அனுராதபுரம் குண்டுவெடிப்பு, அக்டோபர் 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுராதபுரம் குண்டுவெடிப்பு என்பது 2008, அக்டோபர் 6 ஆம் நாள் இலங்கையின் வடமத்திய மாகாணத் தலைநகர் அனுடராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வைக் குறிக்கும். அனுராதபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் அக்டோபர் 6, திங்கட்கிழமை காலை 8:40 மணியளவில் இக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், சிறிலங்கா தரைப்படையின் முதன்மைத் தளபதியாகவும் இருந்தவருமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, அவரது மனைவி மற்றும் அனுராதபுர மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரான டொக்டர். ஜோன்புள்ளே, அவரது மனைவியும் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர். 80 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர்[1]. இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இதனை நடத்தியதாகவும் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்[2].

தாக்குதல் விவரம்[தொகு]

கொல்லப்பட்டோர் விவரம்[தொகு]

கொல்லப்பட்டவர்களில் ஜானக பெரேரா, அவரது மனைவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் சிரச ஊடகத்தின் அனுராதபுர செய்தியாளர் மொகமட் ரஷ்மியும் அடங்குவர்[3]. அனுராதபுர மாவட்ட ஐதேக அமைப்பாளர் டாக்டர் ராஜா ஜோன்புள்ளே மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். இவர் ஒரு தமிழர் ஆவார், இவரின் மருத்துவ நிலையம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆதரவாளர்களினால் 2008 ஆகத்தில் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது[4]. முன்னாள் வடமத்திய மாகாண சபை ஐதேக தலைவர் சுனில் திசாநாயக்க, மாகாண சபை உறுப்பினர் அனுர்தீன், முன்னாள் உதவி மேயர், மற்றும் பல கட்சிப்பிரமுகர்கள் கொல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அனுராதபுரம் மருத்துவமனைத் தலைவர் டொக்டர் சரத் வீரபண்டான தெரிவித்தார். ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார காயமடைந்தவர்களில் ஒருவர்[5].

வழக்கு[தொகு]

இத்தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆரம்பத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு, போதிய சாட்சியங்கள் இல்லாமையால் விடுவிக்கப்பட்டனர். பின்னர் மதவாச்சி மகா சியம்பலவேவா என்ற ஊரைச் சேர்ந்த அப்துல் உமர் ஹமீத் அத்தார் என்பவரும் செங்கலடியைச் சேர்ந்த சண்முகநாதன் சுதாகரன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். சுதாகரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கேணல் பதவி வகித்ததாகக் கூறப்படுகிறது. சுதாகரன் 2014 ஆகத்து 22 இல் வடமேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.[6] 2014 செப்டம்பர் 5 அன்று சுதாகரனுக்கு அனுராதபுரம் மேல்நீதிமன்ற நீதிபதி 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கினார்.[7] முதலாவது குற்றவாளி அத்தார் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், அவர் மீதான விசாரணைகள் தொடர்கின்றன.</ref name=islandsep6>

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tiger suicide attack kills 27 in Sri Lanka: officials(AFP))". Archived from the original on 2008-10-09. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  2. சிறிலங்கா தரைப்படையின் முன்னாள் தளபதி ஜானக பெரெரா உட்பட 25 பேர் குண்டுத்தாக்குதலில் பலி (புதினம்)
  3. "Major Gen Janaka Perera among 27 killed, 80 injured (Sunday Times)". Archived from the original on 2008-10-08. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  4. Janaka Perera assassinated, blast kills 28 in Anuradhapura (தமிழ்நெட்)
  5. "Major Gen Janaka Perera among 27 killed, 80 injured (Sunday Times)". Archived from the original on 2008-10-08. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
  6. ஜானக பெரேரா கொலை; புலி உறுப்பினருக்கு எதிராக செப். 5இல் தீர்ப்பு, தமிழ்மிரர், ஆகத்து 22, 2014
  7. Tiger sentenced to 20 yrs RI for killing Janaka, 30 others[தொடர்பிழந்த இணைப்பு], தி ஐலண்டு, செப்டம்பர் 6, 2014

வெளி இணைப்புகள்[தொகு]