ஒருதுணை மணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருதுணை மணம் (Monogamy) என்பது ஒரு பெண்ணும், ஒரு ஆணும் மண உறவில் இணைந்து வாழ்வதைக் குறிக்கின்றது. சில சமுதாயங்களில், ஒருவர் தனது வாழ்க்கைக் காலம் முழுவதும், ஒருவரை மட்டுமே கணவனாகவோ அல்லது மனைவியாகவோ கொண்டு வாழும் ஒருதுணை மணமுறை உள்ளது. வேறு சில சமுதாயங்களில், எந்தவொரு காலகட்டத்திலும் ஒருவரை மட்டுமே துணைவராகக் கொண்டு வாழும் முறை உள்ளதாயினும், காலத்துக்குக் காலம் துணைவர்களை மாற்றிக்கொண்டு வாழ்வதையும் காணலாம். இது, கணவனோ, மனைவியோ இறந்து போவதனாலும், விவாகரத்தினாலும் ஏற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மணத் தொடர்புகளை ஒரு துணைவருடன் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளும், இத்தகைய மணமுறை தொடர் ஒருதுணை மணம் என அழைக்கப்படுகின்றது.

தற்காலத்தில் பெரும்பாலான நவீன சமுதாயங்களில் ஒருதுணை மணமுறையே பின்பற்றப்பட்டு வந்தாலும், மனித வரலாற்றில், மிகப் பெரும்பாலான சமுதாயங்களில், பலதுணை மண முறையே பின்பற்றப்பட்டு வந்ததைக் காணமுடியும்.

ஒரு காலத்தில் மனித இனத்தின் கூர்ப்பில் (பரிணாமம்) உயர்ந்தநிலை ஒருதுணை மண முறையே எனக்கருதப்பட்டு வந்த போதிலும், தற்காலத்தில் மானிடவியலாளர்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. நவீன சமுதாயங்களில் இது விரும்பிப் பின்பற்றப்படும் ஒரு முறை என்ற அளவிலேயே இதில் சிறப்புக் காணமுடியும். இந்து சமயம், கத்தோலிக்க சமயம் முதலான பல சமயங்கள் பலதுணை மணத்தைப் பொதுவாக ஏற்பதில்லை. இதுவும் ஒருதுணை மணமுறை பரவி வருவதற்கான காரணங்களில் ஒன்றாகும். பல சமுதாயங்களில் பலதுணை மணத்துக்குத் தேவையை ஏற்படுத்துகின்ற பொருளாதாரக் காரணங்கள், நவீன சமுதாயங்களில் ஒருதுணை மணமுறைக்கே சாதகமாக உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருதுணை_மணம்&oldid=3082894" இலிருந்து மீள்விக்கப்பட்டது