கி. வீரமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி. வீரமணி
கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
முன்னையவர்மணியம்மை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 திசம்பர் 1933 (1933-12-02) (அகவை 90)
கடலூர் முதுநகர்,
சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா)
அரசியல் கட்சிதிராவிடர் கழகம்
துணைவர்மோகனா
பிள்ளைகள்அன்புராஜ் மற்றும் ஒரு மகன் & 2 மகள்கள்
இணையத்தளம்http://kveeramani.com
http://kveeramani.com/childprodigy-ta.php

கி. வீரமணி (K. Veeramani, பிறப்பு: 02 டிசம்பர் 1933) திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் பெரியாரால் 1962 இல் நியமிக்கப்பட்டவர்.[சான்று தேவை] பெரியாரின் மறைவுக்குப்பின்பும், மணியம்மையாரின் மறைவுக்குப்பின்பும் தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வருகிறார்.[சான்று தேவை] 2003 ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்.[சான்று தேவை] ஆங்கிலத்தில் (The Modern Rationalist) மாத இதழ், தமிழில் விடுதலை (நாளேடு), உண்மை (மாதமிருமுறை ஏடு), பெரியார் பிஞ்சு (குழந்தைகளுக்கான மாத ஏடு) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து வருகிறார். பெரியார் அறக்கட்டளை மூலம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். தமிழகத்தையும் தாண்டி வெளிநாடுகளிலும் பெரியாரின் கொள்கைகளை பரப்பி வருகிறார்.[சான்று தேவை]

வாழ்க்கை குறிப்பு

தென் ஆற்காடு மாவட்டம், கடலூர் அருகே பழையபட்டினத்தில் வாழ்ந்த சி. எஸ். கிருஷ்ணசாமி - மீனாட்சி தம்பதியருக்கு 2 டிசம்பர் 1933 அன்று மூன்றாவது மகனாக பிறந்தவர் வீரமணி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி ஆகும்.[1]12 வயதில் காரைக்குடியில் நடைபெற்ற இராமநாதபுர மாவட்ட முதலாவது திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றினார். 17 வயதிற்குள் கலந்து கொண்ட நிகழ்வுகள் 227, கலந்து கொண்ட மாநாடுகள் 16, பயணம் செய்த தூரம் 23422 கி.மீ. 23 வயதில் முதுகலை வகுப்பினை முடித்து முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். 25 வயதில் கடலூர் திராவிடநாடு பிரிவினை மாநாட்டிற்கு வருகை புரிந்தோரின் உடைமைகளைப் பாதுகாக்கும் பணியினைச் செய்தார்.

27 வயதில் சட்ட மேற்படிப்புக் கல்வியை முடித்ததோடு தேசப்பட எரிப்புப் போரிலும் ஈடுபட்டு பெரியாருடன் தடுப்புக் காவல் சட்டப்படி கைதானார். திராவிடர் கழக பொதுச்செயலாளராகவும் ஆனார். 29 வயதில் விடுதலை நாளிதழின் நிருவாக ஆசிரியர் பொறுப்பேற்றார். 38 வயதில் ஆங்கில மாத இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். 43 வயதில் நெருக்கடி நிலையில் (மிசா) கைது செய்யப்பட்டு 358 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 65 வயதில் (1998) பெரியார் பிஞ்சு குழந்தைகள் இதழைத் தொடங்கி ஆசிரியர் பொறுப்பேற்றார்.

குடும்பம்

கி. வீரமணி, 1958-இல் -மோகனா என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்களும் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். மகன்களில் ஒருவரான அன்புராஜ் 2009-ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழக தலைமை நிலையச் செய்லாளராக பதவியில் உள்ளார்.[2]மேலும் அன்புராஜ் பெரியார், மணியம்மை அறக்கட்டளைகளில் பதவிகள் வகிக்கிறார்.

