கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஔ
தமிழ் எழுத்துக்கள்
க் ங் ச் ஞ் ட்
ண் த் ந் ப் ம்
ய் ர் ல் வ் ழ்
ள் ற் ன்

() தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது பன்னிரண்டாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஔகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஔவன்னா" என்பது வழக்கம்.

"ஔ" வின் வகைப்பாடு[தொகு]

தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துகள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]

இனவெழுத்து[தொகு]

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இந்த அடிப்படைகளில், என்பது க்கு இன எழுத்தாகும் என்கிறது நன்னூல்[2].

"ஔ" வும் மெய்யெழுத்துகளும்[தொகு]

வுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து ஔகார உயிர் மெய்யெழுத்துகள் உருவாகின்றன. மெய்யெழுத்துகள் முதலெழுத்துகளாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துகளையே குறிக்கின்றன. ஔகார உயிர் மெய்களில் ஔகாரத்தைக் குறிக்க ஒற்றைக் கொம்புக் குறியும், என்ற கொம்புக்கால் குறியும் அகரம் ஏறிய மெய்களுடன் சேர்த்தே எழுதப்படுகின்றன.

18 மெய்யெழுத்துகளோடும் ஔகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.

மெய்யெழுத்துகள் சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர் வரிவடிவம் பெயர்
க் இக்கன்னா க் + ஔ கௌ கௌவன்னா
ங் இங்ஙன்னா ங் + ஔ ஙௌ ஙௌவன்னா
ச் இச்சன்னா ச் + ஔ சௌ சௌவன்னா
ஞ் இஞ்ஞன்னா ஞ் + ஔ ஞௌ ஞௌவன்னா
ட் இட்டன்னா ட் + ஔ டௌ டௌவன்னா
ண் இண்ணன்னா ண் + ஔ ணௌ ணௌவன்னா
த் இத்தன்னா த் + ஔ தௌ தௌவன்னா
ந் இந்தன்னா ந் + ஔ நௌ நௌவன்னா
ப் இப்பன்னா ப் + ஔ பௌ பௌவன்னா
ம் இம்மன்னா ம் + ஔ மௌ மௌவன்னா
ய் இய்யன்னா ய் + ஔ யௌ யௌவன்னா
ர் இர்ரன்னா ர் + ஔ ரௌ ரௌவன்னா
ல் இல்லன்னா ல் + ஔ லௌ லௌவன்னா
வ் இவ்வன்னா வ் + ஔ வௌ வௌவன்னா
ழ் இழ்ழன்னா ழ் + ஔ ழௌ ழௌவன்னா
ள் இள்ளன்னா ள் + ஒ ளௌ ளௌவன்னா
ற் இற்றன்னா ற் + ஔ றௌ றௌவன்னா
ன் இன்னன்னா ன் + ஔ னௌ னௌவன்னா

சொல்லில் ஔகாரம் வரும் இடங்கள்[தொகு]

'ஔ' எழுதும் முறை

தனி சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துகளுடன் சேர்ந்தும் சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[3]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ, யௌ, ரௌ, லௌ, ழௌ, ளௌ றௌ, னௌ ஆகிய எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல் சகரத்துடனும், யகரத்துடனும் ஐகாரம் சொற்களுக்கு முதலில் வரும் என்கிறது. தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் ரௌ, லௌ போன்ற எழுத்துகளும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். ரௌத்திரம், லௌகீகம் என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.

ஔகாரம் தனித்தோ, மெய்களோடு சேர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வருவதில்லை. ககர மெய்யுடனும், வகர மெய்யுடனும் மட்டுமே ஔகாரம் சொல்லுக்கு இறுதியில் வரும். ஔகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.

பிரெய்லியில் ஔகாரம்[தொகு]

கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துகளை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஓர் எழுத்துகான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாவது வரிசையில் வலது புள்ளியும், இரண்டாவது வரிசையில் இடது புள்ளியும், மூன்றாவது வரிசையில் வலது புள்ளியும் புடைத்து இருப்பின் அஃது வைக் குறிக்கும். இதைக் கீழே உள்ள படம் காட்டுகிறது.

பாரதி பிரெய்லியில் ஔகாரம்

குறிப்புகள்[தொகு]

  1. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11
  2. இளவரசு, சோம., 2009. பக். 44
  3. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 33

உசாத்துணைகள்[தொகு]

  • இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
  • பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
  • வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔ&oldid=3601157" இலிருந்து மீள்விக்கப்பட்டது