சோ. சிவபாதசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சோ. சிவபாதசுந்தரம் (பிறப்பு: ஆகத்து 12, 1912) ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரும் ஒலிபரப்பாளரும் ஆவார். ஈழகேசரி பத்திரிகையின் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர். சிறுகதைகள் மற்றும் பிரயாணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பொருளடக்கம்

வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]

ஈழத்தில் யாழ்ப்பாண மாவட்டம், ஊர்காவற்துறையில் சோமு உடையார் பேரன் என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்பிள்ளை என்பவருக்கு 1912 ஆம் ஆண்டில் பிறந்தவர் சிவபாதசுந்தரம். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஆங்கிலம், தமிழ், மற்றும் சமக்கிருந்தம் போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். 1930களில் குரும்பசிட்டி பொன்னையாவால் ஆரம்பிக்கப்பட்ட ஈழகேசரி பத்திரிகையில் ஆசிரியரானார். ஐந்தாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் 1941 ஆம் ஆண்டளவில் கொழும்பு வானொலியில் பணியில் சேர்ந்தார். South East Broadcasting Company இனால் சிபாரிசு செய்யப்பட்டு 1974 ஆம் ஆண்டு இலண்டனில் பிபிசியில் இணைந்து ஐந்தாண்டுகள் பணியாற்றினார்.

1947 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பிய சிவபாதசுந்தரம் இலங்கை வானொலியில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முயன்றபோது இனத்துவேசம் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டார்[1]. இதனை அடுத்து இலங்கை வானொலியை விட்டு வெளியேறி லீவர் பிறதர்சு நிறுவனத்தில் விளம்பர இயக்குனராக ஒன்பதாண்டுகள் பணிபுரிந்தார்.

ஒலிபரப்புக் கலை நூல் [தொகு]

பிபிசி தமிழோசை எனப் பெயரிட்டு தமிழ் நிகழ்ச்சியை பிபிசியில் ஆரம்பித்தவர்களில் இவரும் ஒருவர். பிபிசியில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு "ஒலிபரப்புக் கலை" என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் அமுத நிலயத்தாரால் 1954 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலிற்கு ராஜாஜி ஆசியுரை எழுதியிருந்தார்[2].

சென்னை வானொலி நிலையம், காமராஜர், அண்ணாதுரை போன்ற பிரமுகர்கள் காலமானபோது இறுதி ஊர்வலத்தின் நேர்முக வர்ணனையாளராக சிவபாதசுந்தரத்தை அழைத்திருந்தது[2]. சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும் சிவபாதசுந்தரமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர் உரையாற்றலுக்கு அழைக்கப்பட்டனர். இவ்விருவரும் அண்ணாமலை, பாண்டிச்சேரி சென்னைப் பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியர்களாகவும் பணியாற்றினர்[2].

சமூகப் பணிகள் [தொகு]

சிவபாதசுந்தரம், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்து செயல்பட்டார். சென்னையில் 1959 ஆம் ஆண்டில் நடந்த அனைத்திந்திய எழுத்தாளர் மகாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். 1972 இல் ராஜமய்யரின் நூற்றாண்டு விழாக் குழுவின் பொருளாளராகவும் பணியாற்றியிருந்தார்[2].

சிவபாதசுந்தரனாரின் மனைவி ஞானதீபம் அம்மையார். இவர்களுக்கு மஞ்சபாஷிணி, ரவிலோச்சனன், பிரசன்னவதனி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவரது நூல்கள் [தொகு]

Noolaham.gif
தளத்தில்
சோ. சிவபாதசுந்தரம் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் (1947)
  • ஒலிபரப்புக்கலை (1954)
  • கௌதமபுத்தர் அடிச்சுவட்டில் (1960)
  • தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977)
  • சேக்கிழார் அடிச்சுவட்டில் (1978)

மேற்கோள்கள் [தொகு]

  1. மாதகலான் யோகராஜா, தமிழ் வெகுஜன தொடர்பு பிதாமகர், ஒலிபரப்பு வாத்தியார், தமிழர் தகவல், பெப்ரவரி 2000
  2. 2.0 2.1 2.2 2.3 இரு சுந்தரர்கள், நரசய்யா, புதுகைத் தென்றல்
"http://ta.wikipedia.org/w/index.php?title=சோ._சிவபாதசுந்தரம்&oldid=1332672" இருந்து மீள்விக்கப்பட்டது