கருவேலி சற்குணநாதேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கருவேலி சற்குணேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
கருவிலி கொட்டிட்டை சற்குணநாதேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கருவிலி கொட்டிட்டை,கருவிலிக்கொட்டிடை
பெயர்:கருவிலி கொட்டிட்டை சற்குணநாதேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கருவேலி (கருவிலி, சற்குணேஸ்வரபுரம்)
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சற்குணநாதேசுவரர்
தாயார்:சர்வாங்க நாயகி
தீர்த்தம்:எம தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

கருவேலி சற்குணநாதேசுவரர் கோயில் (கருவிலிக்கொட்டிடை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 63ஆவது சிவத்தலமாகும்.சோழர் திருப்பணி பெற்ற தலம் எனப்படுகிறது.

தல வரலாறு[தொகு]

கோவில் பெயர் கொட்டிடை. ஊர் பெயர் கருவிலி. இக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வங்களை வணங்கும் பேறு பெற்றவர்கள் இனி எந்த ஒரு கருவிலும் பிறக்கவேண்டிய தேவை இல்லை என்கிற வரம் கிடைக்கும். இப்படி பிறப்பை அறுத்து மோட்சத்தை அருளும் தலம் என்பதால் இந்தத்தலத்தை கருவிலி என்பார்கள். கோவில்கள் நிறைந்த கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் தரிசித்தபலன் இந்த ஒரு கோயிலை தரிசித்தாலே கிடைத்துவிடுமாம். சற்குணன் என்ற மன்னன் இக்கோயிலில் வழிபட்டு குறைகள் நீங்கப்பெற்று மோட்சமும் பெற்றார். எனவே இக்கோயிலை அவர் கட்டியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. தட்சனின் யாக நிகழ்வின் பொது நடந்த கோர நிகழ்வால் தாட்சாயிணியை இழந்த ஈசன் பித்துப்பிடித்த மாதிரி ஈசன்(பித்தன்) ஊர் ஊராக சுற்றித்திரிந்து இறுதியில் அமர்ந்த இடம் கருவிலி என புராணம் கூறுகிறது.அப்போது ஈசனுடன் சேர்வதற்கு அன்னை பார்வதி அழகே உருவாக மீண்டும் தோன்றிய இடம் கருவிலி ஆலயத்தில் இருந்து அரை கீ மீ தொலைவில் இருக்கும் அம்பாச்சிபுரம் என்று சொல்கிறது புராணம். இறைவனுடன் சேர அம்மை தங்கி அர்சித்த இடமே அம்பாச்சிபுரம் ஆகியிருக்கிறது. முப்புரமும் எரித்த ஈசன் ஆனந்தக் களிப்பில் கொடுகொட்டி என்ற ஆட்டத்தை இத்தலத்தில் நிகழ்த்தினார் எனவே இக்கோவில் கொட்டிடை என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிவிற்றிருக்கும் சர்வாங்கசுந்தரியின் அழகை வர்ணிக்க வார்தைகள் இல்லை. அதி அற்புதமாக விளங்குகிறாள். ஈசனுடன் இனைந்தத்தலமாத்லால் திருமணத்தடை நீக்கும் பரிகாரத்தலமாக விளங்குகிறது. திருக்கடையூரில் மார்க்கண்டேயனுக்குப் பாசக் கயிற்றை வீச, சிவபெருமான் குறுக்கிட்டுத் தடுத்தார். இதனால் பயந்த எமதர்மனை கருவிலி வந்து நீராடி தன்னை வணங்குமாறு ஈஸ்வரன் பணித்தார். எனவே எமன் இங்கு வந்து நீராடி வணங்கி தன் பாவம் நீங்கப்பெற்றான். இக்குளத்து நீரில் நீராடினாலும் தலையில் தெளித்து கொண்டாலும் எமபயம் போகும்.

அமைவிடம்[தொகு]

அப்பர் பாடல் பெற்றது இத்தலம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் 1 கி.மி. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம்.

அமைப்பு[தொகு]

வாயிலைக் கடந்து செல்லும்போது ராஜகோபுரம் உள்ளது. அடுத்து உள்ளே பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள முன் மண்டபத்தில் வலது புறம் விநாயகரும், இடது புறம் சுப்பிரமணியரும் உள்ளனர். அதற்கடுத்து பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மூலவர் கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நடராஜர், சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோயிலின் திருச்சுற்றின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் முன்பாக பலி பீடமும், நந்தியும் உள்ளன. அம்மன் சன்னதியின் இடது புறத்தில் சிம்மவாஹினி உள்ளார். கோயிலுக்கு முன்பாக கோயிலின் குளமான எம தீர்த்தம் உள்ளது. இக்கோயிலில் 27 மார்ச் 1997 மற்றும் 14 சூலை 2008இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

வழிபட்டோர்[தொகு]

இத்தலத்தில் இந்திரன், உருத்திரகணத்தர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

படத்தொகுப்பு[தொகு]