இராஜராஜ சோழன் III
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கி.பி 1216ல் ஜூன் 27க்கும் ஜூலை 10க்கும் இடையே மூன்றாம் இராஜராஜன் பட்டத்துக்கு வந்தான் என்று வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தச் செய்தி அவன் சொந்த உரிமையில் அரியணை ஏறியதைக் குறிப்பிடவில்லை. அடுத்து பட்டத்திற்கு வரவேண்டியவன் என்று முந்திய அரசனால் ஏற்று, அறிவிக்கப்பட்ட நாளே என்று கொள்ளலாம். சுந்தர பாண்டியன், சோழ நாட்டைப் படையெடுத்து, சோழர்களுக்காக வீர நரசிம்மன் தலையிட்டது ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இவன் அரசனாகும் உரிமையுடையவன் என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கலாம்.
[தொகு] ஆட்சி
மூன்றாம் இராஜராஜனின் ஆட்சி துன்பங்களுடனும் துயரங்களுடனும் தொடங்கியது. தொடக்கத்தில் ஏற்பட்ட இன்னல்கள் பிற்காலத்தில் நேரவிருக்கும் பெருங்கேடிற்கு முன்னறிவிப்பாக இருந்தன. சோழரைக் காப்பாற்ற மீண்டும் ஹொய்சாளர் உதவிக்கு வர வேண்டியதாயிற்று.
[தொகு] உறவுமுறை
குலோத்துங்கனுக்கும் இராஜராஜனுக்கும் என்ன உறவு என்பதில் வரலாற்றுக் குழப்பங்கள் இருக்கின்றன. சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் வனவாசம் முடிந்து திரும்பியதும் வெற்றி பெற்ற பாண்டியனிடம் சென்று மீண்டும் தன் ஆட்சியுரிமையையும் நாட்டையும் பெறுவதற்கு அனுப்பிவைத்த மகன் தான் மூன்றாம் ராஜராஜசோழனா என்பதிலும் குழப்பங்கள் இருக்கின்றன.
மூன்றாம் இராஜராஜனின் கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கனைப் பெரிய தேவர் என்று குறிப்பிடுகின்றன. மூன்றாம் இராஜராஜனுக்குப் பின்வந்த மூன்றாம் இராஜேந்திரனின் கல்வெட்டுகளும் அவ்வாறே தெரிவிக்கின்றன. ஆனால் இதை வைத்துக் கொண்டு மூன்றாம் இராஜராஜ சோழன் மூன்றாம் குலோத்துங்கனின் மகன் என்றோ அல்லது அண்ணன் மகன் என்றோ அல்லது மூன்றாம் இராஜேந்திரன் அவனுடைய சகோதரன் என்றோ முடிவிற்கு வரமுடியாது.
பெரிய தேவர் என்ற சொற்றொடருக்கு பட்டத்திற்கு உரிமை உடையவர் என்பது தவிர வேறு பொருள் ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.
மூன்றாம் இராஜராஜன் மூன்றாம் குலோத்துங்கனின் மகன் என்றும் மூன்றாம் இராஜேந்திரன் மூன்றாம் இராஜராஜனின் மகன் என்றும் நாம் கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை என்றாலும் இதை ஆதாரங்களுடன் நிலைநாட்ட முடியாது.

