கிரிகொரஹ யாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் பூர்வீகக் குடிகளான வேடுவர் சமூகத்தில் காணப்படும் யாக வழிபாட்டு முறைகளில் கிரிகொரஹ யாகம் என்பதும் ஒரு முறையாகும். பேய், பிசாசு விடயங்களில் ஈடுபாடு காணப்படுவதைப் போன்றே கடவுள் வணக்கத்திலும் ஈடுபாடு அதிகம். இவற்றைத் தவிர மந்திரம் போன்ற செயல்களும் இவர்களிடத்தில் காணக்கூடியதாக உள்ளது.

பேய்களைச் சிறையிடல்[தொகு]

இந்ந யாகத்தின் ஆரம்பத்தில் வேடுவத் தலைவர் பேய்களைச் சிறையிட்டு காணிக்கை கட்டுதல் வழக்கமாகும்.

யாகத்தை ஆரம்பித்தல்[தொகு]

உரித்த தேங்காயொன்றைக் கையில் எடுத்து உச்சந்தலையில் வைத்து கும்பிடுவதன் மூலம் யாகத்தை தலைவர் ஆரம்பிப்பார். வேப்பமரக் கட்டையால் செய்த உரலின் மீது வாகை மரக்கிளையும், வேப்பமரக்கிளையும் வைப்பர். வாழை மரப்பட்டையாலும், தண்டாலும் மிகவும் அழகாக செய்யப்பட்டதொரு மேடையில் வைக்கும் இவ் உரலின் மீது மண் சட்டியொன்றும் வைக்கப்பட்டிருக்கும். மண் சட்டிக்கருகில் ஒரு கை வெற்றிலையும், காணிக்கையும், ஐந்து எழுமிச்சம் காய்களும், ஐந்து வகைப் பூக்களும் வைத்து யாகத்தை ஆரம்பிப்பர்.

யாக குரு[தொகு]

யாகத்தை நடாத்தும் குரு குளித்து சுத்தமாகி தலைமுடியை பின்னோக்கி அவிழ்த்து விட்டு காட்டுடை அணிந்து, தேங்காயொன்றைக் கையில் எடுத்து அதற்கு மஞ்சள், சந்தனம் போன்ற வாசனைப் புகைப் பிடித்து யாகத்தை ஆரம்பிப்பர். யாகத்துக்கு உதவி செய்வோரும் அவ்விடத்திலேயே இருப்பர்.

யாகத்துக்கான பொருட்கள்[தொகு]

இந்த யாகத்துக்கு வர மர அணில் இறைச்சி, குரங்கு இறைச்சி உற்பட 3 வகையான இறைச்சியும், 3 சிரட்டை இரத்தமும் இரு வகையான பூக்களும் தேவைப்படுகின்றது.

மந்திரக் கவிகளும், நடனமும்[தொகு]

மந்திரமும் கவிகளும் பாடி குரு தீப்பந்தம் ஏந்தி ஆடும்போது மற்றவர் தவில் அடிப்பார். இன்னொருவர் தாளம் போடுவார். அத்துடன், கைகோர்த்துக் கொண்டு தாளத்துக்கு நடனம் ஆட சிலர் முன்வருவர்.

தேங்காயை உடைப்பு[தொகு]

வேடுவ கவியையும் மந்திரத்தையும் சொல்லி தேங்காயைக் கையிலெடுத்து ஆடுபவர் ஒரு கையில் கத்தியொன்றை எடுத்து வட்டமாகச் சுற்றி தேங்காயை உடைப்பார். இரண்டு தேங்காய்ப் பாதிகளையும் இரு கைகளுக்கும் எடுத்துக் கொண்டு நடனமாடியபடியே சென்று தனது உதவியாளர்களிடம் கொடுப்பார். இவ்வாற ஏழு தேங்காய்களையும் உடைப்பதுடன் அவை அனைத்தையும் உதவியாளர்கள் சுத்தமான முறையில் துருவிக் கொள்வர்.

குருநாதரின் நடனம்[தொகு]

துருவப்பட்ட தேங்காயை உரலுக்கு மேலாக உள்ள சட்டியில் போட்டு சுத்தமான துணித் துண்டொன்றால் மூடுவார்கள். பின்னர் அதற்கு விளக்கு எரியவைத்து, வாசனைப் புகைபிடித்து, மஞ்சள் நீர் தெளித்து மீண்டும் ஆடுவார்கள். கொஞ்ச நேரமே நடைபெறும் இந்நடனம் வேகமாக நடைபெறும். பின்னர் குருநாதர் துணித்துண்டொன்றை தலை மேல் வைத்து அதன் இரு அந்தங்களாலும் பிடித்துக் கொண்டு யாகக் கவியை உரத்த குரலில் பாடி மிகவும் அழகான நடனம் ஆடுவார்.

பாற்சட்டிக்கு யாகம்[தொகு]

இவ் ஆட்டத்தின் பின் துருவப்பட்ட தேங்காயில் இருந்து பாலை எடுத்து அதற்கு சந்தனமும், மஞ்சளும் கலந்து பாற்சட்டியைச் சுற்றி நடனம் ஆடிக்கொண்டே பாலைத் தெளிப்பார். பால்கொட்டில் முழுவதும் பாலைத் தெளித்து, தெளித்துத் சுமார் அரைமணி அளவில் யாக நடனம் நீடிக்கும்.

பிரார்த்தனை உரை[தொகு]

இச்சம்பிரதாய நடனம் சூரியன் உதித்து ஒரு மணி நேரம் வரை நடைபெறும். யாகத்தின் இறுதியில் குருநாதர் பாற்சட்டியின் முன்னே கும்பிட்டு வணங்கி பாற்சட்டியைப் பார்த்துக் கொண்டு சாஸ்திரம் கூறத் தொடங்குவார். வேட்டைப் பிராணி கிடைக்கும் முறை நோய்கள் பற்றிய விபரம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அழிவுகள் பற்றிக் கூற அரை மணி நேரம் மட்டும் செல்லும்.

யாகத்தின் இறுதிக்கட்டம்[தொகு]

சாஸ்திரம் சொல்லி முடித்ததும் குழியொன்று வெட்டி அதனுள் பாற்சட்டியைக் கொட்டி, குழியை மூடி கல்லொன்றை அவ்விடத்தில் நட்டி அவ்விடத்தைப் பாதுகாப்பார்கள்.

வேட்டை தெய்வத்துக்கு யாகம்[தொகு]

பாற்சட்டி யாகம் முடிந்ததன் பின்னர் வேட்டை தெய்வத்துக்கும் மலையின் தலைவனுக்கும் ஒரு யாகம் செய்வர். அந்த யாகத்தின் பின்னர் வேடர்கள் வேட்டைக்காகச் செல்வர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிகொரஹ_யாகம்&oldid=2757993" இலிருந்து மீள்விக்கப்பட்டது