குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது[1]. ஐ.எல்.ஓ வின் 138[2] மற்றும் 182வது[3] உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

நோக்கம்[தொகு]

இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் ௧௪ வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்[தொகு]

குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பதிப்புகளை முன்று வகையாக பிரித்துள்ளது.

  • உடல் ரீதியான பாதிப்பு
  • உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு மற்றும்
  • உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு

உடல் ரீதியான பாதிப்பு[தொகு]

கொடிய வறுமை, உட்டசத்துக் குறைவு, கல்வியறிவு பெற முடியாத நிலை, உடல் நலனை பாதிக்கக் கூடிய ஆபத்தான சூழல், காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை போன்றவை சிறார்களின் உடல் நலனைப் பெரிதும் பாதிப்பதால் ஆஸ்துமா, காசநோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர்.

உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு[தொகு]

மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சிறார்களை மிகவும் கடுமையாக பாதிக்கின்றன.

உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு[தொகு]

கல்வியறிவு பெறமுடியாமல் வறுமையை விரட்ட எண்ணி சிறுவயது முதல் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் இவர்களால் சமுதாயத்தில் கடைசி வரை ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் சமுகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சங்கள்[தொகு]

  • சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் .
  • சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்
  • கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
  • பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்.
  • "குழந்தைகள் உங்களுக்குப் பிறந்தவர்கள் தான், ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல" என்பதை பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ILO Website about the day
  2. "Text of ILO Convention 138". Archived from the original on 2012-08-03. பார்க்கப்பட்ட நாள் 2012-04-12.
  3. Text of ILO Convention 182