங்களுக்கு மானியம் கொடுக்கும் திட்டம் இவர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.

தென்னிந்தியாவின் முதல் "சினிமாஸ்கோப்" படமான ராஜ ராஜ சோழன் (திரைப்படம்) (1973), வர்த்தக ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் பெறவில்லை. எழுபதுகளில் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சிலரின் தாக்கம் தமிழ்த் திரைப்படத்தில் வெளிப்பட ஆரம்பித்தது. 1972 இல் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்ற சிலர் சேர்ந்து தயாரித்த தாகம், யதார்த்த திரைப்பட பாணியில் அமைந்திருந்தது. பல புதிய, இளைஞர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் பிரவேசித்து அதன் எல்லைகளை விரிவாக்கினர். இந்த ஆண்டுகளில் தான் தமிழ்த் திரைப்படத்தில் மூன்று ராஜாக்களின் வரவு பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா ஆகியோரே இம்மூவர். பாரதிராஜாவின் முதல் படம் பதினாறு வயதினிலே 1977.ல் வெளிவந்தது. புதிய நடிகர்கள், இளையராஜாவின் இசை, கிராமியப் பின்னணி, யதார்த்தத்தில் அழுத்தம் இவைகளே பாரதிராஜா படைப்புகளின்; முக்கிய அம்சங்கள். நாடக நடிப்பை விட்டு இயல்பு நடிப்பை பின்பற்ற இவர் முயற்சி செய்தார். 1979இல் சுவரில்லாத சித்திரங்கள் மூலம் பாக்கியராஜ் இயக்குநரானார். நகைச்சுவை கலந்த கதையோட்டம், பாலியல் அழுத்தம் இவை பாக்கியராஜ் படங்களின் வெற்றிக்கு காரணமாயிருந்தது. இந்த ஆண்டுகளில் மற்றொரு முக்கிய நிகழ்வு இளையராஜாவின் வளர்ச்சி. 1976ல் அன்னக்கிளி படத்திற்கு முதல் முறையாக இசையமைத்த இளையராஜா, வெகு விரைவிலேயே நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தார். இவர் இதுவரை நான்கு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 600 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

ஜே.மகேந்திரன் இயக்குநராக முள்ளும் மலரும் (1978) படத்தில் அறிமுகமானதும் இவ்வேளையில்தான். அவரது அடுத்த படமான உதிரிப்பூக்கள் யதார்த்த பாணியில் அமைந்து தமிழின் முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றது. 1975ல் அவளும் ஒரு பெண்தானே படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமானார். பசி (1979) இவருக்கு தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பிடித்துக் கொடுத்தது, அப்படத்தில் நடித்த ஷோபா அகில இந்தியாவின் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். (விருது பெற்ற சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்து கொண்டார். நடிகைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தமிழ்த் திரையிலகிற்கு புதிதல்ல. விஜயஸ்ரீ, படாபட் லட்சுமி, கல்பனா, லட்சுமிஸ்ரீ, சில்க் ஸ்மிதா என பட்டியல் நீள்கிறது). புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை முறையாகப் பயின்ற பாலு மகேந்திராவின் முதல் படம் அழியாத கோலங்கள் (1979) வெளிவந்தது. இக்காலகட்டங்களில் பாரதிராஜா, மகேந்திரன், துரை, பாலு மகேந்திரா போன்றோர் வரவால் தமிழ்த் திரைப்படத் துறையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டது.ஒரு தலை ராகம் (1980) மூலம் திரைப்பட உலகிற்குள் அடியெடுத்து வைத்த டி.ராஜேந்தர், இன்றளவும் மக்களிடையே வரவேற்பு பெரும் படங்களை இயக்கி வருகிறார். கதை வசனம், ஒளிப்பதிவு, இசை ஆகிய சகல பணிகளையும் தானே செய்து புகழ் வாங்கினார் . இவரது தனித்துவம் ஆடம்பர திரையமைப்பு, அடுக்கு மொழி வசனங்கள் இவையே. எண்பதுகளின் ஆரம்ப வருடங்களில் தமிழ்ப் பட தயாரிப்பு முன் காணாத அளவு அதிகரித்தது. 1985 ஆம் ஆண்டு இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் 129 படங்கள் வெளியாயின. இந்தியாவில் வர்த்தகரீதியில் இந்தி திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருப்பது தமிழ் திரைப்படங்கள்தான். கோமல் சுவாமிநாதனின் நாடகம் தண்ணீர் தண்ணீர் 1981 இல் கே.பாலசந்தர்இன் இயக்கத்தில் வெளிவந்தது. இதுபோன்றதுதான் இவரது அச்சமில்லை அச்சமில்லையும் அரசியல் அங்கதம் நிறைந்த படம். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ராஜபார்வையும் அதே ஆண்டுதான் வெளிவந்தது. நட்சத்திர ஆளுமையில் கமலஹாசன் புகழ் ஓங்கியதும் இந்த ஆண்டுகளில்தான். அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்ற ருத்தரையாவின் அவள் அப்படிதான் (1980) இந்த ஆண்டுகளில் வந்த ஒரு முக்கியமான படைப்பு. பெண்ணிய சித்தாந்தத்தை, சீரிய திரைப்படப் பண்பு நிறைந்த ஒரு படத்தின் மூலம் தமிழர்களுக்கு தந்தார் இவர். எண்பதுகளில் மற்றுமொரு முக்கிய படைப்பாளியான மணிரத்னம், பல்லவி அனுபல்லவியுடன் திரையுலகில் பிரவேசித்தார். தமிழ்த்திரையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய அவரது மௌன ராகம் (1986) சிறந்த தமிழ்படத்திற்கான விருதைப் பெற்றது. தேசிய அளவில் புகழ் ஈட்டியது 1987 இல் வந்த இவரின் நாயகன், ரோஜா (திரைப்படம்), பம்பாய் ஆகிய படங்கள் இவருக்கு அகில இந்திய அளவில் புகழீட்டி தந்தது. 1987இல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அவரது மனைவியும் நடிகையுமான வி.என். ஜானகி தமிழக முதல்வரானார். பின்னர் 1991இல் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஜெயலலிதா முதலமைச்சரானது நிகழ்கால வரலாறு.

