உள்ளூர் பரமேசுவரன்
உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர் (சூன் 6, 1877-சூன் 15,1949) (மலையாளம்: ഉള്ളൂര് എസ്. പരമേശ്വരയ്യര്) உள்ளூர் என அறியப்படுபவர், மலையாள இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புகழ்பெற்ற கவிஞரும் வரலாற்றாளரும் ஆகும்.இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மலையாள நவீன கவியுலகின் மும்மூர்த்திகள் எனப் போற்றப்படும் மூவரில் ஒருவர். மற்றவர்கள் குமரன் ஆசான் மற்றும் வள்ளத்தோல் நாராயண மேனன் ஆவர். உள்ளூர் பரமேசுவரன் மலையாள மரபுக்கவிதையின் மறுமலர்ச்சிக்கு உதவினார்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செங்கணாச்சேரியை அடுத்த பெருண்ணாவில் தாமரச்சேரி இல்லத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.தந்தை ஆசிரியராக பணிபுரிந்து வந்த சுப்பிரமண்ய அய்யர்.தாய் பகவதியம்மை. தந்தையின் இளவயது இறப்பினை அடுத்து அன்னையுடன் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உள்ளூர் கிராமத்தில் வாழத்துவங்கினார். 1897இல் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் மெய்யியல் துறையில் பட்டம் பெற்றார். அரசு ஊழியராக பணிபுரியத்துவங்கி பல பதவிகளை வகித்து திருவிதாங்கூர் அரசின் தலைமைச் செயலராக பணியாற்றியவர்.
அவரது துவக்க கால கவிதைகளில் சமசுகிருத மொழியின் தாக்கம் கூடுதலாக இருந்தது. பிரேமசங்கீதம் என்ற அவரது முதன்மை கவிதை மலையாள இலக்கியத்தின் வரலாற்றை தொகுத்திருந்தது. காதலே உண்மையான சமயம் என விவரித்திருந்தார். மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் ஒருங்கிசைவை நிலைநிறுத்தினார்.
1914ஆம் ஆண்டு வெளியிட்ட உமாகேரளம் என்ற புத்தகம் மகாகாவியம் என புகழப்பட்டது.17ஆம் நூற்றாண்டு திரிவிதாங்கூர் அரசியலை முன்வைத்து எழுதப்பட்ட நீண்ட பாடலாகும். பிங்களா, கர்ணபூசணம்,பக்திதீபிகா மற்றும் சித்திரசால என்பன அவரது சிறந்த பிற படைப்புகளாகும்.
கேரள இலக்கியத்தின் வரலாற்றை ஐந்து பாகங்கள் கொண்ட கேரள சாகித்திய சரிதம் என்னும் நூலாக எழுதினார்.