உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது.
[தொகு] பங்குபற்றும் பிற அமைப்புக்கள்
யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன. பின்வரும் அமைப்புக்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
- நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (International Federation of Library Associations and Institutions)
- அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் (International Publishers Association)
- உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள்
[தொகு] ஏப்ரல் 23 இன் முக்கியத்துவம்
உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ் (Miguel de Cervantes), வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.
இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள்.
[தொகு] வெளியிணைப்புகள்
- யுனெஸ்கோ இணையதளத்தில் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் - (ஆங்கிலத்தில்)
- 1995 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ தீர்மானம் - (ஆங்கிலத்தில்)