சூழ்நிலையியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சூழ்நிலையியல் (Ecology) என்பது, உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான இடைவினைகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் துறையாகும். ஒரு உயிரினத்தின் சூழல்; சூரிய ஒளி, காலநிலை, நிலவியல் அம்சங்கள் போன்ற உயிரற்ற காரணிகளின் ஒட்டுமொத்த அளவான இயற்பியல் இயல்புகளையும்; குறிப்பிட்ட வாழிடத்தில் வாழும் பிற உயிரினங்களைக் கொண்ட உயிர்சார் சூழ்நிலை மண்டலத்தையும் (ecosystem); உள்ளடக்கியதாகும்.
சூழ்நிலையியல் என்னும் கருத்துருவை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ஜெர்மானிய உயிரியலாளரான ஏர்ன்த் ஹெக்கல் (Ernst Haeckel) என்பவராவார். இதை இவர் சூழலுடன் உயிரினங்களுக்குள்ள தொடர்பு பற்றிய விரிவான அறிவியல் என வரையறுத்தார். எனினும் இவர் இக் கருத்துருவை விரிவாக விளக்கவில்லை. இது தொடர்பான விரிவான பாடநூலொன்றையும், இத்துறையில் பல்கலைக்கழகப் பாடநெறி ஒன்றுடன் சேர்த்து எழுதியவர் டேனியத் தாவரவியலாளரான இயுஜெனியஸ் வார்மிங் (Eugenius Warming) என்பவராவார். இதனால் இவரே சூழ்நிலையியலை நிறுவியவர் என்கின்றனர்.
[தொகு] வீச்செல்லை
சூழ்நிலையியல் பொதுவாக, உயிரினங்களைப் பற்றி ஆயும் பொது அறிவியல்துறையான உயிரியலின் ஒரு பிரிவாகக் கருதப்படுகின்றது. உயிரினங்களைப் பல மட்டங்களில் ஆய்வு செய்ய முடியும். புரதங்கள், நியூக்கிளியிக் அமிலங்கள் என்பவற்றிலிருந்து (உயிர்வேதியியல், மூலக்கூற்று உயிரியல் போன்ற துறைகளில்), கலங்கள் (கலவுயிரியலில்), தனி உயிரினங்கள் (தாவரவியல், விலங்கியல் போன்ற துறைகளில்) ஊடாகக் கூட்டங்கள், சமுதாயங்கள், சூழ்நிலை மண்டலங்கள், உயிரினக் கோள மட்டம் வரை ஆய்வு செய்ய முடியும். இறுதியாகக் குறிப்பிடப்பட்ட மட்டங்களே சூழ்நிலையியல் ஆய்வுகளோடு தொடர்புள்ளவை. இது ஒரு பல்துறை அறிவியலாகும். சூழ்நிலையியல் தனது ஆய்வுகளுக்காக நிலவியல், புவியியல், காலநிலையியல், மண்ணியல், மரபியல், வேதியியல், இயற்பியல் ஆகிய துறைகளையும் துணைக்கொள்கிறது. இதனால் சிலர் இதனை ஒரு முழுதளாவிய (holistic) அறிவியல் என்கின்றனர்.