கள்ளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கள்ளூர் என்னும் ஊரில் அறங்கூறவையம் ஒன்று இருந்தது. அதில் வீறுசால் மக்களே தீர்ப்பு வழங்கிவந்தனர்.

ஒருமுறை ஒரு கயவன் ஒரு அழகியைப் பலவந்தமாகத் துய்த்துவிட்டான். அந்தப் பெண் கள்ளூர் அவையத்தில் முறையிட்டுக்கொண்டாள். அவையத்தார் வினவியபோது அழகைச் சூறையாடிய அந்தக் கயவன் அவளை அறியேன் என்று சூளுரைத்தான்.

அவையத்தார் அறிந்த சாட்சியாளர்களிடம் கேட்டறிந்து உண்மையைத் தெரிந்துகொண்டனர். கயவனின் சுற்றத்தாரை அழைத்தனர். கயவனின் சுற்றத்தாரே கயவன் தலையில் கொதிக்கும் சுண்ணாம்பு நீற்றைக் கொட்டும்படி செய்தனர்.

கயவன் உடலெல்லாம் தீக்காயம். அதனைக் கண்டு ஊரார் நகைத்தனர்.

பாடல்

காண் தகத்
தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
கரும்பு அமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்,
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பலவே.

தலைவன் வையையாற்றில் பரத்தையரோடு நீராடியதை மறைத்தான். என்றாலும் அதனை ஊரே ஆரவாரம் செய்து தூற்றுவது கள்ளூர் அவையம் ஆர்த்தது போல இருக்கிறது என்கிறாள் தலைவியின் தோழி. (கடுவன் மள்ளனார் – அகநானூறு 256)

  • இதனையும் காண்க
சங்ககால நீதிமன்றங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளூர்&oldid=835715" இலிருந்து மீள்விக்கப்பட்டது