கண் கொடை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கண் தானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கண் கொடை அல்லது கண் தானம் என்பது ஒருவர் இறப்புக்குப் பின்பு அவருடைய கண்களைத் தானமாக அளிப்பதாகும். தானமாகப் பெறப்பட்ட கண்கள் சோதனைகளுக்குப் பின்பு அதற்கான பாதுகாப்புகளுடன் வைக்கப்படுகிறது. தானமாகப் பெறப்பட்ட கண்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக கண் வங்கிகள் செயல்படுகின்றன.
பொருளடக்கம் |
யார் கண் தானம் செய்யலாம்? [தொகு]
- ஆண், பெண் இரு பாலரும், அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம்.
- கண் கண்ணாடி அணிந்தவர்களும் செய்யலாம்.
- இரத்த அழுத்த நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் கூட தானம் செய்யலாம்.
- ஆஸ்துமா போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களும் கூட தானம் செய்யலாம்.
- உடலில் பிற உறுப்புகளில் புற்று நோய் வந்து இறந்தவர்களும் கூட தானம் செய்யலாம்.
யார் கண் தானம் செய்யக் கூடாது? [தொகு]
- கொடிய தொற்று நோய்களான எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, விசக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் வெறிநாய்க்கடி ஆகியவற்றால் இறந்தவர்களின் கண்களைத் தானம் செய்யக் கூடாது.
பயன்கள் [தொகு]
- கண் தானம் செய்பவர்களினால் கருவிழி நோயினால் பார்வையிழந்த இரண்டு நபர்களுக்கு கருவிழி மாற்று சிகிச்சை அளிப்பதன் மூலம் பார்வை கிடைக்கிறது.
சில பொதுவான தகவல்கள் [தொகு]
- ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்களைத் தானமாக அளிக்க முடியும்.
- ஒருவர் இறந்து 4 முதல் 6 மணி நேரத்திற்குள் அவரது கண்கள் அகற்றப்பட வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே கண்களை அகற்ற வேண்டும்.
- கண் வங்கிக் குழுவினர் கண் தானம் செய்தவரின் வீட்டிற்கே வந்து கண்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
- இந்த கண்களைத் தானமாக பெறும் நிகழ்வு 20 முதல் 30 நிமிடங்களில் முடிந்து விடும்.
- திசு ஒற்றுமை மற்றும் தொற்று நோய் பரிசோதனைக்காக சிறிது இரத்தம் இறந்தவரின் உடலிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
- இறந்த பின் கண்களை எடுப்பதால் முக மாறுதல்கள் ஏதும் ஏற்படாது.
- கண் தானம் செய்வதை மத சம்பிரதாயங்கள் எதுவும் எதிர்க்கவில்லை.
- கண் தானம் அளிப்பவரின் பெயரும், பெறுபவரின் பெயரும் ரகசியமாக வைக்கப்படும்.
கண் தானம் செய்தவரது உறவினர்கள் செய்ய வேண்டியது [தொகு]
கண் தானம் செய்த ஒருவர் இறந்த பின்பு அவரது உறவினர்கள் செய்ய வேண்டியவை
- மிக அருகிலுள்ள கண் வங்கிக்கு உடனடியாக தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தகவல் அளிக்க வேண்டும்.
- இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் சரியான முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றைத் தெளிவாக அளிக்க வேண்டும். இத்தகவல் கண் வங்கிக் குழுவினர் மிக விரைவாக வந்து சேர உதவுகிறது.
- கண்களைத் தானமாகப் பெறுவதற்கு இறந்தவரின் கணவன், மனைவி, உடன் பிறந்தவர் அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரும் மற்ற சாட்சிகள் இருவரும் எழுத்து மூலம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- கண் தானம் செயதவர் இறந்த உடனே கண் இமைகளை மூடி வைக்க வேண்டும்.
- இறந்தவர் உடல் இருக்குமிடத்தில் மின் விசிறியை நிறுத்தி வைக்க வேண்டும்.
- குளிர் சாதனப் பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருந்தால் அதனை இயக்கத்தில் வைக்கலாம்.
- தலையணையை வைத்து இறந்தவரது தலையைச் சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.
சில இந்தியப் புள்ளி விவரங்கள் [தொகு]
- இந்தியாவில் பார்வையற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சம்.
- கருவிழி நோயால் பார்வையிழந்து கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 10 இலட்சம்.
- ஒரு ஆண்டுக்குத் தேவையான கருவிழிகளின் எண்ணிக்கை 75 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை.
- இந்தியாவில் கண் தானம் மூலம் கிடைக்கும் கருவிழிகளின் எண்ணிக்கை 22 ஆயிரம். இந்த எண்ணிக்கையில் தரப் பரிசோதனைகளுக்குப் பின்பு நல்ல நிலையில் கிடைப்பது 40 முதல் 50 சதவிகிதம்தான். பிற கருவிழிகள் வேறு சில ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆதாரம் [தொகு]
- ரோட்டரி அரவிந்த் அகில உலகக் கண் வங்கி வெளியிட்டுள்ள சிறு கையேட்டுப் பிரதி.