ஆசிரியர் பணி

1962 இல் விடுதலை நாளிதழ் ஆசிரியர் குத்தூசி குருசாமி பொறுப்பு விலகிய நிலையில் பொறுப்பேற்ற இவர், தொடர்ந்து 50 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார். 4 பக்கங்களுடன் சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த விடுதலை -இன்று எட்டு பக்கங்களுடன் சென்னை, திருச்சி என இரண்டு பதிப்புகளில் வெளி வந்து கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, உண்மை, பெரியார் பிஞ்சு, ஆங்கில (The Modern Rationalist) இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இணைய தளங்கள் மூலமாகவும் மேற்கண்ட இதழ்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைப் பரப்புகின்றார்.

வீரமணி மீதான குற்றச்சாட்டுகள்

  • பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் போன்றவர்கள் ஈ. வெ. இராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கைகளை பரப்புவதற்கு, குடி அரசு இதழில் ஈ. வெ. இராமசாமி எழுதிய கட்டுரைகளைத் தொகுப்பை மலிவு விலையில் நூலாக வெளியிட முயற்சி மேற்கொண்டனர். இம்முயற்சிக்கு கி.வீரமணி தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பெரியாரின் சொத்துக்களை நிர்வகிப்பதில், அவர் தலைவாரயிருந்த பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்குத் தான் உரிமை என்றும், பெரியாரின் எழுத்துக்களும் அவருக்கே சொந்தம் என்றும், வேறு யாரும் பெரியார் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று கூறினார். 2009-இல் இவ்வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தன் தீர்ப்புரையில், “பெரியார் இரண்டு உலகப் போர்களுக்கிடையேயான காலகட்டத்தில் குடியரசு இதழை கொண்டு வந்தார். இதற்காக ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். எந்தவித பலனையும் எதிர்பாராமல் சமூக சீர்திருத்தத்துக்கான தனது பணியை தொடர்ந்தார். 2009-ஆம் ஆண்டு, பெரியாரின் 130வது ஆண்டு. இந்த ஆண்டில், பெரியாரின் எழுத்துக்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவது மிகுந்த வேதனையை தருகிறது. இவ்வழக்குகளால், பெரியாரின் சிந்தனைகள், நீதிமன்ற கோப்புகளுக்குள் முடங்கி விடக் கூடாது என்று கூறியுள்ளது. [5] இதை எதிர்த்து, வீரமணி, மேல் முறையீடு செய்து, இத்தீர்ப்புக்கு தடையாணை பெற்றார்.

வகிக்கும் பதவிகள்

  1. தலைவர் - திராவிடர் கழகம்
  2. ஆசிரியர் - விடுதலை நாளிதழ்
  3. ஆசிரியர் - உண்மை (இதழ்) (மாதம் இரு முறை)
  4. ஆசிரிய - பெரியார் பிஞ்சு (இதழ்) (குழந்தைகளுக்கானது)
  5. தலைவர் - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்
  6. துணை வேந்தர் - பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  7. தலைவர் - பெரியார் திடல்
  8. தலைவர் - பெரியார் பொது அறக்கட்டளை
  9. தலைவர் - பெரியார் ஈ. வெ. இராமசாமி-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை[6]
  10. தலைவர் - பெரியார் மையம், புது தில்லி
  11. தலைவர்: அ) பெரியார் இந்திய ஆட்சிப் பணி & இந்தியக் காவல் பணி பயிற்சி மையம், சென்னை. ஆ) பெரியார் மணியம்மை மருத்துவமனைகள் - திருச்சி, தஞ்சாவூர், சோழங்கநல்லூர் மற்றும் சேலம். இ) பெரியார் சுயமரியாதை திருமண மையம், சென்னை. ஈ) பெரியார் புரம், வல்லம்

