என். விஜய் சிவா
என். விஜய் சிவா (பி. 29 மார்ச், 1967) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். இவர் டி. கே. ஜெயராமனின் மாணாக்கர் ஆவார்.
[தொகு] ஆரம்பகால வாழ்க்கை
என்.விஜய் சிவா, அகிலா சிவாவுக்கும் ஏ. என். சிவாவுக்கும் மகனாகப் பிறந்தார். பத்மா சேஷாத்ரி பால பவன் உயர்நிலைப்பள்ளி, சென்னையில் இவர் படித்தார். இளநிலைப்பட்டத்தை சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் முதுநிலைப்பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். இவர் மிருதங்கமும் வாசிக்கக்கூடியவர். இதற்குரிய பயிற்சியை கும்பகோணம் ராஜப்பா ஐயரிடம் பெற்றுள்ளார்.
[தொகு] தொழில் வாழ்க்கை
இந்தியா முழுக்க அனைத்து முக்கிய சபாக்களில் இவர் பாடியுள்ளார். தனது இசைக் கச்சேரிகளை அமெரிக்கா,கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் நிகழ்த்தியுள்ளார். 'இசைப் பேரோலி' விருது, கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் எனும் சபாவால் 1995 ஆம் ஆண்டு இவருக்குத் தரப்பட்டது. அதே ஆண்டில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை, 'சிறப்பான இசை தந்த இளங்கலைஞர்' விருதினை இவருக்கு வழங்கியது. கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையால் 'கல்கி கிருஷ்ணமூர்த்தி விருது' இவருக்கு 1996 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.