அஷ்டவக்ர கீதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அஷ்டாவக்ர கீதை இலிருந்து வழிமாற்றப்பட்டது)


அஷ்டாவக்ர கீதை (Ashtavakra Gita) வேதாந்த விசயத்தில் சந்தேகங்கள் தீர்ந்து அனுபவத்தில் நிலை பெற முயலும் சாதகர்கள் (சாதகர்கள் என்பவர்கள் யோகம், தியானம், ஞானம் ஆகியவற்றில் பயிற்சி பெறுபவர்கள்) பற்றற்று, பணியற்று, மாசற்று அத்வைத உயர் நிலையிலுள்ள ஞானியாவதற்கு பெரிதும் துணைபுரியும் கேள்வி-பதில் வடிவில் அமைந்தது, சமக்கிருதத்தில் எழுதப்பட்டது. இருபது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 1,3,5,8,10,11,15,16,17,18 ஆகிய அத்தியாயம் அஷ்டாவக்ரருடைய உபதேசமும், 2,4,6,7,12,13,14,19,20 ஆகிய அத்தியாயம் ஜனகனின் கேள்விகளாகும்.[1]

கீதைகள்[தொகு]

கீதைகள் பல அறியப்பட்டாலும், இராமாயண காலத்திற்கு முந்தியது ரிபு கீதை அடுத்து இராமாயண காலத்தில் அஷ்டாவக்ர கீதை, மகாபாரதத்தில் பகவத் கீதை மற்றும் பாகவத புராணத்தில் உத்தவ கீதை இன்று வரை பேசப்பட்டும், மேற்கோள்களாக காட்டப்பட்டும் வருகிறது.

வரலாறு[தொகு]

ஜனகன் தனது அரசவையின் தலைமை வித்வான், வேதாந்த நூல் ஒன்றில் சொல்லப்பட்ட தகவல் குறித்து உரையாடிக் கொண்டிருந்த போது, அந்த நூலில் பிரம்ம ஞானம் பெறுவது குதிரை ஏறும் ஒரு மனிதன், குதிரையின் சேணத்தில், ஒரு காலை வைத்து மற்றொரு காலை எடுத்து வைக்கும் நேரத்திற்குள் பிரம்ம ஞானம் பெறலாம் என்றிருந்தது. ஜனகன் உரையாடலை நிறுத்தி "இந்த வாக்கியத்தின் உண்மையை இறுதி செய்யும் பொருட்டு ஒரு குதிரையைக் கொண்டுவரச் சொல்லவா?" எனக் கேட்டான். அதற்கு தலைமை வித்வான், "ஞான அனுபவத்தை நிரூபிப்பது என்னால் இயலாது" என்று பின்வாங்கினார். "இந்த வாக்கியத்தில் உள்ளதை நிரூபிப்பது என்னால் இயலவில்லை என்பதால், பொய்யென்று சொல்ல முடியாது" என்று கூறிய வித்வான்களை சிறையில் அடைத்தார் அரசன்.

அரசனின் சந்தேகத்தை நீக்கும் பொருட்டு, உடல் எட்டு கோணலாக இருந்த அஷ்டாவக்கிரன் எனும் இளைய முனிவரை, மக்கள் ஜனகனின் அரச சபைக்குக் கூட்டிச்சென்றனர். அரசன், அஷ்டாவக்ரரை நோக்கி "முனிவரே குதிரை கொண்டு வரச் சொல்லவா?" எனக் கேட்டார். அஷ்டாவகரர் அரசனிடம் "அரசே! அவசரப்பட வேண்டாம். தாங்கள் கேட்ட சந்தேகத்தை போக்க தனி இடத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்க" என்றார்.