படைப்புகள்

  • கீதையின் மறுபக்கம்[7]
  • மகாபாரத ஆராய்ச்சி[7]
  • உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?[7]
  • திராவிட பண்பாட்டை பாதுகாப்போம்![7]
  • திராவிடர் மாணவர் கழகத்தில் சேர வேண்டும்![7]
  • திராவிடர் கழகத்தில் சேர வேண்டும்-ஏன்?[7]
  • தமிழர் சமூக விழிப்புணர்வுக்கான எழுச்சிப் பயணம் ஏன்?[7]
  • 'சன்' தொலைக்காட்சிக்கு-வீரமணி பேட்டி[7]
  • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 1[7]
  • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 2[7]
  • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 3[7]
  • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 4[7]
  • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 5[7]
  • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 6[7]
  • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 7[7]
  • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 8[7]
  • வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 9[7]
  • காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?[7]
  • கீதையும் திராவிட பண்பாடும்[7]
  • நாடாளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்?[7]
  • 21-ம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே![7]
  • போக்குவரத்து கழக தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் - ஏன்?[7]
  • கோயில்கள் கோபுரங்கள் ஏன்? எதற்காக?[7]
  • கல்லூரிகளில் சோதிட மூடநம்பிக்கையா?[7]
  • புட்டபர்த்தி சாய்பாபா...?[7]
  • இட ஒதுக்கீடு பற்றிய கேள்விகளுக்கு பதில்கள்[7]
  • உலகெங்கும் நமது கொள்கை[7]
  • வீரமணியின் செவ்வி(பேட்டி)கள்[7]
  • மனிதநேயமும் - நாகரிகமும்[7]
  • தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை[7]
  • தேவை பாலியல் நீதி[7]
  • சக்தி வழிபாடு[7]
  • மூடநம்பிக்கைகள்[7]
  • சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே![7]
  • மீனாட்சிபுரத்தில் மத மாற்றம் ஏன்?[7]
  • வெள்ளி முளைக்கட்டும் விடியல் பிறக்கட்டும்[7]
  • தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் - ஏன்?[7]
  • சிதம்பர ரகசியம்[7]
  • கழகமும் பிரச்சாரமும்[7]
  • இலட்சியத்தை நோக்கி...[7]
  • பிரார்த்தனை மோசடி[7]
  • ஈழத் தமிழர் பிரச்சனை சில உண்மைகள்[7]
  • தந்தை பெரியாரும் சில புரட்டுகளும் உண்மைத் தகவல்களும்[7]
  • இந்திய அரசியல் சட்ட முதல் திருத்தம் ஏன்? எதற்காக?[7]
  • தமிழக முன்னோடிகளில் தந்தை பெரியார்[7]
  • சமூக நீதி[7]
  • மலேசியா - சிங்கப்பூர் தமிழர்களிடையே வீரமணி விரிவுரை[7]
  • திராவிடர் கழகத்தில் மகளிர் சேர வேண்டும் ஏன்?[7]
  • பகவத் கீதை இதுதான்[7]
  • பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்[7]
  • கி.வீரமணி பதில்கள்[7]
  • எனது மரண சாசனம்[7]
  • கோயில்கள் தோன்றியது ஏன்?[7]
  • அருண்ஷேரியின் அம்பேத்கார் பற்றிய நூலுக்கு மறுப்பு[7]
  • வர்ணதர்மமும் பெண்ணடிமையும்[7]
  • அறிஞர் அண்ணா[7]
  • வகுப்புரிமை வரலாறு[7]
  • காவிரிப் பிரச்சனை தீர்ந்துவிட்டதா?[7]
  • வைக்கம் போராட்ட வரலாறு[7]
  • டாக்டர் அம்பேத்கார் புத்தநெறியை தழுவியது ஏன்?[7]
  • தந்தை பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி[7]
  • வாழ்வியல்[7]
  • பெரியாரின் சமுதாய அறிவியல் பார்வை[7]
  • காஞ்சி சங்கராச்சியார் - யார்? ஓர் ஆய்வு[7]
  • வெறுக்கத்தக்கதே பிராமணியம்[7]
  • கீதையின் மறுப்பக்கம் மக்கள் பதிப்பு[7]
  • காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்[7]
  • பெரியாரியல் பாகம் 1 முதல் 5 வரை[7]
  • பெரியாரியல் ஆய்வுரைகள்[7]
  • கி.வீரமணியின் ஆய்வுரைகள் - 1996[7]
  • கி.வீரமணியின் ஆய்வுரைகள் - 1997[7]
  • கி.வீரமணியின் ஆய்வுரைகள் - 1998[7]
  • சுயமரியாதை திருமணம் - தத்துவமும் வரலாறும்[7]
  • பெரியார் ஆயிரம் வினா விடை[7]
  • "டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் - புத்தகக் காதலும்"-2017

