சத்தியவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சத்யவதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சத்தியவதி மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டி ஆவார். இவர் உபரிசரன் என்ற மன்னனின் மகள். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டன் சாந்தனுவின் இரண்டாவது மனைவி. வேதங்களையும் மகாபாரதத்தையும் தொகுத்தவருமான வியாசரை இளவயதில் பெற்றெடுத்தத் தாய், மிகப் பெரிய குரு வம்சத்தின் இராஜமாதா ஆவார்.

மீனின் மகள்[தொகு]

உபரிசரன் ஒரு நாள் வேட்டை முடிந்து ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்த போது தன் மனைவியோடு இன்பமாக இருப்பது போல் நினைத்துக்கொள்ள உடனே அவரிடமிருந்து விந்து வெளிபட்டுவிடவே, அதை வீணாக்க மனம் இன்றி ஓர் இலையில் விட்டு ஒரு கிளியிடம் கொடுத்து தன் மனைவியிடம் கொடுக்கக் கேட்டுக் கொள்ள, அதை எடுத்துக் கொண்டு கிளி பறந்த போது கிளியை ஒரு பருந்து தாக்கிவிட, இலையிலிருந்த விந்து கடலில் விழுந்து விட, அதை ஒரு மீன் உண்டு விடுகிறது. அந்த மீன் பிரம்மாவின் சாபத்தால் மனித குழந்தைகளைப் பெறும் வரை மீனாக இருந்த அப்ஸர கன்னிகையாகும்.[1]

சில நாட்களுக்குப் பின் செம்படவ மீனவர்கள் அந்த மீனை பிடித்தபோது அதன் வயிற்றில் ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் இருக்கக் கண்டு மன்னன் உபரிசரனிடம் கொடுத்தனர். ஆண் குழந்தையை எற்றுக் கொண்டு, பெண் குழந்தையை மீனவர்கள் வசம் வளர்க்க கூறிவிட்டார். அந்த மீனவத்தலைவன் சத்தியவதி என்றே அழைத்து வந்தான். அவளிடமிருந்து மீன் வாடை வீசியதால் மத்ஸ்யகந்தா எனப் பெயரிட்டு கிண்டலாக கொஞ்சுவான்.

மத்ஸ்யகந்தா கங்கையின் இக்கரையிலிருந்து எதிர்க் கரைக்கு படகில் மக்களை ஏற்றியும், எதிர்கரையிலிருப்பவர்களை இக்கரைக்கும் ஏற்றிச் செல்வாள். ஒரு நாள் படகில் முனிவர் பராசரர் பயணம் செய்தார். பாதி பயணத்தின் போது சத்தியவதியின் மீது மோகம் கொண்டு படகைச் சுற்றி பனிப் படலம் ஏற்படுத்தி யாரும் அறியாமல் தாயாகிப் பின்னர் கன்னியும் ஆகி விடுவாய் என்றும் அவளிடமுள்ள மீன் வாடையும் போகுமென்றும் உறுதியளித்தார். சத்தியவதி உடன்படவே அவரது தவவலிமையால் படகு எதிர்கரையை அடையும் முன் மத்ஸயகந்தா தாயாகியும், பின் கன்னியும் ஆனாள். படகு பயணத்தின் போது மத்ஸ்யகந்தாவுக்கும் பராசர முனிவருக்கும் பிறந்தவரே கிருஷ்ண த்வைபாயனன் என்ற வியாசர் ஆவார். இவரை சத்தியவதி யமுனை ஆற்றின் ஒரு தீவில் பெற்றெடுத்தார். பின்னாளில் இவரே மகாபாரதத்தை எழுதினார். இச்சம்பவத்திற்குப் பின் மத்ஸ்யகந்தாவின் புதிய வாசனை மிகுந்த உடல் அத்தினாபுரத்தின் அரசரான சாந்தனுவை ஈர்த்தது. சத்தியவதியை மணந்துகொள்ள விரும்பினார். மணம் செய்துகொண்டால் தனது பிள்ளைகள் நாடாள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சத்தியவதி சந்தனுவை மணம் செய்துகொண்டார். சித்திராங்தனும், விசித்திரவீரியனும் இவர்களுடைய மகன்கள் ஆவர்.

இராஜமாதா[தொகு]

