களியக்காவிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களியக்காவிளை
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

15,625 (2011)

4,464/km2 (11,562/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 3.5 சதுர கிலோமீட்டர்கள் (1.4 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/kaliyakkavilai

களியக்காவிளை (ஆங்கிலம்:Kaliyakkavilai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இது ஒரு தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள பேரூராட்சியாகும். களியக்காவிளை அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதி ஆகும். பேருந்து நிலையம், சந்தை போன்றவை இதன் அடையாளங்கள் ஆகும்.

அமைவிடம்[தொகு]

தமிழகத்தைச் சார்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆரம்பமாக களியக்காவிளை காணப்படுகிறது. கேரள- தமிழக எல்லையைச் சார்ந்த அழகான பகுதி ஆகும். இங்கு குமரி மாவட்டம் துவக்கம் கொள்கிறது. களியக்காவிளை பகுதி வழியே NH47 நெடுஞ்சாலை செல்கிறது. கேரள எல்லையான பாறச்சாலையிலிருந்து 2 கிமீ அருகாமையில் களியக்காவிளை அமைந்து இருக்கிறது. களியக்காவிளை பகுதியானது கேரளாவின் திருவனந்தபுரம், மற்றும் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதிகளுக்கு நடுவில் அமைந்து காணப்படுகிறது. இதனாலேயே களியக்காவிளை பேருந்து நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லவும், நாகர்கோவில் செல்லவும் எப்போதும் பேருந்துகள் கிடைக்கும். திருவனந்தபுரம் - நாகர்கோவில் கேரள, தமிழக பேருந்துகள் எப்போதும் இருப்பதால் களியக்காவிளை பகுதியிலிருந்து முக்கிய பகுதிகளுக்கு செல்ல சிரமம் இல்லை. களியக்காவிளையின் மிக அருகாமையான ரயில் நிலையமாக பாறசாலை ரயில் நிலையம் அமைகிறது. களியக்காவிளையிலிருந்து பாறசாலை ரயில் நிலையத்திற்கு ஒன்றரை கிலோமீட்டர் இருக்கலாம். சாலை வசதி உண்டு. ஓரளவு எல்லா முக்கியமான ரயில்களும் பாறசாலையில் நிற்கும். களியக்காவிளையிலிருந்து 2கிமீ தொலைவில் படந்தாலுமூடு அமைந்து இருக்கிறது. களியக்காவிளையிலிருந்து 5 கிமீ அருகாமையில் குழித்துறை உள்ளது. குழித்துறைக்கு பகுதியிலிருந்து பிரிந்து உள்ளே 2கிமீ சென்றால் கழுவந்திட்டை பகுதியில் லோக்கல் ரயில் நிலையம் இருக்கிறது. களியக்காவிளையிலிருந்து 7 கிமீ தொலைவில் மார்த்தாண்டம் உள்ளது. மார்த்தாண்டத்தில் முக்கிய ரயில் நிலையம் அமைந்து இருக்கிறது. பாறசாலைக்கு அடுத்தபடியாக எல்லா ரயில்களும் நிறுத்தி செல்லும் ரயில் நிலையம் மார்த்தாண்டம் ஆகும். தெற்கில் 10 கிமீ தொலைவில் நித்திரைவிளை உள்ளது. களியக்காவிளை கன்னியாகுமரியிலிருந்து 54 கிமீ தொலைவில் உள்ளது.

கலாச்சாரம்[தொகு]

மக்கள் சாதி, மத வேறுபாடின்றி அன்பாக வாழ்கின்றனர். ஊரைச் சுற்றி மதவழிபாட்டுத் தலங்கள் அதிகமாக இருக்கின்றன. மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். தேங்காப்பட்டணம், விழிஞ்ஞம், குளச்சல், முட்டம் போன்ற மீன்பிடிக்கும் கடற்கரை பகுதிகள் அருகாமையில் அமைந்திருப்பதால் பிடித்த மீன்கள் மிக விரைவிலேயே களியக்காவிளை சந்தைக்கு வந்து விடுகிறது. இதனால் மீன்களை மக்கள் வாங்க சிக்கல் இல்லை. அதிகமான மக்கள் மீன் பிரியர்களாக காணப்படுகின்றனர். திருமணச் சடங்குகளில் முன்பு மாலை நேர சடங்குகளுக்கு பொரோட்டா, கோழி இறைச்சி கொடுப்பது ஒரு கலாச்சாரமாக இருந்தது. இப்போது திருமணங்களில் பிரியாணி கொடுப்பது ஒரு சடங்காக மாறி இருக்கிறது. திருமணத்தில் மதிய உணவாக முன்பு போலவே அரிசி சாதம், பருப்பு கறி, சாம்பார் கறி, ரசம், புளிசேரி, மோர், பாயாசம், கூட்டு வகைகள், ரசகதலி பழம் போன்றவை பங்கு வகிக்கிறது.

நூலகம்[தொகு]

களியக்காவிளை பகுதி படித்தவர்கள் நிறைந்த ஒரு பகுதியாக காணப்பட்ட போதும் பிள்ளைகள் படிக்க ஒரு பொது நூலகம் இல்லை என்பது மிகப்பெரிய குறை ஆகும்.

பொழுதுபோக்கு[தொகு]

மக்கள் பொது இடங்களில் கூடி அமர்வதற்கு எந்த வசதியும் இல்லை. மத பண்டிகைகளுக்கு மக்கள் வழிபாட்டுத் தலங்களில் கூடுவதைத் தவிர்த்து எந்த பொது கலாச்சார நிகழ்வுகளும் இல்லை. சில பகுதிகளில் இளைஞர் இயக்கங்களால் சுதந்திர தினம், குடியரசு தினம் கொண்டாடப்படுவது மாத்திரமே தற்போதைய ஆறுதல் தரும் கலாச்சார நிகழ்வுகள் ஆகும். பூங்கா இல்லை. மக்கள் தொலைக்காட்சி, மொபைல் போன் போன்ற நவீன கருவிகளுக்கு பழக்கப்பட்டு உள்ளனர். விளையாட்டு மைதானங்கள் குறைவு. யாரும் சைக்கிள் ஓட்டுவது இல்லை

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

3.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 25 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3], களியக்காவிளைக்கு அருகாமையில் பனங்காலை, மேக்கோடு, மஞ்ஞவிளை, கைதக்குழி, PPM ஜங்சன், கோழிவிளை போன்ற பகுதிகள் காணப்படுகின்றன.

மக்கள் தொகை பரவல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3892 வீடுகளும், 15625 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. [ http://www.townpanchayat.in/kaliyakkavilai பேரூராட்சியின் இணையதளம்]
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Kaliyakkavilai Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=களியக்காவிளை&oldid=3409341" இலிருந்து மீள்விக்கப்பட்டது