இம்மானுவேல் சேகரன்
| தியாகி இம்மானுவேல் சேகரன் தேவேந்திரர் | |
|---|---|
| பிறப்பு | இம்மானுவேல் சேகரன் அக்டோபர் 9, 1924 செல்லூர், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ் நாடு |
| இறப்பு | 11 செப்டம்பர் 1957 |
| இருப்பிடம் | : தமிழ் நாடு |
| தேசியம் | : |
| பணி | : இந்தியத் தரைப்படை |
| செயல்பட்ட ஆண்டுகள் | : 1945 |
| சொந்த ஊர் | : செல்லூர் கிராமம் |
| சமயம் | : கிறித்தவம், பள்ளர் |
| வாழ்க்கைத் துணை | : இ. அமிர்தம் கிரேஸ் |
| பிள்ளைகள் | : இ. மேரிவசந்த ராணி இ. பாப்பின் விஜய ராணி இ. சூரிய சுந்தரி பிரபா ராணி இ. மாணிக்கவள்ளி ஜான்சி ராணி |
இம்மானுவேல் சேகரன் (1924 அக்டோபர் 9 - செப்டம்பர் 11, 1957)[1] படுகொலை செய்யப்பட்ட ஒரு தமிழக தலித் அரசியல்வாதி. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் பள்ளர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.
பொருளடக்கம் |
வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம், ஞானசுந்தரி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார்.
இராணுவத்தில் பணி [தொகு]
சுவார்ட்ஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே 1943 ஆம் ஆண்டு அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், இந்தி, ரஷ்ய மொழி உட்பட ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்[2]மேலும் இவர் சமூக சேவைச் செய்யும் நோக்கில் அவில்தார் பதவியிலிருந்து விலகினார்.
குடும்ப வாழ்க்கை [தொகு]
1946 மே 17 ஆம் நாள் வீராம்பல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேரிவசந்த ராணி, பாப்பின் விஜய ராணி, சூரிய சுந்தரி பிரபா ராணி, மாணிக்கவள்ளி ஜான்சி ராணி ஆகிய நான்கு பெண் மக்கள் பிறந்தனர்.
ஒடுக்கப்பட்டோருக்காகப் போராட்டம் [தொகு]
- 1950-ல் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர் தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, இராணுவத்தில் இருந்து விலகினார். "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத் தொடங்கினார்.
- 1953 ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் "ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு" நடத்தினார். 1954 ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார். [3] [4]
காங்கிரசில் இணைவு [தொகு]
காமராசர் இவரைச் சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். அச்சமயம் மதுரை, இராமநாதபுர மாவட்டங்களில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பணியில் இம்மானுவேல் இணைந்து கொண்டார். காமராசர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் அவர்களோடு இம்மானுவேல் இணைந்து தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். திருநெல்வேலியைச் சார்ந்த வைகுண்டம் எம்.எல்.ஏவோடும் இப்பணிக்காக பல கிராமங்களுக்குச் சென்று வந்தார்.
வெங்கட்டான் குறிச்சி கொலை முயற்சி [தொகு]
செல்லூரிலிருந்து வெங்கட்டான் குறிச்சிக்கு குடிபெயர்ந்த போது இவரை கொலை செய்வதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
கொலை செய்யப்படுதல் [தொகு]
1957களில் நடந்த தேவேந்திர இன மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் தேவேந்திர இன மக்களின் சார்பில் கலந்து ஆறு பேரில் இமானுவேலும் ஒருவர். இதற்கு அடுத்த நாள் அவர் படுகொலை செய்யப்பட்டார். தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த அனைத்திந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தமிழ்நாடு கிளைத் தலைவர் முத்துராமலிங்கத் தேவரின் ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டார். 1959 ஜனவரியில் அவர் குற்றமற்றவர் என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.[5]
முதுகுளத்தூர் கலவரம் [தொகு]
இச்சம்பவத்தால் ராமனாதபுரம் பரமக்குடி முதுகுளத்தூர் பகுதிகளில் தேவேந்திரர் சமூகத்துக்கும் தேவர் சமூகத்திற்கும் இடையே கடும் கலவரமும் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன.
நினைவு [தொகு]
இம்மானுவேல் சேகரன் நினைவாக இந்திய அஞ்சல் துறை அக்டோபர் 9 2010 அன்று அஞ்சல் தலை வெளியிட்டு அன்னாரை கவுரவித்தது [6] [7]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ இந்திய அஞ்சல்துறை
- ↑ "தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு ரஷ்யன் மொழி உட்பட ஏழு மொழிகளைத் தெரியும்". தி இந்து. பார்த்த நாள் செப்டம்பர் 1 , 2011.
- ↑ "இம்மானுவேல் சேகரன் யார்?". ஒன் இந்தியா (செப்டம்பர் 12, 2011). பார்த்த நாள் மே 1, 2013.
- ↑ "திராவிடத்தை திராவகமாக்கும் சீமான்!". WordPress.com. பார்த்த நாள் மே 1, 2013.
- ↑ Bose, K.; Forward Bloc. Madras: 1988, Tamil Nadu Academy of Political Science. p. 88–110, 240
- ↑ http://www.stampsofindia.com/lists/stamps/fdc/2010/fdc2188.jpg
- ↑ "இம்மானுவேல் சேகரனார் அஞ்சல் தலை". இந்திய அரசு (2010). பார்த்த நாள் டிசம்பர் 17, 2012.
- தலித் கலை ஆதார மையம், மதுரை
- சமூக உரிமைப்போராளி இம்மானுவேல் தேவேந்திரர், தமிழவேள்
- இம்மானுவேல் சேகரன், வடிவேல் இராவணன்