சுண்டிக்குளம் கடல் நீரேரி

ஆள்கூறுகள்: 9°29′N 80°30′E / 9.483°N 80.500°E / 9.483; 80.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுண்டிக்குளம் கடல் நீரேரி
அமைவிடம்யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
கிளிநொச்சி மாவட்டம், இலங்கை
ஆள்கூறுகள்9°29′N 80°30′E / 9.483°N 80.500°E / 9.483; 80.500
வகைகடற்காயல்
மேற்பரப்பளவு135 சதுர கிலோமீட்டர்கள் (52 sq mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்கடல் மட்டம்
குடியேற்றங்கள்சுண்டிக்குளம்

சுண்டிக்குளம் கடல் நீரேரி (Chundikkulam Lagoon) என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டம், மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றில் காணப்படும் ஒரு கடற்காயல் ஆகும். சுண்டிக்குளம் கிராமம் இந்தக் கடற்காயலுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கும் இடையேயுள்ள குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. இக்கடற்காயல் ஆனையிறவு கடல் நீரேரி (Elephant Pass lagoon), அல்லது சுண்டிக்குளம் கடல் நீரேரி அல்லது சுண்டிக்குளம் தொடுவாய் எனவும் அழைக்கப்படுகின்றது.

கனகராயன் ஆறு, நெதெலி ஆறு, தேராவில் ஆறு போன்ற தெற்குப் பகுதி ஆறுகளில் இருந்து இக்கடல் நீரேரிக்கு நீர் வருகின்றது. இது யாழ்ப்பாணக் கடல் நீரேரியுடன் இணைந்திருந்தது, ஆனாலும் ஆனையிறவில் தரைப்பாலம் கட்டப்பட்டதில் இருந்து இது ஒர் ஏரியாகவே கணிக்கப்படுகின்றது. இங்குள்ள நீர் உவர் நீர் ஆகும்.

சுண்டிக்குளம் கடல் நீரேரிப் பகுதி பனை மரங்களினாலும், புதர் நிலத்தினாலும் சூழப்பட்டுள்ளது. இந்நிலம் இறால் பண்ணைகளுக்காகவும் உப்பு தயாரிப்புக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.

இக்கடற்காயலில் அலையாத்திக் காடு மற்றும் கடற்புல் பாத்திகளும் காணப்படுகின்றன. இங்குள்ள பெரும்பாலான பகுதி 1938 ஆம் ஆண்டில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அரிவாள் மூக்கன், வாத்து, நாமக்கோழிகள், ஆலா போன்ற நீர்ப்பறவைகள் ஏராளமாக இங்கு வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  • S.W. Kotagama, Leonard Pinto and Jayampathi L. Samarakoon. "Sri Lanka" (PDF). Wetlands International. Archived from the original (PDF) on 2012-05-16. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2009.