ஓமியோபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமுவேல் ஹானிமன், ஓமியோபதியின் தந்தை எனக் கருதப்படுகிறார்

ஓமியோபதி (homeopathy) என்பது ஒரு போலி அறிவியல்[1][2][3][4] மாற்று மருத்துவ முறையாகும். இது மருத்துவர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட போலி அறிவியல் கோட்பாடுகளை கொண்ட ஒரு மருத்துவமுறை ஆகும். ஓமியோபதி மருத்துவமுறை, ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் என்ற கோட்பாட்டின்படி இயங்கும் முறையாகும். முழுமையைக் கருத்துருவாகக் கொண்ட உலகளாவிய சிகிச்சை முறையே ஓமியோபதி ஆகும். குறிப்பாக ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா, ஆசியாவை உள்ளடக்கிய 85 நாடுகளுக்கும் மேலானவற்றில் இம்முறை நடைமுறையில் உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஓமியோபதி மருந்துச் சந்தை பல மில்லியன் டாலர் தொழிற்சாலையாகும். ஓமியோபதி மருந்துகள் தாவரம், விலங்குப் பொருட்கள், தாதுக்கள் அல்லது சில மந்தப் பொருட்களில் இருந்தும் உருவாக்கப்படுகின்றன.

நோயின் காரணம்

ஓமியோபதி மருத்துவர், உடல், மனம், மற்றும் உணர்வுகள் தனித்தனியானவைகளும் சுதந்திரமானவைகளும் அல்ல என்றும், அவைகள் ஆரோக்கியம், நோய் மற்றும் சிகிச்சையில் ஒருங்கிணைந்தவை என்றும் புரிந்து கொள்ளுகிறார். இந்த முழுமையானப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு, நோயாளியின் உடல் மனம் சமூக ஆன்மீக தன்மைகளுக்குப் பொருந்தும் வண்ணம் இயற்கையில் இருந்து உருவாக்கப்படும் மருந்துகளை பயன்படுத்தி உடலின் சொந்த குணப்படுத்தும் ஆற்றல்களைத் தூண்டி விடுகிறார்.

நோயிற்கான காரணம், அகமுரண்பாடே ஆகும். எனவே உயிராற்றலில் ஏற்படும் பாதிப்பே, பின் நோயாக வெளியுறுப்புகளில் வெளிப்படுகிறது. இதனை, மருத்துவர் கென்ட், “உயிராற்றல் பாதிக்கப்பட்டுள்ளதன் வெளிப்பாடே, வெளியுறுப்புகளில் ஏற்படும் நோய் பாதிப்பு” என்று கூறுகிறார். மேலும், ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு குறிப்பிட்ட பொருளை ஏற்கும் திறன் உண்டு. அது நோய்க்கும் நலனுக்கும் சமமாகப் பொருந்தும் என்பதாகும் என்று கூறுகிறார்.[5][6]

நோய் கண்டறிதல்

கடுமையான, மற்றும் நீடித்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கான ஹோமியோபதி சிகிச்சையின் மேல் மக்களுக்கு அதிகமான நம்பிக்கை உள்ளது. நோய்த்தடுப்பும் சுகாதார மேம்பாடும் அதன் பிற வலிமைகள். நவீன மருத்துவ ஆய்வுகள் ஒவ்வாமை நாசியழற்சி, நார்த்திசு அழற்சி, சளிக்காய்ச்சல், ஆகியவற்றிற்கு ஓமியோபதி மருந்துகள் பலனளிப்பதை கண்டறிந்துள்ளன. தலைவலி, காய்ச்சல், மன அழுத்தம், கீல்வாதம், தாய்சேய் பிரச்சினைகள், சொறி போன்ற நோய்களுக்கு ஓமியோபதி மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார். பல்வேறு நோய்களுக்குக் ஓமியோபதி மருந்துகள் தனியாகவும், பிற சிகிச்சை முறை மருந்துகளுடன் இணைத்தும் பயன்படுத்தப்படுகிறது. நோயின் முழு வரலாறையும், நோயாளியின் மனநிலை, ஆளுமை, வாழ்க்கை முறையையும், உணவு பழக்கவழக்கத்தைப் புரிந்துகொண்டு, நோய்கண்டறிதலே இதன் முதன்மையான அணுகுமுறை ஆகும்.

