கொல்லைப்படுத்தல்
கொல்லைப்படுத்தல் (Domestication) என்பது, விலங்குகள் அல்லது தாவரங்கள் கட்டுப்பாடான சூழலுக்கு, இயைபாக்கம் அடையும் செயல்முறையைக் குறிக்கும். இது பொதுவாகத் தேர்வு முறை மூலம் நடைபெறுகின்றது. மிகப் பொதுவான கொல்லைப்படுத்தல் முறை மனிதர்களின் செயற்கை முறைத் தேர்வு ஆகும். இவ் விலங்குகளையும் தாவரங்களையும் மனிதர்கள் பல காரணங்களுக்காகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள்:
- உணவை அல்லது பெறுமதி வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்காக. (கம்பளி, பருத்தி, பட்டு போன்றவை.)
- பலவகை வேலைகளில் உதவி பெற்றுக் கொள்வதற்காக. (போக்குவரத்து, பாதுகாப்பு முதலியன.)
- தங்களையும் பிற கால்நடைகளையும் பாதுகாப்பதற்காக.
- வளர்ப்பு விலங்குகளாக்கி மகிழ்வதற்காக. (நாய், பூனை முதலியன)
- அழகுக்காக (அழகூட்டல் தாவரங்கள்)
அழகூட்டல் தேவைகளுக்காகக் கொல்லைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கும் பிற கட்டிடங்களுக்கும் உள்ளேயும் சுற்றாடலிலும் வளர்க்கப்படும் தாவரங்கள் வீட்டுத் தாவரங்கள் அல்லது அழகூட்டல் தாவரங்கள் எனப்படுகின்றன. உணவு உற்பத்திக்காகப் பெருமளவில் கொல்லைப்படுத்தப்படும் தாவரங்கள் பயிர்கள் எனப்படுகின்றன. விருப்பமான இயல்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டுமென்றே மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது தேர்வு செய்யப்பட்ட கொல்லைப்படுத்தப்பட்ட தாவரங்களையும், காட்டுத் தாவரங்களில் இருந்து அதிகம் வேறுபடாத கொல்லைப்படுத்தப்பட்ட தாவரங்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியும். இதுபோலவே வீட்டுத் துணைக்காகக் கொல்லைப்படுத்தப்படும் விலங்குகள் செல்லப் பிராணிகள் எனவும், உணவுக்காகவும், வேலைகளில் உதவுவதற்காகவும் வளர்க்கப்படுவன கால்நடைகள் அல்லது தோட்ட விலங்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன.