சிறைக்குடி ஆந்தையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறைக்குடி ஆந்தையார் சங்ககாலப் புலவர். இவரது பாடல்கள் ஒன்பது உள்ளன. ஆதன் தந்தை என்னும் சொற்கள் ஒன்றுசேரும்போது ஆந்தை என அமையும் என்று தொல்காப்பியம் சொல்கிறது. சிறைக்குடி இவரது ஊர்.

இவரது பாடல்கள் ஒன்பதும் அகத்திணைப் பாடல்கள். இவற்றில் சில தொல்காப்பிய உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

அழுகல் சின்னீர்[தொகு]

அவள் பொருளீட்டச் செல்லும் என்னோடு வரட்டும். வழியில் வேட்டையாடும் செந்நாய் கலக்கி உண்டபின் எஞ்சியிருக்கும் அழுகிய கொஞ்சம் தண்ணீரை என்னுடன் சேர்ந்து பருகட்டும். இப்படி வரின் அவள் அளியள் - தலைவன் இப்படிச் சொல்கிறான். (குறுந்தொகை 56)

மகன்றில் புணர்ச்சி[தொகு]

நீரில் வாழும் மகன்றில் ஆணும் பெண்ணுமாக இணைந்தே வாழும். இங்கு அவர் பொருளீட்டும் அவர் கடமையைச் செய்யப் பிரிகிறார். நான் ஆற்றியிருக்கும் என் கடமையைச் செய்யவேண்டுமாம். பூ பூக்கும் கால அளவு பிரிய சேர்ந்தாலும் அது ஓராண்டு காலம் கழிவது போல் எனக்குத் தோன்றும். இத்தகைய காமத்தோடு அவரைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. அவர் பிரியும்போதே என் உயிர் 'போகுக தில்ல' - என்கிறாள் தலைவி. (குறுந்தொகை 57)

நறிய நல்லோள் மேனி[தொகு]

* கோடல் = வெண்காந்தள் பூ

கோடல், முல்லை, குவளை ஆகிய மூன்று பூக்களும் இடையிடையே சேர்த்துக் கட்டிய பூமாலை போல மணக்கும் இந்த நல்லவளின் நல்ல மேனி தழுவுவதற்குத் தளிர் போன்று மென்மையாக உள்ளது. - தலைவன் தன் பாங்கனிடம் சொல்கிறான். (குறுந்தொகை 62)

கடுஞ்சுரை நல்லாள்[தொகு]

மிகுதியாகப் பால் சுரக்கும் தாயைக் கண்ட குழவி போல இந்தக் கொடிச்சி என்னை விடாது பற்றிக்கொள்கிறாள். காமம் கொள்ளச் செய்யும் வனப்பு இவளுக்கு இருக்கிறது. அத்துடன் குவிந்த மென்மையான முலையும் இருக்கிறது. (இவளை என்னால் எப்படி மறக்கமுடியும்) என்று தலைவன் தன் பாங்கனிடம் எடுத்துரைக்கிறான். (குறுந்தொகை 132)

புனல் புணை[தொகு]

அவள் தோள் எனக்குத் தண்ணீரில் செய்த படகு போல் உள்ளது. இரவெல்லாம் மழையில் நனைந்த பித்திகைப் பூவை விடியற்காலத்தில் பனமட்டைக் கூடையில் விரித்து வைத்தது போல் குளுமையாகவும் உள்ளது. அதனை மணக்க வாய்பில்லா பிரிவு ஏன்? தணக்க முடியாத மனம் ஒருக்கிறதே! பிரியமாட்டேன். - பொருள் செயச் செல்ல நினைத்த தன் நெஞ்சுக்குத் தலைவன் சொல்கிறான். (குறுந்தொகை 168)

தலைப்புணை, கடைப்புணை[தொகு]

* தலைப்புணை = முன்செல்லும் படகு,
* கடைப்புணை = பின்வரும் படகு
* பித்திகை அல்லது பித்திகம் = செம்முல்லைப் பூ

காதலனைத் தொடர்கிறாள் காதலி. அவன் தலைப்புணையில் சென்றால் அவளும் அதனைப் பற்றிக்கொள்கிறாள், கடைப்புணையில் சென்றால் அவளும் அதனைப் பற்றிக்கொள்கிறாள். புணையைக் கைவிட்டுவிட்டு வெறுமனே நீந்தினால் அவளும் அவ்வாறே நீந்துகிறாள்.எங்களது கண் மழையில் நனைந்திருக்கும் பித்திகை மலர் போல் ஆகிவிட்டது. - காதலன் சொல்கிறான். (குறுந்தொகை 222)

வரைத்தேனும் முடவனும்[தொகு]

மலைப்பாறையில் தேன்கூடு கண்ட முடவன் அதன்மேல் உள்ள ஆசையால் பாறையில் ஏற முயல்வது போல் தலைவன் பொருள்செய்யத் துடிக்கிறான். நாம் அவனுக்குள்ளே இருக்கிறோம். அவனால் பிரியமுடியாது என்று சொல்லித் தோழி தலைவியை ஆற்றுகிக்கிறாள். (குறுந்தொகை 273)

விடல் சூழலன்[தொகு]

மாயோயே! உன் கூந்தலில் குவளை மணம். வாயில் ஆம்பல் மணம். தாமரையில் அமர்ந்திருக்கும் கொக்கு போல் உன் மேனியில் தித்தி அழகு. உலகையே பெறுவதாயினும் இப்படிப்பட்ட உன்னை விட்டு விலக நினைக்கவும்மாட்டேன் என்கிறான் தலைவன். (குறுந்தொகை 300)

எழுமாண் அளக்கும் விழுநிதி[தொகு]

நெஞ்சே! இவளைப் புணந்துகொண்டிருந்தால் பொருள் வராது. இவளைப் பிரிந்தால் புணர்ச்சி இன்பம் கிட்டாது. எனவே நல்லதற்கு உரிமையாகிவிடு. ஏழு படிகளாக அளந்து பார்க்கவேண்டிய பெரு நிதியத்தைப் பெறுவதாக இருந்தாலும், காதுக்குழையை விரும்பிப் பாயும் கண் கொண்ட இவளைப் பிரியமாட்டேன் என்கிறான் தலைவன். (நற்றிணை 16)

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறைக்குடி_ஆந்தையார்&oldid=3179202" இலிருந்து மீள்விக்கப்பட்டது