கிறித்தவத் தேவாலயம்
கிறித்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவதற்காகக் கூடும் இடம் தேவாலயம் அல்லது கோவில் (சர்ச்) என்று அழைக்கப்படுகிறது.
கத்தோலிக்க கிறித்தவர்களின் கோவில் "மாதா கோவில்" என்றும் மக்கள் வழக்கில் கூறப்படுவதுண்டு. பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்க கோவில்கள் இயேசுவின் அன்னையாகிய மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.
தனித்தனி கிறித்தவ சபைக்குத் தலைமைதாங்கும் குரு அல்லது சபைத் தலைவர் திருப்பலி, நற்கருணைக் கொண்டாட்டம், விவிலியக் கொண்டாட்டம் போன்ற சமயச் சடங்குகளை முன்னின்று நடத்துவார்.
அவரைத் தொடர்ந்து அவரின் ஆலோசனைப்படி கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் வழிபாடுகளைச் செய்கின்றனர். பல தேவாலயங்கள் சிலுவை உருவில் வடிவமைக்கப்படுகின்றன. கோபுரம் அல்லது கும்மட்டம் உடையதாக இருக்கின்றன.
கிறித்தவ சமயத்தின் முன்னோடி போல் அமைந்த யூத மதத்தில் "தொழுகைக் கூடம்" (synagogue) உண்டு. எருசலேம் நகரில் இருந்த அவர்களது ஒரே கோவில் கி.பி. 70ஆம் ஆண்டில் உரோமைப் படையினரால் இடிக்கப்பட்டது. அக்கோவில் இன்றுவரை மீண்டும் கட்டப்படவில்லை.
யூத வழக்கத்தைப் பின்பற்றி கிறித்தவர்களும் வழிபாட்டுக்கென தனியே தேவாலயங்கள் கட்டத் தொடங்கினர். ஐரோப்பாவில் கிறித்தவம் முதன்மையான மதமான பின்னர் பெரும் எண்ணிக்கையிலும் அளவிலும் தேவாலயங்களை அமைப்பது வழக்கமானது.
பொருளடக்கம் |
[தொகு] தேவாலய வகைகள்
[தொகு] சிற்றாலயம்
சிற்றாலயம் (Chapel) எனப்படுவது ஒரு தனிபட்ட நபரோ (எ.கா: அரசர்கள், ஆயர்கள்...) அல்லது குழுமமோ (துறவற சபைகள், மடங்கள், பள்ளிகள்..) வழிபட பயன்படுத்தும் ஆலயம். பெரியதொரு கோவிலின் உள்ளே அமைக்கப்படுகின்ற சிறுகோவில்களும் இப்பெயரால் அழைக்கப்படுவதுண்டு. உலகப் புகழ் பெற்ற மைக்கலாஞ்சலோவின் சுவர் ஓவியங்களைக் கொண்டுள்ள வத்திக்கான் கோவில் "சிஸ்டைன் சிற்றாலயம்" (Sistine Chapel) ஆகும்.
[தொகு] ஆலயம்
ஆலயம் (Church) என்னும் பொதுப்பெயரால் ஒரு பங்கிலோ கிளைப்பங்கிலோ வாழ்கின்ற கிறித்தவ மக்கள் வழிபாட்டுக்காகக் கூடிவருகின்ற தொழுகை இடம் குறிக்கப்படுகிறது.
[தொகு] பேராலயம்
பேராலயம் அல்லது பெருங்கோவில் (Basilica = பசிலிக்கா) எனப்படுவது முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொது கட்டிடங்களைக் குறிக்கப் பயன்பட்டது. கிரேக்க மொழியில் அதன் பொருள் "அரச உறைவிடம்" ஆகும். ஆனால் காலப்போக்கில் "பசிலிக்கா" என்னும் சொல் முக்கிய கிறித்தவ கோவில்களை குறிக்க பயன்பட்டது. திருத்தந்தை என்று அழைக்கப்படுகின்ற பாப்பரசர் ஆலயங்களை பேராலயங்களாக உயர்த்த முடியும். இது உயர் பேராலயம் (Major Basilica) மற்றும் இளம் பேராலயம் (Minor Basilica) என இரு வகைப்படும். உலகிலேயே நான்கு உயர் பேராலயங்களே உள்ளன. அந்த நான்கு பேராலயங்களும் உரோமை நகரில் உள்ளன.
ஆகவே இளம் பேராலயங்களை "பேராலயம்" என்று கூறும் வழக்கம் எழுந்தது.
உரோமையில் அமைந்துள்ள உயர் பேராலயங்கள் இவை:
[தொகு] திருத்தலம்
திருத்தலம் (Shrine) எனப்படுவது அதிக அளவில் அற்புதங்கள் நடைபெறுவதாக மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு, மக்கள் அதிக அளவில் கூடும் கிறித்தவ ஆலயம் ஆகும். கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் எவரும் தனது மறைமாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஆலயத்தைத் திருத்தலமாக உயர்த்த முடியும்.
[தொகு] பீடாலயம் (கதீட்ரல்)
கத்தோலிக்கத் திருச்சபையின் ஆளுகைப் பகுதியான மறைமாவட்டத்திற்கு தலைவராக விளங்கும் ஆயரின் ஆட்சிப் பீடமாக இருக்கும் தலைமை ஆலயமே பீடாலயம் (Cathedral) என்று அழைக்கப்படுகிறது. இதை மறைமாவட்ட முதன்மைக் கோவில் என்றும் அழைப்பர். கதீட்ரல் என்பது ஒரு மறைமாவட்ட ஆயரின் (bishop) அதிகார மைய ஆலயத்தைக்குறிக்கும். ஒரு மறைமாவட்டத்தின் தாய்க்கோவிலும் இது ஆகும். 'Cathedral' என்னும் சொல் "இருக்கை" என்னும் பொருள்படும் cathedra என்னும் கிரேக்க சொல்லிலிருந்தும் அதோடு தொடர்புடைய இலத்தீன் சொல்லிலிருந்தும் வந்ததாகும். எல்லா கதீடிரல்களிலும் ஆயரின் இருக்கை இருக்கும். ஆயர் கதீட்ரலிலிருந்து போதிப்பதாகவும் ஆட்சிசெய்வதாகவும் கொள்ளப்படும். அக்கோவிலின் பொறுப்பாளர் மறைமாவட்ட ஆயரே ஆவர். வழக்கமாக, அப்பங்கை நேரடியாக நிர்வகிக்க ஒரு மேல்நர் (Rector) நியமிக்கப்படுவார்.
மேலும் ஆயரின் உறைவிடமும் மறைமாவட்ட அலுவலகங்களும் மறைமாவட்ட முதன்மைக் கோவிலின் அருகே அமைந்திருப்பது வழக்கம்.
[தொகு] படத்தொகுப்பு
-
முதல் உலகப் போர்-இன் போது பிரான்சு நாட்டில் உள்ள ஒரு தேவாலயத்தில் குண்டு வீசப்படுகின்றது
-
கோத்திக் கட்டட வடிவமைப்பில் எழுப்பபட்ட புனித மரியாள் ஆலயம், போலந்து
-
சோபியா ஆலயம், ஸ்டாக்ஹோம், சுவீடன்