சிறைவாசம்

  1. 1956இல் ராமன் படத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
  2. 1960இல் தேசப்படத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
  3. 1974இல் இராவணலீலா போராட்டத்தில் கைதானார்.
  4. 31. சனவரி 1976 முதல் 23. சனவரி 1977 வரை மிசா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
  5. 31. அக்டோபர் 1977 இந்திரா காந்திக்கு கருப்புக்கொடி காட்டி கைதானார்.
  6. நாகம்மையாரைப்பற்றி அவதூறு எழுதிய ஆஸ்தான கவி கண்ணதாசனை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தியதற்கு 22. மார்ச் 1979 முதல் 4. ஏப்ரல் 1979 வரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
  7. 1981இல் மனுதர்ம சாத்திரத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
  8. 16.03.1982இல் இஸ்மாயில், சோமசுந்தரம் கமிஷன்களின் பரிந்துரைகளை அமலாக்கக் கோரி கோட்டை முன் மறியல் செய்து கைதானார்.
  9. 23.01.1983இல் ஜெயவர்த்தனேவிற்கு கருப்புக்கொடி காட்டியதற்கு கைது செய்யப்பட்டார்.
  10. 09.08.1984இல் மண்டல் குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி இந்திராகாந்தி வீட்டு முன் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.
  11. ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஆகஸ்டு 15 அய் (1984) துக்க நாளாகக் கருதி திருச்சியில் கருப்புக்கொடி ஏற்றியதற்கு கைது செய்யப்பட்டார்.
  12. ஈழத்தில் ராணுவத்தை அனுப்பச் சொல்வது முட்டாள்தனமானது என்று கூறிய துணைக் குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு 07.09.1984இல் சென்னையில் கருப்புக் கொடி காட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.
  13. 13.12.1984இல் தமிழக மீனவர்களை சிங்களக்கடற்படை வேட்டையாடுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் மறியல் செய்து கைதானார்.
  14. 22.09.1985இல் இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை அழித்துப்போராட்டம் நடத்தியதற்கு கைது செய்யப்பட்டார்.
  15. காவிரி நீருக்காக திருவாரூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் செய்து 30. அக்டோபர் 1985 முதல் 5. நவம்பர் 1985 வரை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
  16. புதிய கல்வித்திட்ட நகல் எரித்ததற்கு 22. சூன் 1986 முதல் 4. சூலை 1986 வரை சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
  17. 7. அக்டோபர் 1986 இல் டில்லியில் மண்டல் குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
  18. 20.02.1987இல் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக கப்பல் மறியல் செய்து தூத்துக்குடியில் கைதானார்.
  19. 01.06.1987இல் ஈழத் தமிழருக்காக ரயில் மறியல் செய்து சென்னையில் கைதானார்.
  20. 02.08.1987இல் ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்த நகல் எரித்து சிறை சென்றார்.
  21. ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரம் செய்த தொலைக்காட்சி நிலையம் முன் மறியல் செய்ததற்கு 26.10.1987முதல் 4. நவம்பர் 1987 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.
  22. 25.01.1988இல் இந்தியக் குடியரசு நாள் விருந்தினராக வந்த ஜெயவர்த்தனேயை எதிர்த்து கொடும்பாவி எரித்து வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றச் சொல்லி போராட்டம் செய்து கைதானார்.
  23. 21.03.1988இல் ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து மதச் சார்பின்மைக்கு மாறாக ஒவ்வொரு முறையும் சங்கராச்சாரியிடம் செல்லும் குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி காட்டி சென்னை கிண்டியில் கைதானார்.
  24. 10.09.1988இல் விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவை சந்திக்கச் செல்கையில் கைதானார்.
  25. 08.11.1988இல் தீண்டாமை, சதி ஆதரவாளர் பூரி சங்கராச்சாரியின் கொடும்பாவி எரித்ததற்கு கைது செய்யப்பட்டார்.
