அழ. வள்ளியப்பா
| அழ. வள்ளியப்பா | |
|---|---|
![]() |
|
| பிறப்பு | வள்ளியப்பா நவம்பர் 7, 1922 இராயவரம், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
| இறப்பு | மார்ச்சு 16 1989 (அகவை 66) சென்னை |
| தொழில் | கவிஞர், பத்திரிகை ஆசிரியர், குழந்தை எழுத்தாளர், வங்கிப் பணியாளர் |
| நாடு | இந்தியர் |
| இனம் | தமிழர் |
| நாட்டுரிமை | இந்தியர் |
| குறிப்பிடத்தக்க விருது(கள்) |
"தமிழ்ப் பேரவைச் செம்மல்" விருது |
| துணைவர்(கள்) | வள்ளியம்மை |
| பிள்ளைகள் | 5 |
அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.
பொருளடக்கம் |
பிறப்பு [தொகு]
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். இராயவரம் காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீசுவரசுவாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
எழுத்துப் பணி தொடக்கம் [தொகு]
தொடர்ந்து படிக்க முடியாததால் 1940 ஆம் ஆண்டில் வாழ்வாதாரம் தேடி வை. கோவிந்தனின் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி.ஜ.ர.வின் ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழிலேயே எழுத ஆரம்பித்தார். "ஆளுக்குப் பாதி" என்னும் தம் முதல் கதையை எழுதினார்.
சக்தியில் பணியாற்றிய போது வள்ளியம்மை என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர்.
1941 -ல் சக்தியில் இருந்து விலகி இந்தியன் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியில் இருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர் 1982 -ல் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். ஓய்வுக்குப் பின்பும் எழுதிக் கொண்டுதான் இருந்தார்.
செய்தித்தாள் ஆசிரியர் [தொகு]
வங்கிப் பணியில் இருக்கும்போதே பாலர் மலர், டமாரம், சங்கு ஆகிய செய்தித் தாள்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஓய்வு பெற்ற பின் 1983 முதல் 1987 வரை, கல்கி வெளியீடான கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார்.
குழந்தை எழுத்தாளர் சங்கம் [தொகு]
குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார்.
நூல்கள் [தொகு]
வள்ளியப்பாவின் 23 பாடல்கள் கொண்ட முதல் கவிதைத் தொகுதி "மலரும் உள்ளம்" 1944 ஆம் ஆண்டு வெளிவந்தது. 1954 இல் 135 பாடல்கள் கொண்ட தொகுதியும், 1961 இல் ஒரு தொகுதியும் வெளியிட்டார். "சிரிக்கும் பூக்கள்" என்ற தொகுதியை வெளியிட்ட பிறகுதான், "குழந்தைக் கவிஞர்" என்ற பெயரிட்டு அனைவரும் அழைக்கத் தொடங்கினர்.
நம் நதிகள் என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை, தேசீய புத்தக டிரஸ்ட் பதினான்கு இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது.
அழ. வள்ளியப்பாவின் நூல்களுள் சில:
- மலரும் உள்ளம் - 1 (பாடல் தொகுதி)
- பாப்பாவுக்குப் பாட்டு (பாடல் தொகுதி)
- சின்னஞ்சிறு பாடல்கள் (பாடல் தொகுதி)
- சுதந்திரம் பிறந்த கதை
- ஈசாப் கதைப் பாடல்கள் (பாடல் தொகுதி)
- ரோஜாச் செடி
- உமாவின் பூனைக் குட்டி
- அம்மாவும் அத்தையும்
- மணிக்குமணி
- மலரும் உள்ளம் - 2 (பாடல் தொகுதி)
- கதை சொன்னவர் கதை
- மூன்று பரிசுகள்
- எங்கள் கதையைக் கேளுங்கள்
- நான்கு நண்பர்கள்
- பர்மாரமணி
- எங்கள் பாட்டி
- மிருகங்களுடன் மூன்று மணி
- நல்ல நண்பர்கள்
- பாட்டிலே காந்தி கதை (பாடல் தொகுதி)
- குதிரைச் சவாரி
- நேரு தந்த பொம்மை
- நீலாமாலா
- பாடிப் பணிவோம் (பாடல் தொகுதி)
- வாழ்க்கை விநோதம்
- சின்னஞ்சிறு வயதில்
- பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்
அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.
சொற்பொழிவுகள் [தொகு]
- 1979 -ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்கி அறக்கட்டளை நிகழ்வில் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
- 1981 -ல் 5வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
பாராட்டும் விருதும் [தொகு]
- குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்று சில அமைப்புகள் பாராட்டி போற்றியுள்ளனர்.
- 1982 -ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினால் "தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்று விருதளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
வெளி இணைப்புகள் [தொகு]
- குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, கலைமாமணி விக்கிரமன், தினமணி, நவம்பர் 7, 2010
