கானாடுகாத்தான்

ஆள்கூறுகள்: 10°10′29″N 78°46′54″E / 10.174754°N 78.781586°E / 10.174754; 78.781586
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானாடுகாத்தான்
கானாடுகாத்தான்
இருப்பிடம்: கானாடுகாத்தான்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°10′29″N 78°46′54″E / 10.174754°N 78.781586°E / 10.174754; 78.781586
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

5,275 (2011)

659/km2 (1,707/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)

கானாடுகாத்தான் (ஆங்கிலம்:Kanadukathan), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சிவகங்கை நகரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள செட்டிநாடு தொடருந்து நிலையம் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி இராமேஸ்வரம் - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண். 210-இல் உள்ளது

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,362 வீடுகளும், 5,275 மக்கள்தொகையும் கொண்டது. [4] இது 8 ச.கி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

சிறப்புகள்[தொகு]

பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழும் பழமைச் சிறப்பு மிக்க அரண்மனை போன்ற வீடுகள் நிறைந்த இப்பேரூராட்சியை தமிழக அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்களும் வந்து பயன்பெறும் வகையில் இப்பேரூராட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.ஆனாலும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.பழமையை சரிவர பராமரிக்க வேண்டும்.கண்மாய்களின் நீர்நிலை மோசமானதாக உள்ளது. எண்பது ஆண்டுகளுக்கு மேலான நீர்நிலை தடுப்புகள் சரிவர பராமரிக்கப்பட்டால் நீர்நிலை ஆதாரம் இப்பகுதியில் மேம்படும். வேலைவாய்ப்பிற்கான தொழிற்சாலைகள் இப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்.கல்வி கற்றவர்களோடு ஒப்பிடுகையில் வேலை வாய்ப்பிற்க்கான வாய்ப்புகள் மிக குறைவு.வேலைவாய்ப்பிற்காக நகரங்களையும்,பெருநகரங்களையும்,வெளிநாடுகளுக்கும் இப்பகுதி மக்கள் செல்கிறார்கள். சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கானப் பேரேயில் எனும் பெருங்காடு இப்பகுதியில் இருந்திருக்கிறது.இது காளையார் கோவில் வரை நீண்டிருந்தது.சங்ககாலத்தில் கானப்பேரெயில் என வழங்கப்பட்டது வேங்கைமார்பன் என்பவன் இவ்வூரில் இருந்துகொண்டு ஆண்ட சங்ககால மன்னன். உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் வேங்கைமார்பனை வென்று இந்த ஊரைத் தனதாக்கிக்கொண்டான். இதனால் இந்தப் பாண்டியனைக் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி எனச் சிறப்பித்துள்ளனர். பிற்காலத்தில் பாண்டியர்களது வீழ்ச்சிக்கு பின்,விசய நகர பேரரசின் படையெடுப்புகளாலும் பல பாளையங்களாக பிரிக்கப்பட்டது.சேதுபதி பாளையக்காரர்களாலும் பின் மருது சகோதரர்களாலும் ஆளப்பட்டு,ஆங்கிலேயர் உடனான போர்களால் இப்பகுதி ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் சென்றது.பின் ஆங்கிலேயர் நகரத்தார்களின் நிர்வாகத்தின் கீழ் இப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். விடுதலைக்கு பின் மக்களாட்சியின் கீழ் இப்பகுதி வந்துள்ளது.

கானப் பேரெயில் சங்ககால அமைப்பு

கானப் பேரெயில் என்னும் கோட்டை ஆழமான அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் மீன் பூத்தது போலப் பதுங்கி இருந்து பகைவரைத் தாக்கும் ஞாயில்களையும், சுற்றிலும் வெயில் நுழைய முடியாத இருண்ட கால்காடுகளையும், வீரம் மிக்க குடிமக்கள் வாழும் சிற்றூர்களையும் கொண்டது.

திருகானப்பேர் உடையான் என்னும் குறுநில மன்னன் இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு திரிபுவனச் சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியனது ஆளுகைக்கு உட்பட்டு 13-ஆம் நூற்றாண்டில் ஆண்டுவந்தான்.

