இறங்குகுடிக் குன்றநாடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இறங்குகுடிக் குன்றநாடன் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். இவனது பாடல் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது அகநானூறு 215 எண் கொண்ட பாடலாக உள்ளது.

அரசன் புலவன்[தொகு]

குன்றநாடனார் என்று இவரைக் குறிப்பிடாமல் குன்றநாடன் என்று மதிப்பு இடைச்சொல்லேற்றம் இல்லாமல் குறிப்பிடப்படுவதால் இவன் இறங்குகுடிக்குன்றம் என்னும் ஊரின் சிற்றரசன் என்பதை உணரலாம்.

பாடல் தரும் செய்தி[தொகு]

இது பாலைத் திணைப் பாடல். அவன் பிரிந்துவர விரும்பியதை அவளிடல் தோழி சொல்கிறாள். அவள் பிரிவை விரும்பவில்லை. விரும்பவில்லை என்பதைத் தோழி அவனிடம் சொல்லும் பாடல் இது.

அவன் பொருள் தேடச் செல்லும் வழியை அவள் நினைக்கிறாள். வளைந்திருக்கும் பெரிய முகடுகளைக் கொண்ட குன்றத்தின் மேலேறிச் செல்லவேண்டும். அங்குப் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் இருப்பர். அவனுக்குத் துணை அவன் கையிலிருக்கும் வேலும், அவன் ஆற்றலும் மட்டுந்தான். அங்குப் பதுங்கியிருந்து வேட்டையாடி வாழ்வோர் வேட்டை கிடைக்கவில்லை என்றால் அந்த வழியில் செல்வோரின் பொருளுக்காக அவர்களை அம்பெய்தி வீழ்த்துவர். அவர்களின் உடலை எருவைக்கழுகுகள் காலால் மிதித்துக்கொண்டு கிழித்து உண்ணும். தன் பேடை எருவைக்கும் ஊட்டும். இவர்கள் இறந்ததை எண்ணி வெறுமனே கவலைப்பட்டுக்கொண்டு உயிர்வாழும் வன்நெஞ்சக்காரருக்கே இத்தகு வழியில் சென்றுவா என்று சொல்லமுடியும். - இவ்வாறு அவள் சொன்னதாகத் தோழி சொல்கிறாள். விளைவு அவன் பிரிந்து செல்வதை நிறுத்திவிடுகிறான்.

மேற்கோள்கள்[தொகு]