சித்திராங்கதன் திருமணம் செய்துகொள்ளாமலேயே இதே பெயர் கொண்ட சித்திராங்கதன் என்ற ஒரு கந்தர்வனுடன் நடந்த போரில் கொல்லப்பட்டான். தொடர்ந்து விசித்திரவீரியன் ஆட்சிக்கு வந்தான். மிகவும் பலவீனமானவன் தனக்கென ஒரு மனைவியைக் கூட தேடிக் கொள்ள முடியாதவன் என்றும், எந்த பெண்ணுக்கும் கணவனாகும் தகுதியற்றவன் என்றும், தனது சகோதரியை மணம் முடிக்க மறுத்து பீஷ்மர் பிரம்மசர்யம் அனுசரித்ததால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாய் சுயம்வர ஓலையை காசி மன்னன் அனுப்பவில்லை. தனக்கு அழைப்பு அனுப்பாதது தனது குலத்தையே அவமானப்படுத்துவதாகக் கருதிய பீஷ்மர் அம்பை, அம்பிகா, அம்பலிகா ஆகிய மூவரையும் கவர்ந்து வந்துவிட்டார். அம்பா மட்டும் சால்வநாட்டு அரசனை விரும்பியதால் மற்ற இருவரையும் விசித்திரவீரியனுக்கு மணம் முடித்து வைத்தார். சிறிது காலத்திலேயே குழந்தைகள் பிறக்கும் முன்பே விசித்திரவீரியன் மரணமடைந்த நிலையில், ஒரு பெரிய குரு வம்சத்தின் இராஜமாதாவாகும் கனவு சிதைந்து ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் கங்கையின் மைந்தன் பீஷ்மரிடம் போய் தனது விதவை மருமகள்களை கருத்தரிக்கச் செய்ய வேண்டி என் மகன் செய்ய முடியாததை நீங்கள் செய்யுங்கள் என்று கெஞ்சுகிறாள். பீஷ்மர் தான்செய்து கொண்டுள்ள சபதத்தையும், ஏற்றுக்கொண்டுள்ள பிரம்மச்சரியத்தையும் காரணம் காட்டி மறுத்துவிட தனது மூத்த மகன் கிருஷ்ண த்வைபாயனனை வியாசர் அழைத்து தனது மருமகள்களை கருத்தரிக்கச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடுகிறாள்.

கௌரவர்களும், பாண்டவர்களும்[தொகு]

தாய் சத்தியவதியின் கட்டளைப்படி வியாசர் முதலில் அம்பிகையிடம் சென்றார். 14 ஆண்டுகள் காட்டில் சந்நியாசியாக இருந்த அவரது சிகை சடையாகவும், சருமம் வறண்டும் பார்ப்பதற்கு கர்ண கொடூரமாக காட்சியளித்தார். அம்பிகை அவரைக் கண்டதும் வெறுப்படைந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள், அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாக பிறந்தது. அக்குழந்தைக்கு திருதராட்டிரன் எனப் பெயரிட்டனர். அடுத்ததாக வியாசர் அம்பாலிகையிடம் சென்றார் அவரது தோற்றத்தைக் கண்ட அவள் வெளிறி வெலவெலத்துப் போனாள், அவளுக்கு பிறந்த குழந்தை பலவீனமாக பிறந்தது, அக்குழந்தைக்கு பாண்டு என பெயரிட்டனர். தனக்குக் குறையுள்ள பேரன்கள் பிறந்ததால் ஏமாற்றமடைந்த சத்தியவதி மீண்டும் அம்பிகையிடம் " செல் இந்த முறை அவள் கண்களை மூடிக்கொள்ள மாட்டாள்" என்று வியாசரிடம் கூறினாள். வியாசர் மறுக்காமல் செய்தார். இம்முறை படுக்கையில் அவளது பணிப்பெண் எந்த அச்சமுமின்றி அவருடன் முயங்கினாள். அவளுக்கு ஆரோக்கியமாகவும் புத்திசாலியாகவும் குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு விதுரன் எனப் பெயரிட்டனர். திருதராஷ்டிரனின் 100 குழந்தைகளை கௌரவர்கள் என்றும், பாண்டுவின் ஐந்து குழந்தைகளை பாண்டவர்கள் என்றும் அத்தினாபுரத்து மக்கள் அழைத்தனர்.

வியாசர்[தொகு]

மகாபாரதம் என்ற தனது வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் பதிவு செய்த, அக்காலத்தின் சமூக அமைப்பை, சமூக சட்டங்களை, சமூக எண்ண ஓட்டங்களை அறிந்த, சமூக வக்கிரங்களை நியதிகளாக மாற்ற அடுத்து, அடுத்து கதை மாந்தர்களை படைத்த, பல ஆயிரமாண்டுகளாக கால ஓட்டத்தை வென்று நிற்கிற ஓர் கதை சொல்லி (படைப்பாளி). அதாவது ஓடும் நதி நீரிலிருந்து ஆள், ஆளுக்கு அள்ளி பருகிய பின்னர், மேலும் பாய்ந்து கண்மாய், குளம், ஏரி, கடல் எனக் கலந்து விட்டாலும் மூல நதி மட்டும் மாறாமல் இருப்பது போல, அனைவரும் தன் மனம் போன போக்குக்கு இழுத்தாலும் சிதைந்து போகாமல் உயர்ந்து நிற்கிற இந்தியப் பண்பாட்டை உலகுக்குச் சொன்ன ஓர் அற்புத படைப்பாளி.

சான்றாவணம்[தொகு]

  1. Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியவதி&oldid=3801613" இலிருந்து மீள்விக்கப்பட்டது