ஓமியோபதி மருந்துகளின் தன்மை

ஓமியோபதி மருந்துக் குப்பிகள்
ஓமியோபதி மருந்துகள்

ஓமியோபதியில் மருந்துகள் இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் இருந்து உருவாக்கப்படுகிறது. மருந்துகள் உருவாக்கப்படும் போது அதனுடைய இயற்கை மூலக்கூறுகள் பெரும்பாலும் குலுக்குதல், நீர்க்க செய்தல் போன்ற முறைகளினால் அசல் மருத்துவத்தன்மை வாய்ந்த மூலக்கூறுகள் நீக்கப்படுகின்றன. இதன் தி  மருந்துகள் பெரும்பாலும் கனிமங்கள், தாவர பொருட்கள் மற்றும் பல்வேறு மூலங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றது . அசல் மூலப்பொருள்  கரையக்கூடியவயாக இருக்கவேண்டும்,

அசல் மூலப்பொருளின் ஒரு பகுதி பத்து பகுதி நீருடனோ, ஆல்ககால் உடனோ கலக்கி குலுக்கப்படும். இது 1X கலவை எனப்படும். 1C  என்பது ஒருபகுதி அசல் மூலப்பொருள் 100 பகுதி நீருடனோ, ஆல்கஹால் உடனோ கலக்கி குலுக்கப்படும். 3C என்பது ஒருபகுதி அசல் மூலப்பொருள் 1,000,000 பகுதி நீருடனோ, ஆல்கஹால் உடனோ கலக்கப்பட்டுள்ளது எனப்பொருள்படும்.இப்படி 30C  வரை கொண்டு செல்லப்படும் இந்த கலவையில் அசல் மூலக்கூறு 1,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 மூலக்கூறு கொண்ட நீரில் கலந்திருக்கும் ,

தற்போதுள்ள பெரும்பாலான ஓமியோபதி மருந்துகள்(கலவைகள்) 30C முதல் 200C  வரை கொடுக்கப்பட்டு வருகின்றது. இதில் அசல் மூலக்கூற்றை கண்டறிவதே சிரமம். கடைசியில் நீர் மட்டுமே மிஞ்சுகிறது, டாக்டர்.திரு.ஹானிமன் அவர்களின் நம்பிக்கைப்படி "நீரின் ஞாபகசக்தி" கோட்பாடு பயன்படுத்துகின்றது. இதனால் தான் பெரும்பாலான மருந்துகள் பக்க விளைவுகள் இல்லாமல் இருக்கிறது.

இந்தியாவில்

மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்து மற்றும் ஒப்பனைப் பொருள் விதி 1945 ஆகியவற்றின் மூலம் ஓமியோபதி மருந்து உற்பத்தி அங்கீகரிக்கப்பட்டு முறைப்படுத்தப் படுகிறது. மருந்துகள் புகழ்பெற்ற மருந்துக் குழுமங்களால் அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள சிறந்த உற்பத்தி நடைமுறைகளின் படி உற்பத்தி செய்யப்படுகின்றன. ஓமியோபதி மத்திய கழகச் சட்டம் 1973, ஓமியோபதியை தேசிய மருந்து முறைகளில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் ஓமியோபதிக் கல்வியும், பயிற்சியும் பிற மருத்துவ முறைகளை ஒத்தே கற்பிக்கப் படுகிறது. இம்மருத்துவத்தில் ஈடுபடுவோர்க்கு சட்ட பூர்வமான பாதுகாப்பிற்காக மாநில,மத்திய பதிவேடுகளில், ஏதாவது ஒன்றில் பதிவு செய்வது கட்டயாமாகும். இதற்கான மத்திய/மாநில சங்கம் அல்லது வாரியத்தை அணுக வேண்டும். இந்தியாவை ஓமியோபதியின் உலகின் மிகப்பெரிய வரத்தக நடுவமாகக் கருதுகின்றனர்.

