உலகத் தமிழாராய்ச்சி மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research, IATR) என்பது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தும், தமிழ் ஆய்வுப் பணிகளை முன்னெடுக்கும் ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1960களில் "அரசியல் சார்பற்ற கல்விசார் அமைப்பாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு" தொடங்கப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

ஈழத்த்த் தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார் (1913-1980) உலக அளவில் தமிழாராய்ச்சி மன்றத்தை 1964-ஆம் ஆண்டு தொடங்கினார். இது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் "உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகப் பேராசிரியர்களைத் தமிழாய்வில் ஈடுபடச் செய்தல், தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைக்கழகத் தொடர்புகளை ஏற்படுத்துதல்" என்பதாகும்.[2]

இந்நோக்கத்திற்கமைவாக, இரண்டாண்டுகட்கு ஒருமுறை பல்வேறு நாடுகளில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த இம்மன்றம் முடிவு செய்தது.[2] முதல் உலகத் தமிழ் மாநாட்டை 1966-இல் கோலாலம்பூரில் நடத்தியது. தொடர்ந்து சென்னை (1968), பாரிசு (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987), மொரீசியசு (1989), தஞ்சாவூர் (1995), கோலாலம்பூர் (2015), சிகாகோ (2019) ஆகிய நகரங்களில் பத்து மாநாடுகள் நடத்தப்பட்டன.

பேராசிரியர் நொபொரு காராசிமா போன்ற உலகத் தமிழ் ஆய்வாளர்களின் விருப்பத்திற்கமைய உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் World Tamil Research Association என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு, புத்துயிர் பெற்றது.[2]

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு[தொகு]

விமர்சனங்கள்[தொகு]

தமிழ்நாட்டில் நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் அரசியல் இலாபங்களுக்காக நடத்தப்படுகின்றன என்றும், அரசியல் தலையீடுகள் மன்றத்தின் கல்விசார் சுதந்திரம் கேள்விக்குறியாக்கின்றது என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]