ஜான் ஜாக் ரூசோ
| மேற்கத்திய மெய்யியல் 18ம் நூற்றாண்டுத் தத்துவம் (நவீன தத்துவம்) |
|
Pastel by Maurice Quentin de La Tour, 1753 |
|
| முழுப் பெயர் | ஜான் ஜாக் ரூசோ |
|---|---|
| பிறப்பு | சூன் 28, 1712 (ஜெனீவா, சுவிட்சர்லாந்து) |
| இறப்பு | சூலை 2 1778 (அகவை 66) (எர்மனன்வில்லீ, France) |
| சிந்தனை மரபு(கள்) |
சமூக ஒப்பந்த கோட்பாடு |
| முக்கிய ஆர்வங்கள் |
அரசியல் தத்துவம்,இசை, கல்வி, இலக்கியம், தன்வரலாறு |
| குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் |
General will, amour-propre, மனிதத்தின் இயற்கையான நல்லியல்புகள் |
|
செல்வாக்குச் செலுத்தியோர்
|
|
|
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
|
ஜான் ஜாக் ரூசோ (Jean-Jacques Rousseau, ஜூன் 28, 1712 – ஜூலை 2, 1778) ஒரு முக்கியமான பிரெஞ்சு மெய்யியலாளரும் அறிவொளிக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது அரசியல் தத்துவம் பிரெஞ்சுப் புரட்சியிலும், தாராண்மைவாதம், பழமைவாதம், சமூகவுடமைக் கோட்பாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியது. குற்ற ஏற்புரைகள் (Confessions), தனித்த பயணியின் கனவுகள் (Reveries of a Solitary Walker) போன்ற அவரது எழுத்துக்கள் மூலம் தற்காலத் தன்வரலாற்று இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியதுடன், சிந்தனையில் அகநிலைநோக்கை (subjectivity) ஊக்குவித்தார். இதன் தாக்கத்தை ஹேகல், பிராய்ட் போன்ற பரந்துபட்ட சிந்தனையாளர்களின் ஆக்கங்களில் காணமுடியும். இவரது ஜூலி அல்லது புதிய ஏலவீஸ் (Julie, ou la nouvelle Héloïse) என்னும் புதினம் 18 ஆம் நூற்றாண்டின் அதிகம் விற்பனையான புனைகதை இலக்கியங்களுள் ஒன்றாக இருந்ததுடன், புனைவியலின் (romanticism) வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியது. ஒரு கோட்பாட்டாளனாகவும், இசையமைப்பாளனாகவும், இசைத்துறைக்கும் இவர் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். 1778 இல் காலமானார். இவரது உடல் 1794 ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள பந்தியனில் அடக்கம் செய்யப்பட்டது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
ரூசோ, இன்றைய சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் பிறந்தார். தனது வாழ்நாள் முழுவது அவர் தன்னை ஒரு ஜெனீவாவின் குடிமகனாகவே விபரித்துக்கொண்டார். இவர் பிறந்து ஒன்பதாவது நாளிலேயே இவரது தாயார் பிரசவக் கோளாறினால் இறந்துவிட்டார். கைக்கடிகார உற்பத்தியாளரான இவரது தந்தையும், தொழிலில் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறைவாசத்துக்குப் பயந்து, 1722 இல், ரூசோவைக் கைவிட்டுச் சென்றுவிட்டார். ரூசோவின் இளமைக்காலப் படிப்பு, புளூட்டாக்கின் வாழ்க்கைகள் மற்றும் கல்வீனியம் சார்ந்த நூல்கள் ஆகியவற்றை வாசிப்பது மட்டுமே. இவர் பொதுப் பூங்காக்களில் இருந்தே இந் நூல்களை வாசித்தார். தனது வளர்ச்சியின் மிகப் புனிதமான பகுதி எனப் பின்னர் இவர் இதனை விபரித்தார். மதகுருவின் தங்கை இவருக்கு அளித்த உடல்ரீதியான தண்டனைகள் தனது பாலியல் நடத்தைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக ரூசோ தனது குற்ற ஏற்புரை என்னும் நூலில் விளக்கியுள்ளார். இவர் பல வினோதமான பாலியல் நடத்தைகளைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