ஆங்கிலேயர் படையெடுப்புக்கு பின் பல காடுகள் மக்கள் பயன்பாட்டிற்காகவும்,மருது பாண்டியர்களுடனான போரின் காரணமாகவும் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக இப்பகுதியில் உருவாகி இருந்தாலும்,இங்கு இறைநம்பிக்கையின் அல்லது அச்சத்தின் காரணமாக சோலை ஆண்டவர் கோவில் மற்றும் ஆயின்மார் கோவிலை சுற்றியுள்ள காட்டுப்பகுதி மரங்களை இப்பகுதி மக்கள் இன்றும் வெட்டுவதில்லை.மீறி காடுகளை அழிப்பவர்களை தெய்வம் தண்டிக்கும் என மக்களால் நம்பப்படுகிறது.இன்றும் அப்பகுதிகள் காடுகளாகவே காட்சி அளிக்கின்றன. கான் நாடு _ காடுடைய நாடு காத்தான்.(கானாடு காத்தான்).மற்றுமொரு பொருளாக பூம்புகார் நகரம் ஆழிப் பேரலையால் அழிந்து போன போது அந்த நகரத்தார்க்கு இடம்தந்து காத்ததனாலும் இப்பேர் வந்ததாக கூற இடமுண்டு.கானாடு(காவிரிநாடு_பூம்புகார் நாடு) காத்தான்.இன்றும் இங்கு கோவில் திருவிழாக்கள் நடத்தப்படும் போது நாட்டார்(இப்பகுதியினர்),நகரத்தார் (சோழ நகரத்தில் இருந்து வந்தவர்கள்) இருவருக்கும் சிறப்பு செய்யப்படுவது உண்டு.

காண வேண்டிய இடங்கள்[தொகு]

சிவகங்கை மாவட்டம் கானடுகாத்தான் அருகில் உள்ள பெரியகோவில் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் உடனுறை சௌந்தரநாயகி அம்பாள் கோவில் மிக சக்தி வாய்ந்த திருத்தலம் ஆகும். இந்த கோவில் உள்ள சிவலிங்கம் சுயம்பு ஆக தோன்றியவர்.மேலும் இந்த ஊரை சுற்றி கரை மேல் அய்யனார் கோவில், பொன்னழகி அம்மன் கோவில், வரத ராஜபெருமாள் கோவில், முனிஸ்வரன் கோவில் ஆகிய கோவில்களும் உள்ளன.குழந்தை பேறு இல்லாதவர்கள்,கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள்,திருமணம் ஆகாதவர்கள் இந்த ஊரில் உள்ள தெய்வங்களை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்கி நன்மை அடைவதாகக் கூறப்படுகிறது.

வழி:காரைக்குடி வருபவர்கள் திருச்சி அல்லது தஞ்சாவூர் பேருந்தில் ஏறி நேமதான்பட்டியில் இறங்கவேண்டும்.திருச்சியில் இருந்து வருபவர்கள் காரைக்குடி அல்லது தேவகோட்டை பேருந்தில் ஏறி நேமதான்பட்டியில் இறங்க வேண்டும்.இந்த ஊரை சுற்றி கலைநயம் மிக்க நகரத்தார் வீடுகளும் உள்ளன.

இவற்றையும் காணவும்[தொகு]

கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை நுழைவுவாயில் - செட்டிநாடு கட்டிடக்கலை.
வழக்கமான செட்டிநாடு வீட்டின் உட்புறம் - செட்டிநாடு கட்டிடக்கலை.
செட்டிநாடு வீட்டின் மேற்கூரை - செட்டிநாடு கட்டிடக்கலை.
செட்டிநாடு வீட்டின் உள்ளேயுள்ள சாப்பிடும் அறைe - செட்டிநாடு கட்டிடக்கலை.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. Kanadukathan Population Census 2011
  5. [ http://www.townpanchayat.in/kanadukathan பேரூராட்சியின் இணையதளம்]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கானாடுகாத்தான்&oldid=3603457" இலிருந்து மீள்விக்கப்பட்டது