தொண்ணூறுகளில் தமிழ்த்திரை[தொகு]

1990 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனமான ஜி.வெங்கடேஸ்வரன் "ஜி.வி.பிலிம்ஸ்" என்ற நிறுவனத்தை ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது 1990 ஆம் ஆண்டு கே.எஸ் சேதுமாதவன் இயக்கிய மறுபக்கம் இந்தியாவின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இவ்வாண்டில் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய புதிய இயக்குநர்கள் தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தனர். விக்கிரமனின் புது வசந்தம், ரவிக்குமாரின் புரியாத புதிர் போன்ற படங்கள் வெளிவந்தன. தொடர்ந்த வருடங்களில், கிராமப்புறக் கதைகளைக் கொண்ட சின்ன கவுண்டர் (1992) உள்ளிட்ட பல வெற்றி படங்கள் வர, பல தயாரிப்பாளர்கள் கிராமப்படங்களை தயாரிக்க விருப்பமும் தெரிவித்தனர்.இந்த ஆண்டுகளில் வந்த ஜெயபாரதி இயக்கிய உச்சி வெய்யில் (1990) இந்த கலாச்சார சூழலிலும் சீரிய திரைப்படம் மலர முடியும் என்பதை நிரூபித்தது. இது கொல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும், கனடா நாட்டில் ரொறன்ரோவில் நடந்த திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு விமர்சன ரீதியில் புகழ்பெற்றது.ரோஜா (1992) காஷ்மீர் தீவிரவாதிகள் பிரச்சனையை அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட கதை. இதைத் தொடர்ந்து இந்து-முஸ்லீம் உறவு பற்றிய கதையைக் கொண்ட பம்பாய் (1995) பல தடைகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டாலும், வெற்றிபடமாக அமைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை இதன் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படத் துறைக்கு ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது.தமிழ்த் திரைப்படங்கள் பல விருதுகளைப் பெற்றன.சிவாஜி கணேசனுக்கு தாதா சாகேப் பால்கே விருதும், அகத்தியனுக்கு சிறந்த இயக்குநர் விருதும், சிறந்த நடிகராக கமல்ஹாசனுக்கு வெள்ளித் தாமரை விருதும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதும், சித்ராவிற்கு சிறந்த பின்னணி பாடகி விருதும், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்திற்கான விருது காதல் கோட்டைக்கும், திரைப்படம் குறித்த சிறந்த நூல் எழுதியமைக்காக தியடோர் பாஸ்கரனுக்கு தங்கத் தாமரை விருது போன்ற பல்வேறு விருதுகளைத் தமிழ்த் திரை 1996 ஆம் ஆண்டில் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Net search throws up documentary on Gandhi (The Hindu)". Archived from the original on 2010-09-07. பார்க்கப்பட்ட நாள் 2007-11-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்த்_திரைப்பட_வரலாறு&oldid=3557159" இலிருந்து மீள்விக்கப்பட்டது