அகஸ்ட்டஸ்
| அகஸ்ட்டஸ் சீசர் | |
|---|---|
| ரோமப் பேரரசன் | |
| ஆட்சிக்காலம் | 16 ஜனவரி 27 BCE – ஆகஸ்ட் 19 கிபி 14 |
| முழுப்பெயர் | கையஸ் ஜூலியஸ் சீசர் ஒக்டாவியஸ் |
| பிறப்பு | செப்டெம்பர் 23, கிமு 63 |
| பிறப்பிடம் | ரோம், ரோமக் குடியரசு |
| இறப்பு | ஆகஸ்ட் 19 கிபி 14 (வயது 75) |
| இறந்த இடம் | நோலா, இத்தாலியா, ரோமப் பேரரசு |
| புதைக்கப்பட்டது | Mausoleum of Augustus, ரோம் |
| முன்னிருந்தவர் | ஜூலியஸ் சீசர் |
| பின்வந்தவர் | திபேரியஸ். முன்றாவது மனைவியின் முதல் கணவன் மூலமான மகன். அகஸ்ட்டசின் வளர்ப்பு மகன். |
| துணைவர் | 1) குளோடியா புல்ச்ரா ? – கிமு 40 2) ஸ்கிரிபோனியா கிமு 40 – கிமு 38 3) லிவியா டிருசிலா கிமு 38 – கிபி 14 |
| வாரிசுகள் | மூத்த ஜூலியா; கையஸ் சீசர் (வளர்ப்பு); லூசியஸ் சீசர் (வளர்ப்பு); திபேரியஸ் (வளர்ப்பு) |
| அரச குடும்பம் | ஜூலியோ-குளோடிய வம்சம் |
| தந்தை | கையஸ் ஒக்ட்டேவியஸ்; வளர்ப்புத் தந்தை: ஜூலியஸ் சீசர் |
அகஸ்ட்டஸ் (செப்டெம்பர் 23, கிமு 63 – ஆகஸ்ட் 19, கிபி 14) ரோமப் பேரரசை ஆண்டவர். கையஸ் ஒக்டேவியஸ் துரினஸ் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை, இவரது பெரிய தந்தையான ஜூலியஸ் சீசர் கிமு 44 ஆம் ஆண்டில் தத்து எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் இவர் கையஸ் ஜூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் எனப்பட்டார். ஒக்டேவியஸ் கிமு 27 ஆம் ஆண்டிலிருந்து கிபி 14 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை ரோமப் பேரரசை ஆண்டு வந்தார். கிமு 44 ஆம் ஆண்டில் ஜூலியஸ்சீசர் கொலை செய்யப்பட்ட பின்னர் கிமு 43ல் ஒக்டேவியஸ், மார்க் ஆன்டனி, மார்க்கஸ் ஏமிலஸ் லெப்பிடஸ் ஆகியோருடன் இணைந்து ஒரு அரசியல் முக்கூட்டணியை அமைத்துக் கொண்டு ஒரு இராணுவச் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தனர்.. இது வரலாற்றாளர்களால் இரண்டாவது முக்கூட்டணி (Second Triumvirate) என அழைக்கப்படுகின்றது. இம் முக்கூட்டணியின் ஒரு உறுப்பினராக அகஸ்ட்டஸ், ரோமையும் அதன் மாகாணங்கள் பலவற்றையும் ஆண்டு வந்தார். காலப்போக்கில், அதிகாரப் போட்டி காரணமாக இம் முக்கூட்டணி சிதைந்து போயிற்று. லெப்பிடஸ் நாடுகடத்தப்பட்டார். கிமு 31 ஆம் ஆண்டில் ஒக்டேவியனுடன் ஆக்டியப் போரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து மார்க் ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். முக்கூட்டணியி சிதைவுக்குப் பின்னர், ரோமக் குடியரசு. ரோமக் குடியரசைப் பெயரளவில் மீளமைத்த அகஸ்டஸ், அரசாங்க அதிகாரத்தை செனட் அவைக்குக் கொடுத்திருந்தாலும், நடைமுறையில் தானே அதிகாரம் முழுவதையும் வைத்திருந்தார். பல ஆண்டுகளாக இடம்பெற்ற படிப்படியான நடவடிக்கைகள் மூலம் குடியரசாக இருந்த ரோம், ஒரு தனி மனிதனின் ஆளுகைக்கு உட்பட்டுப் பின்னர் ரோமப் பேரரசு ஆனது.
ரோமக் குடியரசில், ரோமச் சர்வாதிகாரி என்ற பதவி இருந்ததுபோல, ரோமப் பேரரசன் என்னும் பதவி சட்ட அடிப்படையில் இருக்கவில்லை. ரோமச் சர்வாதிகாரி என்னும் பதவியை முன்னர் ஜூலியஸ் சீசரும், சுல்லாவும் வகித்திருந்தனர். மக்கள் இப்பதவியை ஏற்கும்படி கூறியபோதும் அகஸ்ட்டஸ் அதனை ஏற்கவில்லை. வாழ்க்கைக் காலம் முழுவதற்குமாக சில அதிகாரங்கள் செனெட்டினால் சட்டமுறையில் அகஸ்ட்டசுக்கு வழங்கப்பட்டிருந்தன. கிமு 23 வரை அகஸ்டஸ் கொன்சல் பதவியை வகித்து வந்தார். அகஸ்ட்டசின் அதிகார வளர்ச்சிக்குப் பின்னணியில், நிதிநிலை வளர்ச்சி, பிற நாடுகளைப் கைப்பற்றியதன் மூலம் கிடைத்த வளங்கள், படைவீரர்களின் விசுவாசம், மக்களிடையே அவருக்கு இருந்த மதிப்பு போன்ற பல காரணங்கள் இருந்தன.
தமிழகம்[தொகு]
இவர் சங்ககால தமிழகத்தோடு வைத்திருந்த வானிப தொடர்பினை தமிழகத்தில் கிடைத்த இவரது நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன. சங்க இலக்கியத்திலும் யவனர் என்ற சொல் இவர்களையும் குறிப்பதாக உள்ளது.