கட்டிடக்கலைசார் அழகியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழகியல் என்பது அழகின் இயல்பு பற்றி ஆராய்கின்ற, தத்துவத்தின் ஒரு பிரிவாகும். அழகியல், ஓவியம், இசை, கட்டிடக்கலை, அரங்கக் கலைகள், இலக்கியம், உணவு பரிமாறல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை கட்டிடக்கலைசார் அழகியல் பற்றியதாகும்.

அழகியல்[தொகு]

அழகியல் பற்றிப் பலர் பலவிதமான விளக்கங்களைத் தந்துள்ளனர். அழகியல் அதை அனுபவிப்பவர்களின் புலன் உணர்வுகளைச் சார்ந்துள்ளது என ஒரு சாராரும், அவ்வாறான புலனுணர்வுகளுக்கு வெளியே குறிப்பிட்ட பொருள்களிலேயே அது பொதிந்துள்ளது என இன்னொரு சாராரும் வாதிடுகின்றனர். ஒரு பொருளுக்குரிய அழகியற் பண்பை அதனை உருவாக்கும் கலைஞனே தீர்மானிக்கிறான் என்போரும், அது அப்பொருளின் சூழ்நிலையாலேயே (Context) தீர்மானிக்கப்படுகின்றது எனக் கூறுவோரும் இருக்கின்றனர். எது எப்படியிருப்பினும், ஒரு பொருளின் அழகியற் பண்பு எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது என்பதும் எவ்வெவற்றுக்கூடாக வெளிப்படுத்தப்படுகின்றது என்பதும் முக்கியமான விடயங்களாகும்.

கட்டிடக்கலையும் அழகியலும்[தொகு]

கட்டிடக்கலை ஒரு கலையும் அறிவியலுமாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், இதன் கலைப் பண்பே, அதாவது கட்டிடக்கலையின் அழகியற் கூறே வரலாற்று ரீதியில் பெரிதும் ஆராயப்பட்டுள்ளது எனலாம். கட்டிடக்கலை பெருமளவுக்கு அழகியல் சாந்த ஒரு துறையாகவும், பிற அழகியல் துறைகளான ஓவியம், சிற்பம் போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டிருந்தபோதும், கட்டிடக்கலை தனித்துவமான பல பண்புகளையும் கொண்டுள்ளதெனலாம்.

ஓவியம், சிற்பம் போன்றவற்றை அவற்றை அனுபவிப்பவர்கள் அவற்றுக்கு வெளியிலிருந்து அனுபவிக்கிறார்கள். அவற்றின் கலைத்துவம் அவர்களுக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது. ஆனால் கட்டிடக்கலையைப் பொறுத்தவரை மனிதர்கள் வெளியிலிருந்து அனுபவிப்பதோடன்றி, உள்ளே சென்றும் வாழுகிறார்கள். அதனால் கட்டிடங்கள் குறிப்பிட்ட சில செயற்பாட்டுத் தேவைகளையும் நிறைவு செய்யவேண்டியிருக்கிறது. அதனால் கட்டிடக்கலை சார்ந்த அழகியலானது கட்டிடங்களின் செயற்பாடுகளோடு இணைந்த அழகியலாக உருவெடுக்கின்றது. கட்டிடங்கள் மனிதருடைய பல்வேறுபட்ட செயல்பாடுகளுக்கு இடம்கொடுக்க வேண்டி இருப்பதனால்தான் கட்டிடக்கலை வடிவமைப்பில் வெளியும் (Space), அதனைக் கையாளுதலும் முக்கியமானவையாக இருக்கின்றன. செயற்பாட்டுத் தேவைகள் எனும்போது செயல்பாடுகளுடன் தொடர்புடைய இடத் தேவை மற்றும் உடலியல், உளவியல் சார்பான தேவைகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இவை கட்டிடங்களின் உள்ளேயும், வெளியேயும் வெளியின் அளவு, வடிவம், அவற்றுக்கிடையிலான தொடர்புகள் என்பவற்றைத் தீர்மானிக்கின்றன. இவ்வெளிகளைச் சூழ்ந்து அவற்றை வரையறுப்பதே சுவர், கூரை, தளங்கள் முதலிய கட்டிடக் கூறுகளின் சிறப்பான பணியாகின்றது. இதன் காரணமாகவே உள்ளே நடைபெறக்கூடிய செயல்பாடுகளைக் கட்டிடங்களின் தோற்றங்கள் வெளிக்காட்டுபவையாக இருக்கின்றன. கட்டிடக்கலையில் "வடிவம் செயல்பாடுகளைப் பின்பற்றியே உருவாகின்றது" என்ற கருத்து இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான "மீஸ் வான் டெர் ரோ" என்பவரால் முன்வைக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நுணுக்கமான கைவேலைப்பாடுகள் கட்டிடக்கலையின் அழகியல் அம்சத்தில் சிறப்பிடம் பெற்றிருந்தன. ஆனால் தொழிற்புரட்சியும் அதனோடு இணைந்த பெரும்படித் தயாரிப்பும் கட்டிடக்கலையில் நவீனத்துவத்தின் எழுச்சிக்கு வித்திட்டபோது நுணுக்கமான அலங்காரங்கள் கட்டிடக்கலை வடிவமைப்புக்களில் இருந்து விடை பெற்றுக்கொண்டன. கட்டிடங்களில் அழகியல் புதிய வழிகளில் புகுத்தப்பட்டது.

கட்டிடக்கலையில் அழகியலின் முக்கியத்துவம்[தொகு]

அழகியல் என்பது புலன் உணர்வு சம்பந்தப்பட்டது. மனிதருடைய பல்வேறு விதமான உளவியல் தேவைகளை நிறைவு செய்யும் தன்மை கொண்டது. மனநிறைவையும், மகிழ்வையும் அளிக்கக்கூடியது.

கட்டிடக்கலைசார் அழகியற் கூறுகள்[தொகு]

கட்டிடங்களில் அழகியலைப் பற்றிப் பேசும்போது, அவ்வுணர்வு கட்டிடத்தின் எவ்வெக் கூறுகளினூடாக உணரப்படுகின்றது எனச் சிந்தித்தல் வேண்டும். இவற்றை நான்கு பிரிவுகளில் ஆராயலாம்.

  1. உணர்வுசார் கூறுகள் (Sensory Elements)
  2. வடிவம்சார் கூறுகள் (Formal Elements)
  3. தொழில்நுட்பம்சார் கூறுகள் (Technical Elements)
  4. வெளிப்பாட்டுக் கூறுகள் (Expressive Elements)

உணர்வுசார் கூறுகள்[தொகு]

உணர்வுசார் கூறுகளில், கோடு, வடிவம், மேற்பரப்புத் தன்மை, நிறம், ஒளியும் இருளும், வெளி என்பன அடங்கும்.

வடிவம்சார் கூறுகள்[தொகு]

வடிவம் சார் கூறுகள் வடிவுருக்களின் உருவாக்கம், லயம், சமச்சீர்த்தன்மை, சமநிலை, Contrast, அளவுவிகிதம் (Proportion), Theme, ஒருமைப்பாடு (Unity) என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது.