ஊசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஊசல்

ஊசல் என்பது ஊஞ்சல். குழந்தை ஊஞ்சலில் ஆடும்போது இன்பம் கண்டு தூங்குகிறது. பெரியவர்கள் தாமே ஊஞ்சலாடி மகிழ்கின்றனர். சங்கப்பாடல்கள் இதனை ஊசல் என்கின்றன.

சங்கப்பாடல்களில் வரும் சில குறிப்பிடத்தக்க செய்திகள் இங்குச் சுட்டப்படுகின்றன.

பொருளடக்கம்

ஊசல் செய்திகள் [தொகு]

  • அசோகு [1] ஆல் [2] ஞாழல் [3] தாழை [4] பனை [5] வேங்கை [6] முதலான மரங்களில் ஊசல் கட்டி விளையாடியது பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • தினைப்புனம் காக்கும் மகளிர் பரண்மீது ஊசல் கட்டி விளையாடியிருக்கின்றனர். [7]
  • சிலர் வேல்களை நட்டு இடையில் கயிறு கட்டி ஆடினர் [8]
  • தாழைநார்க் கயிற்றாலும் [9] பனைநார்க் கயிற்றாலும் [10] ஊசல் கட்டி ஆடியிருக்கிறார்கள்.
  • ஊசலாடுதலை ஊசல் தூங்குதல் என வழங்கினர். விளையாட்டுத் தோழியர் பலர் சேர்ந்து ஆட்டிவிடுவது பற்றியும் [11] தானே தனியே உந்தி ஆடியது பற்றியும் [12] காதலன் ஆட்டிவிட்டு ஆடியது பற்றியும் [13] குறிப்புகள் உள்ளன.
  • பனைமரத்து ஊசலில் பலர் ஒன்றாக அமர்ந்து ஆடியது பற்றியும் [14] குறிப்புகள் உள்ளன.
  • காதலியின் முன்புறம் நின்று காதலன் ஆட்டிவிட்டது பற்றியும் [15] காதலி பொய்யாகக் காதலன்மீது விழுவது பற்றியும் [16] குறிப்புகள் உள்ளன.

ஊசல்சீர் [தொகு]

தலைவி ஊஞ்சலில் ஆடுகிறாள்.
தோழியை அவள் ஊசல்சீர் பாடுக என்கிறாள்.
தலைவியின் தோளில் கரும்பு எழுதியவன் இப்போது வாட விட்டுவிட்டான் என்று இணைந்திருக்கும் அன்றில் பறவைகள் இரவெல்லாம் அகவவில்லை என்னும் பொருள்படத் தோழி பாடுகிறாள்.[17]

அப்படி இல்லை
ஊசல்நீரை அழித்து ஒன்று பாடுகிறேன்.
அன்று அவன் இரவெல்லாம் நம்மோடு இருந்தான் அல்லவா? என்று பாடுகிறாள் தவைவி. [18]

ஊசல்வரி [தொகு]

சிலப்பதிகாரத்தில் ஊசல்வரிப் பாடல்கள் மூன்று உள்ளன.
அவற்றில் ஒவ்வொன்றிரும் ஐந்து அடிகள் உள்ளன.
முதல் 4 அடிகளை ஒருத்தியும், ஐந்தாவது அடியை மற்றொருத்தியும் பாடுகின்றனர். [19]

ஊசல் பருவம் [தொகு]

பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் ஊசல்பருவம் என 10 பாடல்கள் பாடுகின்றனர்.[20]

இவற்றையும் பார்க்க [தொகு]

அடிக்குறிப்பு [தொகு]

  1. அகம் 38,68
  2. அகம் 385
  3. அகம் 20
  4. கலித்தொகை 130
  5. அகம் 372
  6. நற்றிணை 368
  7. அகம் 368
  8. நற்றிணை 165
  9. அகம் 20
  10. நற்றிணை 90
  11. நற்றிணை 90
  12. கலித்தொகை 37
  13. அகம் 385
  14. அகம் 372
  15. அகம் 385
  16. கலித்தொகை 37
  17.  
    தன்துணை இல்லாள் வருந்தினாள் கொல் என
    இன்துணை அன்றில் இரவெல்லாம் அகவாவே – கலித்தொகை 131-27மு28.

  18.  
    அருளினன்கொல் தோழி அருளினன்கொல் தோழி
    இரவெல்லாம் தோழி அருளனன் – கலித்தொகை 131 – 35மு36.

  19.  
    வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல்
    தென்குமரி ஆண்ட செருவில் கயல்புலியான்
    மன்பதைகாக் குங்கோமான் மன்னன் திறம்பாடி
    மின்செய் இடைநுடங்க ஆடாமோ ஊசல்
    விறல்வில் பொறிபாடி ஆடாமோ ஊசல். - சிலப்பதிகாரம் வாழ்த்துக்காதை

  20.  
    புள்ளொலி யெழக்குடி புகுந்தசுந் தரவல்லி
    பொன்னூச லாடியருளே
    புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
    பொன்னூச லாடியருளே. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ஊசல்பருவம் பாடல் 1  

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஊசல்&oldid=1024468" இருந்து மீள்விக்கப்பட்டது