இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டம்.

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 (தி கன்சியூமர் புரட்டக்சன் ஆக்ட், 1986) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். டிசம்பர் 1986, 1987[1] முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.

இச்சட்டம் 1991 மற்றும் 1993 [1] களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன. நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு டிசம்பர், 2002[1] இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் 15, 2003[1] புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.

இதன்படி வடிவமைக்கப்பட்ட விதிகள் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 1987 என அழைக்கப்படுகின்றன. இந்த விதிகள் மார்ச் 5, 2004[1] முதல் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

நுகர்வோரின் உரிமைகள்[தொகு]

கீழே காணப்படும் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இச்சட்டம் இயற்றப்பட்டது

  1. உயிருக்கும் உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்ககூடிய பொருட்களை சந்தைப்படுத்துவதில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை
  2. நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப்பாதுகாத்துக் கொள்வதற்காக, சந்தையில் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரனிலை மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.
  3. பலவகைப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை போட்டி விலைகளில் வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை
  4. நுகர்வோரின் குறைகளைக் கேட்பத்ற்கும் அவர்க்ளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதம் பெறும் உரிமை
  5. நேர்மையற்ற வர்த்தகச் செயல்முறைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வர்த்தகச் செயல்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை
  6. நுகர்வோருக்கான விழிப்புணர்வினைப் பெறும் உரிமை
  7. நுகர்வோரின் சச்சரவுகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.

முக்கிய கூறுகள்[தொகு]

  • இச்சட்டம் மைய அரசால்[1] விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைத் தவிர ஏனைய எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும்.
  • அனைத்துறையின் எதுவாயினும், தனியார் மற்றும் பொதுத் துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் அல்லது தனி நபர் இவை யாவரையும் கட்டுப் படுத்தும். இச்சட்டம் வகுத்துள்ளதின்படி இவர்கள் நட்டஈடு வழங்க அதே சமயத்தில் தடை செய்யவோ,தண்டணை [1] வழங்கவோ வழி செய்கின்றது.
  • நுகர்வோரை போற்றிப் பேணுகின்ற உரிமைகளாவன;-[1]
    • (1) உடலுக்கும், உடமைக்கும் தீங்கு விளைகின்ற வகையில் வணிக நோக்கில் விறகப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளிடமிருந்து நுகர்வோர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை.
    • (2) பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், எடை, வீரியம், கலப்படமற்ற, தரநிர்ணயம் மற்றும் விலை அறிந்து கொள்ளவும், நேர்மையற்ற வணிகத்தினரிடமிருந்து நுகர்வோர் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை.
    • (3) மலிவு அல்லது போட்டி விலைகளில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த நம்பகத்தன்மையை நுகரவோருக்கு உறுதிபடுத்துதல் உரிமை.


    • (4) மலிவான சலுகை விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களினால் இழுக்கப்பட்டு, அதன் பலனை வணிகத்தினர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டதை தெரிவிக்கும் உரிமை.
    • (5) நேர்மையற்றை வணிகத் தொழிலினால் அல்லது மனச்சாட்சியற்ற சுரண்டல்களினால் ஏற்பட்ட பாதிப்பினால் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை நாடுதல் உரிமை.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் செயற்பரப்பு எல்லை[தொகு]

  1. இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  2. பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும். இந்திய அரசு அறிவிப்பில் குறிப்பிட்ட சில பொருள்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  3. தனியார் துறை, பொதுத்துறை, கூட்டுறவுத்துறை போன்றவைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும்.

சட்டம் பொருந்தாத நிலைகள்[தொகு]

  1. வாங்கிய பொருளை மறு விற்பனை செய்தல் அல்லது இலாபம் ஈட்ட வேண்டும் என்கிற நோக்கத்துக்கு வாங்கப்பட்ட பொருள்.
  2. இலவசமாக பெற்ற பொருள் அல்லது இலவச சேவை

உதாரணம்;

  • அரசு மருத்துவமனைகளில் பெறும் இலவச மருத்துவ சேவை.
  • இலவச அனுமதியளிக்கும் திட்டங்களில் பெறும் சேவை குறைபாடுகளுக்கு இச்சட்டத்தின்படி வழக்கு தொடர முடியாது.

நுகர்வோர் தகராறு தீர்க்கும் முகமைகள்[தொகு]

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 பிரிவு 9ன் கீழ் இந்தியாவில் மூன்று நிலையிலான முகமைகள் செயல்படுகின்றன.

  1. மாவட்டக் குழு கீழ்நிலையில் செயல்படுகிறது. இது மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் என அழைக்கப்படுகிறது. இம்மன்றத்தில் 20 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மட்டும் இங்கு நடத்தப் பெறும்.
  2. மாநிலக் குழு இடைநிலையில் செயல்படுகிறது. இது மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் என அழைக்கப்படுகிறது. இங்கு 20 இலட்சத்திற்கு மேல் 100 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மட்டும் இங்கு நடத்தப் பெறும்.
  3. தேசியக் குழு உச்சநிலையில் செயல்படுகிறது. இது தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் என அழைக்கப்படுகிறது. இங்கு 100 இலட்சம் ரூபாய்க்கு அதிகமான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் இங்கு நடத்தப் பெறும்.
  • மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் மேலான முறையீடுகள் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மேலான மேல் முறையீடுகள் தேசீய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் செய்யப்பட வேண்டும்.
  • தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவுகளின் மேலான முறையீடுகள் இந்திய உச்சநீதி மன்றத்தில் செய்யப்பட வேண்டும்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்[தொகு]

மாவட்டக் குறைதீர் மன்றத்தை இந்திய அரசின் முன் ஒப்புதலுடன் ஒவ்வொரு மாநில அரசும் மாவட்ட அளவில் இம்மன்றத்தை அமைத்திட வேண்டும். இம்மன்றத்தின் தலைவர் பதவிக்கு மாவட்ட நீதிபதி தகுதியுடையவர் தலைவராகவும், இரண்டு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும். இருவரில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும். பெண் உறுப்பினர் சமூக சேவையில் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். மற்றொரு உறுப்பினர் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும். ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் இருப்பர். இம்மன்றத்தில் மாவட்ட எல்லையிலான வழக்குகள் மற்றும் 20 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் நடத்தப் பெறுகின்றன.

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்[தொகு]

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை இந்திய அரசின் முன் ஒப்புதலுடன் ஒவ்வொரு மாநில அரசும் மாநிலத் தலைநகரில் அமைத்திட வேண்டும். இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு மாநில அரசால் நியமிக்கப்பட்ட உயர்நீதி மன்றத்தின் நீதிபதி தலைவராகவும், இரண்டு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும். இருவரில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும். இரு உறுப்பினர்களும் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும். ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் இருப்பர். இந்த ஆணையத்தில் மாநில எல்லையிலான 20 இலட்சத்திற்கு மேல் 100 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மற்றும் மாவட்டக் குறைதீர் மன்றத்தின் ஆணையின் மேலான முறையீடுகள் நடத்தப் பெறுகின்றன.

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்===

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை இந்திய அரசு, புதுதில்லியில் அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு உச்சநீதி மன்றத்தின் நீதிபதி தலைவராகவும், நான்கு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் நான்கு பேரும் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும். ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் இருப்பர். இந்த ஆணையத்தில் 100 இலட்சம் ரூபாய்க்கு அதிகமான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் ஆணையின் மேலான முறையீடுகள் நடத்தப் பெறுகின்றன.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]