ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ்
பிறப்பு(1897-02-10)பெப்ரவரி 10, 1897
ஹார்பர்டு மேற்கு, கனெடிகட்
இறப்புசெப்டம்பர் 8, 1985(1985-09-08) (அகவை 88)
வாட்டர்ஃபோர்டு, கனெடிகட்
தேசியம்அமெரிக்கர்
கல்வி கற்ற இடங்கள்யேல் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபோலியோ அதிநுண்ணுயிர் வளர்த்தல், தட்டம்மை நச்சுயிரி பிரித்தெடுத்தல், தட்டம்மை நச்சுயிரி தடுப்பூசி மருந்து
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, 1954

ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ் (John Franklin Enders, பெப்ரவரி 10, 1897 – செப்டம்பர் 8, 1985) என்பவர் நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியல் அறிவியலாளர் ஆவார். "நவீன தடுப்பு மருந்துகளின் தந்தை" என்று போற்றப்படுகிறார்.[1][2]

வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

இவரது தந்தை ஒரு வங்கியாளர் ஆவார். இவர் நோவா வெப்ஸ்டர் பள்ளியிலும், நியூ ஹாம்ஷையரில் உள்ள செயிண்ட் பால் பள்ளியிலும் படித்தார். 1915-இல் யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இரண்டே ஆண்டுகளில் படிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்தார் முதல் உலகப்போருக்குபின் மீண்டும் யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து,1920-இல் பட்டம் பெற்றார். பிறகு கொஞ்சகாலம் தொழில் செய்துவந்து அதில் திருப்தி ஏற்படாமல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆங்கில ஆசிரியராக ஆகும் நோக்கோடு நான்கு ஆண்டுகள் ஆங்கில இலக்கியம் படித்தார். அந்தத் தொழிலிலும் அவருக்குத் திருப்தி இல்லை. நுண்ணுயிரியல் மற்றும் நோய்த் தடுப்பியல் படிப்பில் முனைவர் பட்ட மாணவராகச் சேர்ந்தார். 1930-இல் நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்கள்குறித்த ஆய்வுக் கட்டுரையைச் சமர்பித்தார்.

பணிகள்[தொகு]

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணிக்குச் சேர்ந்து, நுண்ணுயிர்களின் வீரியத்தன்மை மற்றும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியின் ஆற்றல்குறித்த சில காரணிகளை ஆராய்ந்தார். 1938இல் தன் குழுவினருடன் இணைந்து பொன்னுக்கு வீங்கி அம்மை நோய் உண்டாக்கும் வைரசு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைக் குணப்படுத்தும் நோய் எதிர்ப்பு ஆற்றல் மருந்தைக் கண்டு பிடித்தார். 1946இல் பாஸ்டனில் உள்ள குழந்தைகள் மருத்துவ மையத்தில் தொற்று நோய்கள்குறித்து ஆய்வு செய்யும் ஒரு ஆய்வகத்தை நிறுவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். மனிதனுக்கு வைரஸ் நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்கள் குறித்து இவரது வழிகாட்டுதலின் கீழ் மிகச்சிறந்த முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

நோபல் பரிசு[தொகு]

போலியோ தடுப்பு மருந்து தயாரிப்புக்குக் காரணமாக அமைந்த புதிய,ஆபத்தில்லாத முறையிலான போலியோமை யெலிஸ்ட் (poliomyelitis) வைரஸ்கள் உற்பத்திக்கான ஆய்வுக்காக டி. எச்.வெல்லர் மற்றும் எப்.சி.ராபின்ஸ் இருவருடன் இணைந்து இவருக்கு 1954ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர்களின் ஆய்வுமூலம் அறிவியலாளர்களால் போலியோ வைரஸ்களை மிகுதியான அளவில் உற்பத்தி செய்ய இயன்றது. இந்த ஆய்வு முறை போலியோ மருந்துத் தயாரிப்புக்கு மட்டுமல்லாமல் பிற வைரஸ்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளவும் உதவியது.

குறிப்புகள்[தொகு]

  1. எஆசு:10.1098/rsbm.1987.0008
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. எஆசு:10.1007/978-3-540-70523-9_1
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand