ஈ. சிறீதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈ. சிறீதரன்
பிறப்புசூன் 12, 1932
பாலக்காடு, கேரளா
மற்ற பெயர்கள்மெட்ரோ மேன்
படித்த கல்வி நிறுவனங்கள்ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி, காக்கிநாடா
பணிமுன்னாள் நிர்வாக இயக்குனர், தில்லி மெட்ரோ (DMRC) மற்றும் அரசியல்வாதி
அறியப்படுவதுகொங்கண் இரயில்வே, தில்லி மெட்ரோ மற்றும் ரயில் போக்குவரத்து சம்பந்தமான திட்டங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
விருதுகள்பத்மவிபூஷன், பத்மஸ்ரீ , செவாலியே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது[1] Several honorary doctorates.

ஏலாட்டுவளப்பில் சிறீதரன் (Elattuvalapil Sreedharan) (பிறப்பு: சூன் 12, 1932) தில்லி மெட்ரோவின் நிர்வாக இயக்குனராக 1995–2012 ஆண்டு காலகட்டத்தில் பணியாற்றியவர். 2003ஆம் ஆண்டு டைம் இதழால் ஆசியாவின் நாயகர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டவர்.

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் இவர் பிறந்தார். பொறியியல் படித்த இவர் சிறிது காலம் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் இந்திய இரயில்வேயிலும் பணியாற்றினார்.

1964-இல் ஏற்பட்ட ஆழிப் பேரலைகளால் ராமேசுவரத்தை இணைத்த பாம்பன் பாலம் பழுதடைந்தது. இப்பாலமானது சிறீதரனுடைய மேலதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இதனை சீரமைப்பதற்கு சீறீதரனுடைய மேலதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. அவர் சிறீதரனுக்கு மூன்று மாத கால அவகாசம் கொடுத்திருந்தார். எனினும் சிறீதரன் இப்பாலத்தினை 46 நாட்களில் சீரமைத்தார். இவருடைய இச்சாதனைக்காக இவருக்கு ரயில்வே அமைச்சரின் விருது கொடுக்கப்பட்டது. மேலும் இந்தியாவின் முதல் விரைவுப் போக்குவரத்தான கொல்கத்தா மெட்ரோவின் திட்டமிடல், வடிவமைப்பிலும் பங்குபெற்றுள்ளார்.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் 1990-இல் கொங்கண் இரயில்வே அமைக்கப்படும்போது அதன் தலைமை நிர்வாக இயக்குனராக பணிக்கப்பட்டார். ஏழு ஆண்டு காலத்தில் பண, கால நீட்டிப்பு இன்றி குறித்த காலத்துக்குள் திட்டம் முடிக்கப்பட்டது, பெரும் சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் 2005-இல் தில்லி மெட்ரோவின் நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்று இத்திட்டம் குறித்த காலத்திற்குள் செயல்பாட்டுக்கு வரக் காரணமாக இருந்தார்.

தான் பொறுப்பேற்று நடத்தும் திட்டங்களை அரசியல் அதிகாரத்திலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும் விலக்கி சரியான முறையில் நடத்தும் திறமைக்குப் பெயர் பெற்றவர்

மேடாஸ் மீதான ஈ. சிறீதரனது குற்றச்சாட்டு[தொகு]

செப்டம்பர் 2008இல் ஆந்திரப் பிரதேச அரசின் ’ஹைதராபாத் மெட்ரோ ரெயில் திட்ட’ ஒப்பந்தப்புள்ளியில் ஆச்சர்யத்திற்குரிய விதத்தில் "மேடாஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் மற்றும் மேடாஸ் புராபர்டீஸ் நிறுவனத்தின் குழு".அரசிடமிருந்து எதையும் எதிர்பாராமல் திட்டத்தை நிறைவேற்றி 35 வருடங்களில் 30,300 கோடி ரூபாயை அரசுக்குத் தருவதாகக் கூறியது. திட்டமும் மேடாஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[2]

டில்லி மெட்ரோவால் வழிநடத்தப்பட்ட இத்திட்டத்தில் மத்திய மாநில அரசுகளால் ஒத்துக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் முதல் மற்றும் முக்கியமான மாற்றுக் கருத்து அப்போதைய தில்லி மெட்ரோவின் நிர்வாக இயக்குனரான ஈ. சிறீதரனிடமிருந்துதான் வந்தது.[2]

மேடாஸ் நிறுவனத்திடம் திட்டத்திற்காக அரசால் ஒதுக்கப்பட்ட 296 ஏக்கர் நிலத்துடன் இணைந்துள்ள அரசியல் முறைகேடுகளை இவர் வெளிப்படுத்தினார். மேடாஸ் தனது உண்மையான நோக்கத்தை மறைத்துள்ளது என்று குற்றம் சாட்டினார். மெட்ரோ ரெயில் திட்டத்தைக் காட்டி நிலத்தின் விலையேற்றி, நான்கிலிருந்து ஐந்து மடங்கு இலாபம் பார்க்கும் மறைமுகத் திட்டத்தை இடித்துரைத்தார். அதன் காரணமாக மிகவும் தாமதமாகக் கருத்து கூறுகின்றார் என்று ஆந்திர அரசால் குற்றம் சாட்டப்பட்டு மன்னிப்பு கேட்க கோரப்பட்டார். இப்பிரச்சனையில் இவரது கருத்து காரணமாக டில்லியிலும் இவர் அழுத்தத்திற்குள்ளானார்.[2]

எனினும் மீண்டும் தனது குற்றச்சாட்டுக்களை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் எழுதி எழுப்பினார்.[2]

(சத்யம் நிறுவனத்தின் ராமலிங்க ராஜூவின் உறவினர்களால் நிறுவப்பட்ட மேடாஸ், பின்னர் சத்யத்துடன் ராமலிங்க ராஜூவால் இணைக்கப்பட்டு அதைத் தொடர்ந்து பல விசாரணைகளுக்கு 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆளானது)

அரசியல்[தொகு]

இவர் 18 பிப்ரவரி 2021 அன்று, கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைத்தார். மேலும் இவர் கட்சி விரும்பினால் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் என்று கூறினார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Metro man' Sreedharan gets Lifetime achievement Governance Award 2013'". http://www.deccanchronicle.com/131130/news-current-affairs/article/sreedharan-gets-lifetime-achievement-governance-award-2013. 
  2. 2.0 2.1 2.2 2.3 http://books.google.co.in/books?id=oQOF7tkWXjIC&printsec=frontcover&source=gbs_vpt_reviews#v=onepage&q=Sreedharan&f=false
  3. "E Sreedharan: Metro man E Sreedharan to join BJP". The Times of India (in ஆங்கிலம்). February 18, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  4. Rai, Arpan (2021-02-18). "'Metro man' E Sreedharan set to join Bharatiya Janata Party". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._சிறீதரன்&oldid=3789670" இலிருந்து மீள்விக்கப்பட்டது