கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ராஜமாணிக்கம் பிள்ளை
பிறப்பு(1898-08-05)ஆகத்து 5, 1898
பிறப்பிடம்ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம், இந்தியா
இறப்புநவம்பர் 1970 (அகவை 72)
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)வயலின் வாத்தியக்கலைஞர்
இசைத்துறையில்1910 - 1970

கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை (Kumbakonam Rajamanickam Pillai; 5 ஆகத்து 1898 – நவம்பர் 1970) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் ஆவார்.

இளமைக்காலம்[தொகு]

இவர் தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள நீடாமங்கலத்தின் அருகாமையில் அமைந்துள்ள ஆலங்குடி[கு 1] என்னும் கிராமத்தில் ஒரு இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். தாயார் பெயர் கமலத்தம்மாள். தனது மகனின் இசைத் திறமையை வளர்த்துவிட வேண்டுமென்பதில் தாயார் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார்.[1] ராஜமாணிக்கம் பிள்ளை முதலில் நாதசுவரம் கந்தசுவாமிப் பிள்ளையிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ளத் தொடங்கினார். பின்னர் திருவிசநல்லூர் பல்லவி நாராயணசுவாமி ஐயரிடமும், பந்தநல்லூர் சின்னசுவாமி பிள்ளையிடமும் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார். திருக்கோடிக்காவல் இராமசுவாமி ஐயரிடம் நான்கு வருடங்கள் வயலின் கற்றுக் கொண்டார். அவரது இசைத்திறமைக்கு வாய்ப்பாட்டை விட வயலின் பொருத்தமாக இருப்பதாக ஆசிரியர்கள் ஆலோசனை சொன்னதால் வாய்ப்பாட்டை விட்டு வயலின் வாசிப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்தினார்.[2]

இசை வழி[தொகு]

கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை சாஸ்திரீய கருநாடக இசையிலேயே கவனம் செலுத்தினார். அவர் ஒருபோதும் வயலினில் திடீர் ஒலிகளை எழுப்புதல், விளையாட்டுகள் காட்டல் போன்றவற்றில் ஈடுபட்டதில்லை. அவர் பிறந்த மண்ணில் ஓடும் காவிரியைப் போல கம்பீரமாக ஆனால் அடக்கத்துடனும் சீராகவும் அவரது இசை ஒலிக்கும். பக்கவாத்தியமாக வாசிக்கும்போது அவரது வயலின் இசை வித்துவானின் குரலை மேவாமல், அதனோடு இழைந்து செல்லும். 'தான் இருக்கிறேன்' என்று காட்டிக் கொள்வதை விட கச்சேரி வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதே அவரின் அக்கறையாக இருக்கும்.[3]

குணாதிசயம்[தொகு]

பழகுவதற்கு இனியவர், மேடையில் ஆடம்பரமற்ற அமைதியான தோற்றம், வயலின் வாசிப்பில் உன்னதம் - இவையே அவரின் குணாதிசயம். அவரது காலத்தைய எல்லாப் பிரபல வித்துவான்களுக்கும் அவர் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார். அதே சமயம் இளம் வித்துவான்களுக்கு வாசிக்கவும் அவர் பின்னிற்பதில்லை.[3]

விருதுகளும், சிறப்புகளும்[தொகு]

சிறப்புகள்[தொகு]

இராமநாதபுரம், கொச்சின், எட்டயபுரம், திருவனந்தபுரம், மைசூர் சமஸ்தான அரச சபைகளில் அவருக்கு பாராட்டு கிடைத்துள்ளது. 1940 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் அரண்மனையிலும், 1942 ஆம் ஆண்டு எட்டயபுரம் அரண்மனையிலும் ஆஸ்தான வித்துவானாக நியமனம் பெற்றார்.[3] திருவனந்தபுரம் சித்திரைத் திருநாள் மகாராஜா இவரைப் பாராட்டி ஒரு யானை பரிசளித்தார்.[4] (அந்த யானையை கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயிலுக்கு அர்ப்பணித்து விட்டார்.)

விருதுகள்[தொகு]

மாணாக்கர்கள்[தொகு]

இவரது மாணாக்கர்களில் பிரபலமானவர்கள்: எம். எம். தண்டபாணி தேசிகர், மாயவரம் கோவிந்தராஜ பிள்ளை ஆகியோராவர்.[3] திரைப்பட நடிகர் தியாகு இவரது பெயரன் ஆவார்.[7]

குறிப்புகள்[தொகு]

  1. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி என்ற சட்டமன்ற தொகுதி (வேறு) உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. KUMBAKONAM RAJAMANICKAM PILLAI RENOWNED VIOLINIST.............(August 5, 1898-1970)
  2. "Carnatic Instrumentalists". Archived from the original on 2021-10-16. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
  3. 3.0 3.1 3.2 3.3 "KUMBAKONAM RAJAMANICKAM PILLAI (08-1898 – 1970)". Archived from the original on 2014-07-26. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
  4. "நூல் விமர்சனம்". Archived from the original on 2014-03-10. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
  5. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  6. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 23 டிசம்பர் 2018. Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  7. "அ.தி.மு.க. அல்லது தே.மு.தி.க.வில் சேருவேன்: நடிகர் தியாகு". Archived from the original on 2014-03-10. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.

வெளி இணைப்புகள்[தொகு]