அனைத்துலக இயற்கை இழைகள் ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2009 ஆம் ஆண்டை அனைத்துலக இயற்கை இழைகள் ஆண்டு என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது[1]. இதற்கான தீர்மானத்தை 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் தேதி கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. இதற்கான முதல் முன்மொழிவு 2004 ஆம் ஆண்டில், வல்லிழைகள் தொடர்பான அரசுகள்சார்ந்த குழுவும், சணல் தொடர்பான அரசுகள்சார் குழுவும் இணைந்து நடத்திய கூட்டுக் கூட்டம் ஒன்றில் உணவு வேளாண்மை அமைப்பினால் முன்வைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டின் உணவு வேளாண்மை அமைப்பின் மாநாடு இதனை ஏற்றுக்கொண்டது[2].

பின்னணி[தொகு]

இயற்கை இழைகள், உலக மக்களின் ஆடைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகிப்பதுடன், இவற்றுக்கு மரபு வழியானதும், புதுத் தொழில்துறை சார்ந்தவையுமான பல பயன்பாடுகள் உள்ளன. இயற்கை இழைகளில் பெரும்பகுதியின் உற்பத்தி, வளரும் நாடுகளில் வாழும் சிறு விவசாயிகளின் பண வருவாய்க்கான மூலமாக விளங்குகிறது. இதனால், வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பதில், செயற்கை இழைகளின் விற்பனையாலும், ஏற்றுமதியாலும் கிடைக்கும் வருமானம் பெரும் பங்கு வகிக்கிறது எனலாம். அத்துடன், இயற்கை இழைகளின் உற்பத்தியும், பயன்பாடும் சூழலியல் தொடர்பான பயன்களையும் அளிக்கிறது. இத்தகைய இயற்கை இழைகளின் பொருளாதார, சூழலியல் பண்புகள் தொடர்பில் மக்களின் புரிந்துணர்வை வளர்ப்பது முக்கியமானது.

நோக்கங்கள்[தொகு]

அனைத்துலக இயற்கை இழைகள் ஆண்டின் அடிப்படை நோக்கங்கள்:

  • இயற்கை இழைகள் தொடர்பில் விழிப்புணர்வை உருவாக்குதலும், அதன் மூலம் அவற்றுக்கான தேவையைக் கூட்டுவதும்.
  • இயற்கை இழைகள் தொடர்பான தொழில்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உகந்த கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு அரசுகளை ஊக்குவித்தல்.
  • இயற்கை இழைகள் தொழில் துறையில் பயனுள்ளவையும், நீடித்தவையுமான பன்னாட்டுக் கூட்டு முயற்சிகளை உருவாக்குதல்.
  • இயற்கை இழைத் தொழில் துறையில் செயற்றிறனையும், பேண்தகைமையையும் கூட்டுதல்.

குறிப்புக்கள்[தொகு]

  1. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்மானம் A/RES/61/189
  2. "அனைத்துலக இயற்கை இழைகள் ஆண்டு தொடர்பான உணவு வேளாண்மை அமைப்பின் தீர்மானம்". Archived from the original on 2009-06-08. பார்க்கப்பட்ட நாள் 2011-06-03.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]