கனநீர் ஆலை, பரோடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரோடாவில் உள்ள கனநீர் ஆலை, இந்திய கனநீர் வாரியத்தால் இயக்கப்படும் ஏழு கனநீர் ஆலைகளுள் ஒன்று. அணுமின் நிலையங்களிலும், அணு ஆராய்ச்சி மையங்களிலும் கனநீர் அதிக அளவில் தேவைப்படுகிறது.[1] வளர்ந்து வரும் இதற்கான தேவைகளையும், வழங்கு முறையையும் ஒருங்கிணைக்கும் நோக்குடன் இந்தியாவில் கனநீர் வாரியம் இந்திய அணு சக்தித்துறையின் கீழ் அமைக்கப்பெற்றது. இந்த வாரியம் இந்தியாவில் முதன்முதலாக குஜராத் மாநிலத்தில் பரோடாவில் செயல்பட்டுவரும் குஜராத் உரத் தொழிற்சாலையின் (GSFC) வளாகத்தில் அமைத்தது.

பரோடாவில் அமைந்த கனநீர் ஆலை அம்மோனியா-ஐதரசன் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட ஒற்றை வெப்ப பதனிடும் செய்முறையில் செயல்படுவதாகும். குஜராத் மாநில உர-ரசாயனத் தயாரிப்பு நிறுவனம் அம்மோனியா தயாரிக்கும் முறையை குறைந்த அழுத்தத்துடன் செயல் படும் செய்முறைக்கு மாற்றியமைத்ததன் விளைவால், இந்த கனநீர் ஆலையின் பணிகளை தற்காலிகமாக கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[2] அது வரை டியூட்டிரியம் தேவைகள் அம்மோனியாவை பிரித்தெடுக்கும் முறையில் கிடைக்கப்பெற்றது. பிறகு இந்திய வல்லுனர்கள் இந்த செய்முறையை மாற்றியமைத்து டியூட்டிரியம் தேவைகளை ஆலையின் பயன்படுத்தும் நீரில் இருந்தே பிரித்தெடுக்கும் முறையை கையாண்டு வெற்றி அடைந்தனர். அதனால் அம்மோனியா ஒரு சுமைகாவிவாயுவாக மட்டுமே தற்பொழுது பயன்படுகிறது. இப்படியாக உரத் தொழிற்சாலையின் பங்கில்லாமலேயே இந்த கனநீர் ஆலையை செயல் படுத்தும் தொழில் நுட்பத்தை இந்தியர்கள் பயன்படுத்துவதில் வெற்றி கண்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ^ http://heavywaterboard.org/htmldocs/general/about.asp பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம்
  2. ^ http://www.heavywaterboard.org/htmldocs/plants/Baroda.asp பரணிடப்பட்டது 2009-10-22 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனநீர்_ஆலை,_பரோடா&oldid=3534802" இலிருந்து மீள்விக்கப்பட்டது