அரசன் கட்டளைப்படி அஷ்டாவக்ரர் பல்லக்கிலும் அரசன் படை பரிவாரங்களுடனும் அஷ்டாவக்ரரை தொடர்ந்து காட்டிற்கு சென்றனர். காடு நெருங்கியதும் அஷ்டாவக்ரர் அரசனிடம் "அரசே உங்கள் படை பரிவாரங்கள் திரும்பிப் போகட்டும். நாம் இருவர் மட்டும் தனித்து இருப்பது நல்லது" என்று கூறினார். அரசனும் தனது படை பரிவாரங்களை திருப்பி அனுப்பியவுடன், குதிரை மீது இருந்த அரசன் "முனிவரே! நான் கீழே இறங்க உதவுங்கள்" என வேண்டினான். அஷ்டாவக்ரர் அரசனிடம் "அரசே! தாங்கள் கூறும் நூலில், 'ஞானம் குருவினால் சீடனுக்கு அருளப்படுவது' என உள்ளதே! அந்த நிலையில் நாம் இருப்பது உண்மைதானா?" எனக் கேட்டார். அரசனும் அஷ்டாவக்ரரை வணங்கி "நான் தங்களுக்கு சீடனானேன். அருள் புரிக" என்றான். அஷ்டாவக்ரர் அரசனிடம் "ஜனகா! உண்மையான சீடன் தன்னையும், தன்னுடையதையும் குருவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்" எனறார். அரசனும் "அவ்வாறே அர்ப்பணம் செய்கிறேன்" என்றான். அஷ்டாவக்ரர் அரசனிடம் "அவ்வாறே" எனக்கூறி திடீரென்று மறைந்து போனார். அரசனும் அந்த இடத்திலேயே சிலையைப் போல ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டான். பொழுது சாய்ந்து நீண்ட நேரமாகியும் மன்னன் திரும்பாததால், அமைச்சர் மற்றும் ஏனையோரும் மன்னனைத் தேடி காட்டிற்கு வந்தனர். மன்னன் சிலையென நிற்பதையும், அஷ்டாவக்ரர் அங்கு இல்லாததும் கண்டு அதிர்ச்சியுற்றனர். மன்னன், இவர்கள் அனைவரும் அங்கு இருப்பதையே உணராமல் மயக்க நிலையிலேயே இருந்தான். அமைச்சரும் மற்றவர்களும் அரசனை ஒரு பல்லக்கில் படுக்க வைத்து அரண்மனைக்கு கொண்டு சென்றனர். மறுநாள் காலை வரை அரசனிடம் எந்த மாற்றமும் இல்லாதது கண்டு அஷ்டாவக்ரரை கண்டுபிடித்து வர படைகளை அனுப்பி வைத்தனர். மாலை நேரத்தில் சில படைவீரர்கள் அஷ்டாவக்ரரை கொண்டுவந்தனர், முதல் மந்திரிக்கு மிகுந்த கோபம் இருந்தாலும், அரசனின் நலனைக் கருதி அரசனை பழைய நிலைக்கு கொண்டுவரக் கேட்டுக் கொண்டார். அரசனின் இந்த நிலைக்கு அஷ்டாவக்ரரே காரணமென குற்றம் சுமத்தினர். அதற்கு அஷ்டாவக்ரர், "அரசனிடமே இதை கேட்டுவிடலாம்" என்று கூறி "ஜனகா "என அழைத்தார். அரசனும் "சுவாமி" என வணங்கினான். அஷ்டாவக்ரர் அரசனிடம் "ஜனகா நான் உன்னை மிகவும் பரிதாபகரமான நிலைக்கு கொண்டு வந்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்" என்றார். அரசன் கோபமுற்று "யார் அப்படிச் சொன்னது?" என கேட்டான். மந்திரிகளும் மற்றவரும் பயந்து மன்னரை நல்ல நிலைக்குக் கொண்டுவர முனிவரை வேண்டினர். அஷ்டாவக்ரர் அரசனிடம் "ஜனகா! நீ ஏன் இவ்வாறு இருக்கிறாய்? உலக நடைமுறைக்கு மாறாக இருப்பதேன்? எல்லோரையும் போல் இருப்பது தானே?" என்றார். "முனிவரே நான் உமது சீடன். உமது ஆணைப்படியே நடப்பேன்" என்றான். "உனக்கு ஞானத்தை போதிக்கவே உன்னை இவ்வாறு சோதித்தேன். உடை களைந்து உணவு உண்டு வா. பின்னர் நாம் பேசலாம்" என்று அஷ்டாவக்ரர் அரசனிடம் கூறினார். அதன் பிறகு அஷ்டாவக்ரர் அரசனிடம் உபதேசித்த பிரம்ம ஞானமும் ஜனகர், அஷ்டாவகரரிடம் கேட்ட கேள்விகளுமே அஷ்டாவக்ர கீதை ஆகும்.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ashtavakra-Gita
  2. "Story-of-Ashtavakra-and-Janaka". Archived from the original on 2016-06-02. பார்க்கப்பட்ட நாள் 2016-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்டவக்ர_கீதை&oldid=3681917" இலிருந்து மீள்விக்கப்பட்டது