[தொகு] பிரெஞ்சுச் சீமாட்டியுடன் தொடர்பு
இவர் ஒரு சட்டத்துறைப் பதிவாளரிடமும், செதுக்கு வரைஞர் (engraver) ஒருவரிடமும் தொழில் பயிலுனராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், தனது 16 வயதில், 1728 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி ஜெனீவாவை விட்டு வெளியேறினார். பிரெஞ்சுக் கத்தோலிக்கச் சீமாட்டியான பிராங்கோய்ஸ் லூசி டி வாரென் (Françoise-Louise de Warens) என்பவரை இவர் சந்தித்தார். ரூசோவிலும் 13 வயது மூத்தவரான இவர் பின்னர் ரூசோவின் காதலி ஆனார். இச் சீமாட்டி, ரூசோவைக் கத்தோலிக்கப் பள்ளிக்கு அனுப்பி இவர் பிரபுக்களுக்கு உரிய கல்வி கற்பதற்கு வழி செய்தார். அங்கே அரிஸ்ட்டாட்டிலைப் படித்தது மட்டுமன்றி, இலத்தீன், நாடகக் கலை போன்றவற்றிலும் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.
[தொகு] ரூசோவின் இசைக்குறியீடு
எண்ணிடப்பட்ட இசைக் குறியீட்டுக்கான புதிய முறை ஒன்று குறித்து பிரெஞ்சு அறிவியல் அக்கடமியில் விளக்குவதற்காக 1742 ஆம் ஆண்டில் இவர் பாரிசுக்குச் சென்றார். இவருடைய முறை, ஒரே வரியில் அமைந்த எண்களையும், புள்ளிகள், கால்புள்ளிகளையும் கொண்டது. எண்கள் சுரங்களுக்கு இடையிலான இடைவெளிகளையும், புள்ளிகளும், கால்புள்ளிகளும் தாளப் பெறுமானங்களையும் குறித்தன. இம்முறை அச்சிடலுடன் இசைவாக இருப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது நடைமுறைச் சாத்தியமானது அல்ல என்று அக்கடமி இதனைப் புறந்தள்ளிவிட்டது. எனினும், உலகின் சில பகுதிகளில் இம்முறை இன்னும் பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது.
[தொகு] ரூசோவின் பிள்ளைகள்
1743 தொடக்கம் 1744 வரை, வெனிசில் இருந்த பிரான்ஸ் தூதருக்கு இவர் செயலாளராக இருந்தார். 11 மாதங்கள் வரை பணிபுரிந்த பின்னர் இவர் பணிநீக்கப்பட்டார். விசாரணைக்குப் பயந்து இவர் அங்கிருந்து பாரிசுக்குத் தப்பிச் சென்றார். அங்கே அவர் ஓரளவு படித்திருந்த தையல்காரி ஒருவருடன் நட்புக்கொண்டு அவருடன் வாழ்ந்தார். ரோசோவின் கூற்றுப்படி அவருக்கு இத் தையல்காரி மூலம் ஐந்து பிள்ளைகள் பிறந்தன. பிள்ளைகள் பிறந்தவுடனேயே அவை அனாதை இல்லங்களுக்கு அனுப்பப்பட்டன. அனாதை இல்லத்துப் பிள்ளைகளின் இறப்பு வீதம் அதிகமாக இருந்த அக் காலத்தில் இப் பிள்ளைகளில் பல இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கல்வி, பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றில் அறியப்பட்ட கோட்பாட்டாளராக விளங்கிய ரூசோ, தனது பிள்ளைகளைக் கைவிட்டது குறித்து இவரது எதிரிகள் இவரைக் கடுமையாக விமர்சித்தனர். தான் ஒரு ஏழைத் தந்தை என்றும், அநாதை இல்லங்களில் பிள்ளைகள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் என்றும் ரூசோ கூறினார்.