அலையாத்திக் காடு
அலையாத்திக் காடு (அல்லது சதுப்புநிலக் காடு, mangrove) என்பது கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர் நீரில் வளரும் மரங்களும் புதர்ச்செடிகளும் உள்ள காடு. இக்காட்டிலுள்ள மரங்கள் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால் இக்காடுகள் அலையாத்திக் காடுகள் எனப்படுகின்றன. நிலமும் கடலும் சேரும் பகுதிகள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும் சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்திக் காடுகள் எனப்படுபவை இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இக்காடுகள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
பொருளடக்கம் |
[தொகு] வேறு பெயர்கள்
ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள் எனப்படுகின்றன. மலாய், எசுப்பானியம், போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறுமரங்கள் எனப்பொருள்படும் மாங்கு என்ற சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது.[1]
இக்காடுகளுக்கு வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு.
முல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கமாக சதுப்புநில வனங்கள் திகழ்கின்றன. கண்டல் மரங்கள் இருக்கும் சதுப்பு நிலப்பகுதியை கண்டல் காடுகள் எனவும் சதுப்பளக் காடுகள் எனவும் கூறலாம்.[1]
[தொகு] இந்தியாவில் அலையாத்திக் காடுகள்
கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும். கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் - இவை தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.
மேலும் குசராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளிலும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன.
[தொகு] இலங்கையில் அலையாத்திக் காடுகள்
இலங்கையின் கரையோரப் பகுதியில் கிட்டத்தட்ட 6000 - 7000 ஹெக்டயர் பரப்பு அலையாத்திக் காடுகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகின்றது. இவற்றில் மிகப் பெரிய அலையாத்திக் காடு, புத்தளத்தில் உள்ள குடாப்பகுதியைச் சார்ந்து அமைந்துள்ளது. இது 3385 ஹெக்டயர் பரப்பை உள்ளடக்கியுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, மாவட்டங்களிலும் இவ்வகையான அலையாத்திக் காடுகள் பெரிய அளவில் காணப்படுகின்றன. காலி மாவட்டம் பெந்தோட்ட பகுதியிலும் அலையாத்திக் காடு உள்ளது. இலங்கையின் தென்மாகாணத்தில் உள்ள, இந்தியப் பெருங்கடல் கரையோரமாக அமைந்துள்ள பலபிட்டிய என்னும் இடத்தில், மதுகங்கா எனப்படும் ஆறு கடலில் கலக்கும் பகுதியில் இவ்வகையான அலையாத்திக் காடுகள் காணப்படுகின்றன[2]
[தொகு] படங்களின் தொகுப்பு
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 கிராம உலகம், அனைந்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு, 2002, கட்டுரை: சதுப்பளப் பகுதியில் கிராமப்புற மக்களின் மேம்பாடு, முனை. சிசிலாயா பாண்டியன், இணைப் பேராசிரியர், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர், பக்கம் 162
- ↑ Information Brief on Mangroves in Sri Lanka