இரண்டாம் சீன-சப்பானியப் போர்
இரண்டாம் சீன-சப்பானியப் போர் (Second Sino-Japanese War, சூலை 7, 1937 – செப்டம்பர் 9, 1945) என்பது சீனக் குடியரசுக்கும் சப்பானியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்ற போரைக் குறிக்கும். சூலை 1937ல், சப்பான், மார்கோ போலோ பாலம் சம்பவம் நடந்த பிறகு, சீனாவின் முந்தைய தலை நகரான பெய்ஜிங்கை கைப்பற்றியது. இந்த சம்பவம் சப்பான் முழுமையான சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வித்திட்டது. இந்த நேரத்தில் விரைவாக செயல்பட்ட சோவியத் ஒன்றியம், சீனாவுக்கு தளவாடங்கள் வழங்கி உதவி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் சீன - செருமனி ஒத்துழைப்பு (1911 - 1941) முடிவுக்கு வந்தது. சீனப் போர்ப்படை தளபதி சங் கை செக் ஷாங்காய் நகரத்தை பாதுகாக்க ஜெர்மனியால் பயிற்றுவிக்கப்பட்ட தனது சிறந்த படைபிரிவை பயன்படுத்தியும் மூன்று மாதங்களுக்கு பிறகு ஷாங்காய் நகரம் ஜப்பானியர்கள் வசம் வீழ்ந்தது. ஜப்பானிய படைகள் சீனப்படைகளை பின்தள்ளி முன்னேறி டிசம்பர் 1937ல் தலைநகர் நாஞ்சிங்கை கைப்பற்றின. இதன்பின் நடந்த நாஞ்சிங் படுகொலை சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சரணடைந்த சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான சீனப்பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர்.
ஜூன் 1938ல், சீன படைகள் ஜப்பானிய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தின. இதன் மூலம் சீனப்படையினருக்கு வுஹன் (Wuhan) நகரத்தில் தற்காப்பு முயற்சிகள் எடுக்க சிறிது நேரம் கிடைத்தது. ஆனாலும் வுஹன் நகரம் அக்டோபர் மாதத்தில் ஜப்பானிய படையினரிடம் வீழ்ந்தது. ஜப்பானியர்கள் எதிர்பார்த்தது போல் இந்த வெற்றிகளால் சீனர்களின் எதிர்ப்பை முறியடிக்க முடியவில்லை. சீன அரசாங்கம் தனது இருப்பிடத்தை நாட்டின் உட்பகுதிக்கு மாற்றி அங்கிருந்து போரை தொடர்ந்தது.