இம்மருத்துவமுறை, இந்தியாவில் வளர்ந்து வருகிறது. இதனால் பல நாடுகளில் தகுதி வாய்ந்த ஓமியோபதி மருத்துவர்கள், போதனையாளர்களும், பயிற்சியாளர்களுக்குமான தேவைகள் வளர்ந்து வருகின்றன. இணையவழி, தொலைப்பேசிவழி ஆலோசனை போன்ற நுட்பங்களால், தொலை – ஓமியோபதி மருத்துவமும், வலைக்கருத்தரங்குகளும் பரவலாக இளம் மருத்துவர்களுக்கு நல்ல புதிய வேலைவாய்ப்புகளாகக் கருதப்படுகின்றன. பாதுகாப்பான மருந்து, குழந்தைகளுக்கும் பொருத்தமான, எளிய மருந்தளிக்கும் முறை, குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துகள், மருந்துகளின் வாழ்நாள் எல்லை இல்லாமையால் ஒரு குறிப்பிட்ட ஆலோசனையின் படி பல பத்தாண்டுகள் கழித்தும் பயன்படுத்தலாம். எனவே, பழைய மருந்துகளை வீண் குப்பையாகக் கருதி எறிய வேண்டியதில்லை. குறிப்பாக நாட்பட்ட நோய்களின் தீவிரத்தினை, எளிய முறையில் செலவு குறைவாகத் தனிப்பட்ட முறையில் மருந்தெடுக்கும் வாய்ப்பு இருப்பதால், இம்மருத்துவம் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது.

ஓமியோபதி மருத்துவம் மற்றும் அறுவையியல் இளவர் (B.H.M.S) என்பது பட்டப் படிப்பின் பெயராகும். இப்பட்டத்தை வழங்கும் 186 ஓமியோபதி கல்லூரிகள் உள்ளன. அவைகள் பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், பீகார் , சத்திஸ்கர், சண்டிகார் , புதுதில்லி , கோவா , குஜராத் , அரியானா , இமாச்சலப் பிரதேசம் , ஜார்க்கண்ட், கர்நாடகா , கேரளா , மத்திய பிரதேசம் , மகாராட்டிரம், ஒடிசா , பஞ்சாப் , ராஜஸ்தான் , தமிழ்நாடு , தெலுங்கானா , உத்தரகாண்ட் , உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கற்பிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. Raimo Tuomela (1987). "Chapter 4: Science, Protoscience, and Pseudoscience". Rational Changes in Science: Essays on Scientific Reasoning. Boston Studies in the Philosophy of Science. 98. Springer. பக். 83–101. doi:10.1007/978-94-009-3779-6_4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-94-010-8181-8. 
  2. Smith K (2012). "Homeopathy is Unscientific and Unethical". Bioethics 26 (9): 508–12. doi:10.1111/j.1467-8519.2011.01956.x. https://zenodo.org/record/1035885. 
  3. "Science, Pseudoscience, and Not Science: How Do They Differ?". Chapter 2: Science, Pseudoscience, and Not Science: How Do They Differ?. Springer. 2014. 19–57. doi:10.1007/978-1-4614-8541-4_2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4614-8540-7. "within the traditional medical community it is considered to be quackery" 
  4. Ladyman J (2013). "Chapter 3: Towards a Demarcation of Science from Pseudoscience". Philosophy of Pseudoscience: Reconsidering the Demarcation Problem. University of Chicago Press. பக். 48–49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-05196-3. "Yet homeopathy is a paradigmatic example of pseudoscience. It is neither simply bad science nor science fraud, but rather profoundly departs from scientific method and theories while being described as scientific by some of its adherents (often sincerely)." 
  5. Edzard Ernst (2002). "A systematic review of systematic reviews of homeopathy". British Journal of Clinical Pharmacology 54 (6): 577–82. doi:10.1046/j.1365-2125.2002.01699.x. பப்மெட்:12492603. 
  6. Shang, Aijing; Huwiler-Müntener, Karin; Nartey, Linda; Jüni, Peter; Dörig, Stephan; Sterne, Jonathan AC; Pewsner, Daniel; Egger, Matthias (2005). "Are the clinical effects of homoeopathy placebo effects? Comparative study of placebo-controlled trials of homoeopathy and allopathy". The Lancet 366 (9487): 726–32. doi:10.1016/S0140-6736(05)67177-2. பப்மெட்:16125589. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமியோபதி&oldid=3637961" இலிருந்து மீள்விக்கப்பட்டது