கொடுமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடுமணம், பந்தர் ஆகிய இரண்டு ஊர்களும் சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் இணையாகவே குறிப்பிடப்படுகின்றன. இவை இரண்டுமே அரபிக் கடலோரத் துறைமுகங்கள்.

கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் பந்தர் துறைமுகத்தை Balita எனக் குறிப்பிடுகிறார்.[1]
சங்ககாலத்து அரபிக்கடலோரத் துறைமுகங்களை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரிசைப்படுத்தினால் முசிறி, தொண்டி, (கொடுமணம்), பந்தர், குமரி என அமையும் எனப் பெரிப்ளஸ் குறிப்பு காட்டுகிறது.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் [2] சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்[3] காலத்திலும், அவன் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை[4] காலத்திலும் கொடுமணம் துறைமுகத்தைப் பகுதியாகக் கொண்ட பந்தர் துறைமுகம் செல்வாக்கினைப் பெற்றிருந்தது. இவர்களது முன்னோனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் [5] அட்சிக் காலத்தில் தொண்டித் துறைமுகம் செல்வாக்குடன் திகழ்ந்தது. [6] பாண்டிய நாட்டுக் கிழக்குக் கடற்கரை கொற்கை முத்தும், சேரநாட்டு மேற்குக் கடற்கரைப் பந்தர் முத்தும் பெரிதும் போற்றப்பட்டன.

பந்தர் என்னும் ஊரில் விலை உயர்ந்த அணிகலன்கள் அணியப்படாமல் துஞ்சிக் கிடந்தனவாம். [7]

கொடுமணம் துறைமுகத்தில் இறக்கப்பட்ட வேலைப்பாடு மிக்க அரிய கலைப்பொருள்கள் பாண்டில் என்னும் வண்டிகளில் ஏற்றி மேற்குத் தொடர்ச்சிமலை வழியாக உள்நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. [8]

பாணர்கள் பலர் கொடுமணம் என்னும் ஊரில் வாழ்ந்தனராம். அவர்கள் அவ்வூரிலிருந்த செல்வப் பெருமக்களிடம் கடன் பெற்றுத் திருப்பித் தர முடியாமல் நெடுமொழி (சாக்குப்போக்கு) கூறிவந்தனராம். அவர்கள் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த பந்தர் என்னும் ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் தென்கடல் முத்தும் சிறந்த அணிகலன்களும் பரிசாகப் பெற்றுவந்து தம் கடும்பு என்னும் கூட்டுக் குடும்ப உறவினர்களின் கடன்களையும் தீர்த்துவிட்டு மகிழ்வாக வாழலாமாம். இவ்வாறு பாணரை ஆற்றுப்படுத்தும் பாடல் ஒன்றைக் கபிலர் பாடியுள்ளார்.[9]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. 58. Beyond Bacare there is the Dark Red Mountain, and another district stretching along the coast toward the south, called Paralia. The first place is called Balita; it has a fine harbor and a village by the shore. Beyond this there is another place called Comari at which are the Cape of Comari [=Cape Comorin] and a harbor; hither come those men who wish to consecrate themselves for the rest of their lives, and bathe and dwell in celibacy; and women also do the same; for it is told that a goddess once dwelt here and bathed. - The Periplus Maris Erythraei (or ‘Voyage around the Erythraean Sea’) is an anonymous work from around the middle of the first century CE written by a Greek speaking Egyptian merchant.
  2. பதிற்றுப்பத்து ஆறாம்பத்தின் தலைவன்
  3. பதிற்றுப்பத்து ஏழாம் பத்தின் தலைவன்
  4. பதிற்றுப்பத்து எட்டாம் பத்தின் தலைவன்
  5. பதிற்றுப்பத்து ஆறாம் பத்தின் தலைவன்
  6. பதிற்றுப்பத்து ஆறாம்பத்து பதிகம்
  7. புணரி இரங்கும் பௌவத்து நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் - பதிற்றுப்பத்து 55
  8. கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம், பந்தர்ப் பயந்த பயங்கெழு முத்தும், வரையகம் நண்ணி, குறும்பொறை நாடித் தெரியுநர் கொண்டனர், அரிசில் கிழார் – பதிற்றுப்பத்து 74
  9. கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர் கடன்றி மரபின் கைவல் பாண, தென்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை – கபிலர், பாணாற்றுப்படை - பதிற்றுப்பத்து 67
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுமணம்&oldid=3091025" இலிருந்து மீள்விக்கப்பட்டது