காதல் மெய்ப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரும்பும் காதலனைக் கண்டதும் பெண்ணுக்கு எத்தகைய மெய்ப்பாடுகள் தோன்றும் எனத் தொல்காப்பியம் விளக்குகிறது. இங்கு இது ஒரு மனநூல் போலப் பெண்ணின் உள்ளத்தைப் படம்பிடிக்கிறது. இவற்றை வடநூலார் ‘அவத்தை’ என்று சொல்லிப் பத்து எனக் காட்டுவர். தொல்காப்பியம் ஆறு மெய்ப்பாடுகளைக் குறிப்பிடுகிறது. இவை அமத்திணை ஒழுக்கத்தில் நிகழ்வன. [1] நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருபிதம், வெகுளி, உவகை - இவை எட்டும் புறத்திணையில் நிகழும் மெய்ப்பாடுகள். [2]

  1. அவன் பார்ப்பதை விரும்புதல், நெற்றி வியர்த்தல். தான் விரும்புவதை மறைத்துல், தன் மனமும் மெய்யும் சிதைந்துபோனதை மற்றவர்களுக்கும் மறைத்தல் – இவை நான்கும் முதலாவது மெய்ப்பாடு
  2. தலைமுடியைச் சரிசெய்துகொள்ளல், காதணி ஒன்றைக் கழற்றி மாட்டுதல், நழுவும் அணிகலன்களைத் தடவுதல், உடுத்தியிருக்கும் உடையை அவிழ்த்து உடுத்துதல் – இவை நான்கும் இரண்டாவது மெய்ப்பாடு
  3. தன் பெண்ணுறுப்பைத் தடவிக்கொள்ளுதல், அணிகலன்களைத் திருத்திக்கொள்ளுதல், தன் இல்லத்தார் உடன்படார் என்பது போல மற்றவர்களிடம் உரையாடல், இரு கைகளையும் கூப்பித் தொழுதல் – இவை நான்கும் மூன்றாவது மெய்ப்பாடு
  4. மற்றவர்களிடம் அவனைப் பாராட்டல், கூச்சமில்லாமல் பேசுதல், அன்பின்றி அலர் தூற்றுவார்களே என்று அதற்காக நாணல், அவன் கொடுபனவற்றை வாங்கிக்கொள்ளுதல் – இவை நான்கும் நான்காவது மெய்ப்பாடு
  5. அவனைப்பற்றி ஆராய்ந்து உடம்படுதல், அவனோடு கூடித் திளைக்க மறுத்தல், மறைவித்துக்குச் செல்லுதல், அங்கே அவனைக் கண்டு மகிழ்தல் – இவை நான்கும் ஐந்தாவது மொய்ப்பாடு
  6. அவன் செய்யும் ஒப்பனைகளைச் சிதைத்தல், அழுதுகாட்டல், அழுதுகொண்டே பேசுதல், வேறு வழியில்லை என்பது போல அவனை ஏற்றுக்கொள்ளுதல் - இவை நான்கும் ஆறாவது பெய்ப்பாடு.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 13 முதல் 18
  2. தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_மெய்ப்பாடு&oldid=1983001" இலிருந்து மீள்விக்கப்பட்டது