தக்சிணேசுவர் காளி கோயில்
| தக்சிணேசுவர் காளி கோயில் | |
| பெயர் | |
|---|---|
| பெயர்: | காளி கோயில், தக்சிணேஸ்வர் |
| அமைவிடம் | |
| அமைவு: | கொல்கத்தா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | பவதாரிணி காளி |
| வரலாறு | |
| கட்டப்பட்ட நாள்: | 1855 |
காளி கோயில், தக்சிணேஸ்வர் இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகரான கொல்கத்தாவின் தக்சிணேஸ்வர் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில். ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இக் கோயிலின் முதன்மைக் கடவுள் காளியின் ஒரு அம்சமான பவதாரிணி.
தலைமைக் கோயில் ஒன்பது விமானம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது. இக் கோயிலைச் சுற்றி வெளியிடமும், அதனைச் சூழவுள்ள மதிலின் உட்புறத்தில் அறைகளும் அமைந்துள்ளன. ஆற்றங்கரையில் சிவனுக்குப் பன்னிரண்டு சிறு கோவில்கள் அமைந்துள்ளன. கடைசிச் சிவன் கோயிலுக்கு அருகே வட மேற்கு மூலையில் அமைந்துள்ள கூடம் ஒன்றிலேயே இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது வாழ்வின் குறிப்பிடத்தக்க காலப் பகுதியைக் கழித்தார் என்று சொல்லப்படுகிறது.
[தொகு] வரலாறு
1847 ஆம் ஆண்டில், ஜமீந்தாரிணியான ராணி ராஷ்மோணி என்பவர் இந்துக்களின் புனித இடமான காசிக்கு ஒரு நீண்ட யாத்திரை செல்வதற்கு விரும்பினார். இவரும், இவரது உறவினர்களும், வேலையாட்களும், தேவையான பொருட்களுடன் 24 படகுகளில் செல்வதாக இருந்தது. கிளம்புவதற்கு முதல் நாள் இரவில் ராணியின் கனவில் தோன்றிய காளி, காசிக்குப் போக வேண்டிய தேவை இல்லை என்றும், கங்கை ஆற்றங்கரையில் அழகிய கோயிலொன்றைக் கட்டி அங்கே தனது சிலையை வைத்து வணங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் பின்னர் உடனடியாகவே ராணி ஒரு நிலத்தை வாங்கி கோயிலைக் கட்டுவதற்குத் தொடங்கினார். 1847 ஆம் ஆண்டுக்கும் 1855 ஆம் ஆண்டுக்கும் இடையில் இப் பெரிய கோயில் தொகுதியின் கட்டிட வேலைகள் நிறைவேறின. இதன் தலைமைக் குருக்கள் அடுத்த ஆண்டில் காலமாகவே அப் பதவி அவரது தம்பியான இராமகிருஷ்ணருக்கு வழங்கப்பட்டது. அப்போதிருந்து 30 ஆண்டுகளுக்குப் பின் 1886 ஆம் ஆண்டில் அவர் இறக்கும்வரை அக் கோயிலின் புகழுக்கும், பெருமளவில் பக்தர்கள் வருவதற்கும் அவர் காரணமாக இருந்தார்.