கிடுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீடொன்றைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள "கிடுகு" வேலி.
கிடுகுகளின் அமைப்பைத் தெளிவாகக் காட்டும் வேலியொன்றின் அண்மைத் தோற்றம்
கிடுகு பின்னுதல்

கிடுகு எனப்படுவது, தென்னையின் ஓலையை நெடுக்குவாட்டில் பிளந்து, பின்னிப் படல்கள் போல் உருவாக்கப்படுவது ஆகும். கிடுகு கூரை வேய்வதற்கும், வேலிகள் அடைப்பதற்கும் பயன்படுகின்றது. தென்னையின் ஓலை மிகவும் பெரிதாக இருப்பினும், அது ஒரு நடுத்தண்டின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ள ஒடுக்கமான பகுதிகளாக அமைந்துள்ளதால் அதை அப்படியே கூரை வேய்வதற்கோ வேலிகளுக்கோ பயன்படுத்த முடியாது. ஆனால் அவற்றைப் பின்னுவதன் மூலம் மறைப்பாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற தட்டையான பெரிய அளவு உடையதாக ஆகின்றது.

தென்னை அதிகம் வளரும் பகுதிகளின் நாட்டுப்புறங்களில் கிடுகு ஒரு முக்கியமான கட்டிடப் பொருள் ஆகும். சுற்றாடலிலேயே கிடைப்பதனால் இது பொதுவாக மலிவானது. நகரப் பகுதிகளிலும் கூடத் தற்காலிகமான அமைப்புக்களுக்குக் கூரை அமைப்பதில் கிடுகுக்கான தேவை உண்டு. இதனால் நாட்டுப் புறங்களில் பின்னப்படும் கிடுகுகள் நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்படுவது உண்டு.

கிடுகு விரைவில் அழிந்துவிடக்கூடிய ஒரு பொருள். ஆகவே, இதனால் அமைக்கப்படும் கூரைகளோ, வேலிகளோ நீண்ட நாள் நிலைத்திருப்பது இல்லை. இதனால் அடிக்கடி அவற்றைப் புதுப்பிக்க வேண்டியிருப்பது இதன் முக்கிய குறைபாடுகளில் ஒன்று. எனினும் இது சூழலை மாசுபடுத்தாத ஒரு கட்டிடப்பொருள் ஆகும்.

தென்னை விளையும் பகுதிகளில் வாழும் மக்களுக்குக் கிடுகு பின்னுதல் ஒரு வருமானம் தரும் ஒரு தொழிலாகவும் உள்ளது. ஆங்காங்கே இது ஒரு குடிசைத் தொழிலாகவும் இருக்கிறது. தென்னோலைகளைத் தண்ணீரில் சில நாட்கள் ஊறவிட்டுப் பின்னர் நெடுக்குவாட்டில் இரண்டாகப் பிளந்து கிடுகு பின்னப்படுகிறது. ஒவ்வொரு ஓலையிலிருந்தும் இரு கிடுகுகள் இழைக்கலாம். கிடுகு பொதுவாகக் குந்தியிருந்தே இழைக்கப்படுகிறது.

வெளி இணைப்பு[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடுகு&oldid=1522456" இலிருந்து மீள்விக்கப்பட்டது