  26. 1. ஆகத்து 1989 இல் மண்டல்குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி தமிழகம் எங்கும் அஞ்சலகங்கள் முன் மறியல் செய்ததால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
  27. 10.10.1990அல் மண்டல் குழுப் பரிந்துரையை தடை செய்த உச்சநீதிமன்ற ஆணையை எரித்து கைதானார்.
  28. 09.11.1991இல் காவிரி நீர் மண்டல் குழு பிரச்சினைகளுக்காக தாழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி காட்டியதற்கு கைது செய்யப்பட்டார்.
  29. 20.01.1992அல் கர்நாடகத் தமிழருக்காக சென்னை அண்ணாசாலை அஞ்சலகம் முன் மறியல் செய்து கைதானார்.
  30. 30.04.1992இல் காவிரி நீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்கக் கோரி திருவாரூர் அஞ்சலகம் முன் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.
  31. 06.12.1992இல் தடையை மீறி இராவணலீலா விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தி புதுவையில் கைதானார்.
  32. 10.02.1993இல் சென்னை இரயில் நிலையங்களில் இந்தி அழிப்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
  33. 23.04.1993இல் சென்னையில் மண்டல்குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி மறியல் போராட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.
  34. 01.09.1993இல் 69 சதவீதத்தை முடக்கும் உச்சநீதிமன்ற ஆணையை எரித்தற்காக கைது செய்யப்பட்டார்.
  35. 02.12.1994இல் இந்தி திணிப்பு மற்றும் விலைவாசி ஏற்றத்தை கண்டித்து சென்னையில் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.
  36. 31.08.1995இல் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்த முயன்றபோது சென்னை புதுப்பேட்டையில் கைது செய்யப்பட்டார்.
  37. மதுரையில் 25.09.1995இல் தமிழகத்தில் 69 சதவீத இடஓதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்ற ஆணையை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
  38. 23.08.1996இல் சமூகநீதிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடும்பாவியை எரித்ததற்கு 15 நாட்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  39. 29.12.2000இல் அமைனத்து சாதியினரும் அர்ச்சகராக உரிமை கோரி இந்து அறநிலைய அலுவலகம் முன்பு மறியல் செய்து தஞ்சையில் கைதானார்.
  40. 09.12.2004இல் சமூக நீதி கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்றம் முன் மறியல் செய்ய முயன்றபோது கைதானார்.
  41. சென்னையில் 1. பெப்ரவரி 2006 அன்று அனைத்து சாதியினர் அர்ச்சகராக உரிமை கோரி மறியல் செய்து கைதானார்.
  42. 01.11.2006இல் தமிழ்நாடு அய்.ஏ.எஸ் அதிகாரிகளை அவமதித்ததற்கு நீதிபதி முகோபாத்யாயா மன்னிப்பு கேட்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் முன் மறியல் செய்து கைதானார்.
  43. 23.09.2008இல் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க ரயில் மறியல் செய்து கைதானார்.
  44. 29.12.2008இல் பிற்படுத்தப்பட்டோருக்கு கிரிமிலேயர் முறை திணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் செய்து கைதானார்.
  45. 02.09.2009இல் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்புக்காக ரயில் மறியல் செய்து கைதானார்.
  46. 05.06.2010இல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட கோரி சென்னையில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கி.வீரமணி 46 ஆவது முறையாக சிறை சென்றார்.
  47. 15. அக்டோபர் 2012 அன்று நெய்வேலியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராத கருநாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தை வழங்க கூடாது என்று நெய்வேலி நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தி தமிழர் தலைவர் 47வது முறையாக கைதானார்.

விருது

  • தகைசால் தமிழர் - தமிழ்நாடு அரசு 2023.[8]

இதனையும் காண்க

சான்றுகள்

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._வீரமணி&oldid=3775232" இலிருந்து மீள்விக்கப்பட்டது