அத்திமுகம் ஐராவத ஈசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐராவத ஈசுவரர் கோயில்
பெயர்
பெயர்:ஐராவத ஈசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:அத்திமுகம்
மாவட்டம்:கிருட்டிணகிரி மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஐராவத ஈசுவரர்
அழகேசர்
தாயார்:அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:அகத்திய நதி
சிறப்பு திருவிழாக்கள்:
  • சிவராத்திரி
  • மார்கழி திருவாதிரை
  • நவராத்திரி
  • ஆடி வெள்ளிக்கிழமை
  • ஆடி அம்மாவாசை
  • கார்த்திகை சோமாவாரம்
  • பங்குனி முதல் சோமாவாரம்
  • கடைசி சோமாவாரம்
  • சித்திரை வருடப் பிறப்பு
  • ஐப்பசி அன்னாபிசேகம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:வீர இராமநாதன்
வரலாறு
தொன்மை:13 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு

ஐராவத ஈசுவரர் கோயில் என்பது கிருட்டிணகிரி மாவட்டம் அத்திமுகம் என்ற ஊரில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

அமைவிடம்[தொகு]

அத்திமுகம் ஊர், கிருட்டிணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒசூருக்கு முன்னால் குறுக்கே செல்லும் பேரண்டப்பள்ளி-பாகலூர் சாலையில், பாகலூரை நோக்கி 15 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒசூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயில் தரைமட்டத்திலிருந்து 10 அடி பள்ளத்தில் அமைந்துள்ளது.

பெயர்க் காரணம்[தொகு]

இக்கோயிலில் இரட்டை சந்நிதிகளுடன் இரட்டைக் கருவறையாக முதன்மைக் கோயிலில் ஒரு கருவறை மற்றும் பின்பக்கமாக தனியாக இன்னொரு கருவறை என இரண்டு கருவறகள் அமைந்திருக்கின்றன. பின்பக்க கருவறையில் உள்ள லிங்கம் சுயம்பு லிங்கம் என்று கூறப்படுகிறது. இந்த லிங்கேசர் முகம் யானை முகம்போல் விளங்குகிறது. இதனால் இவ்விறைவன் ஐராவதீசுவரர் என அழைக்கப்படுகிறார். அத்தி முகத்தை உடைய லிங்கம் விளங்கும் ஊராதலால் இவ்வூருக்கு அத்திமுகம் என்ற பெயர் என்று அறியப்படுகிறது.[சான்று தேவை]

தல வரலாறு[தொகு]

திரேதா யுகத்தில் இந்திரனுக்கும் விருத்திரசுரனுடனான போரில் இந்திரனால் விருத்திராசுரன் கொல்லப்படுகின்றான். இதனால் இந்திரனையும் அவனது வாகனமான ஐராவதத்தையும் பிரம்மஹத்தி தோசம் சூழ்கிறது. இதனால் தன் ஆற்றலையும் பொலிவையும் இந்திரனும், ஐராவதமும் இழந்து இந்திர லோகம் செல்ல இயலாமல் தவிக்கின்றனர். இதனால் பல தலங்களுக்கு சென்று இந்த தோசம் நீங்க பூசிக்கின்றனர். அதன் பலனாக இவர்களுக்கு ஒரு அசரீரி கேட்கிறது, அகத்திய நதிக்கரை ஓரமாக இருக்கும் சுயம்பு லிங்கத்தை கண்டுபிடித்து 46 நாட்கள் பூசை செய்தால் அவர்களை பீடித்த பிரம்மஹத்தி தோசம் நீங்கும் என ஒலிக்கிறது. உடனே இந்திரனும், ஐராவதமும் அகத்திய நதியைத் தேடிச் செல்கின்றனர். அங்கு லிங்கத்தைத் தேடி அலைந்து, அங்கே நதிநோரத்தில் வில்வ மரங்கள் சூழ்ந்த நிலையில் உள்ள சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து அதைச் சுற்றி பீடம் அமைத்து பூசை செய்கின்றனர். மறுநாளில் இருந்து முறைப்படி 46 நாட்கள் பூசை செய்கின்றனர். இதனால் மனம் குளிர்ந்த ஈசன் அவர்களுக்கு காட்சி தந்து அவர்களை சூழ்ந்த தோசத்தை நீக்கி அவர்கள் இந்திர லோகம் செல்ல உதவுகிறார். இதன்பிறகு இந்திரன் இந்த தலத்தில் வந்து வேண்டுபவரகளின் தோசத்தை போக்கியருளுமாறு இறைவனை வேண்ட அவ்வாறே செயவதாக ஈசன் வரமளிக்கிறார். மேலும் ஐராவதத்தின் பக்தியை மெச்சி சுயம்பு லிங்கத்தில் ஐராவதத்தின் உருவத்தை பதித்தார் என்றது இதன் தல வரலாறு.[1]

கோயில் அமைப்பு[தொகு]

கிழக்கு நோக்கியவாறு இக்கோயில் அமைந்துள்ளது. படிக்கட்டுகளில் கீழிறங்கி வந்து கோயிலில் நுழைய வேண்டும். முன் பக்கம் உள்ள முதன்மைக் கோயிலில் உள்ள சிவன் அழகேசர் எனப்படுகிறார். இந்தக் கோயிலின் உள் பிரகாரத்தின் கோட்ட தெய்வங்களாக தென்முகக் கடவுள், விஷ்ணு, துர்கை ஆகிய தெய்வங்களும், கருவறையின் முன் பக்கமாக இந்திரன், சந்திரன், சூரியன் ஆகியவர்களின் சிலைகள் உள்ளன. இக்கோயிலைச் சுற்றி 16 கால் மண்டபமும் சுற்றுச்சுவரும் அமைந்துள்ளது. கோயிலின் வலப்பறுமாக அகிலாண்டேஸ்வரி தனி சந்தியோடு உள்ளார். அழகேசர் கோயிலில் பின்புறமாக விநாயகர் ஆலயம், வள்ளி தெய்வாணையுடன் கூடிய ஆறுமுகன் ஆலயம், ஐராவதீசுவரர் ஆலயம் ஆகியன தனித்தனியாக அமைந்துள்ளன. ஐராவதீசுவர கோயிலின் அர்த்த மண்டபத்தில் அப்பருக்கு சிலை உள்ளது இதன் கருவறையில் உள்ள லிங்கமே யானை முகத்தோடு அமைந்துள்ளது என்பர் இதே கருவறையில் காமாட்சி அம்மனும் அமைந்துள்ளார். கோயின் வலப்பக்கமாக பஞ்ச லிங்கங்களுக்கு தனித்தனியாக நீண்ட வரிசையில் சந்நிதிகள் நந்திகளுடன் உள்ளன. இக்கோயிலில் ஒய்சால அரசன் வீர இராமநாதன் ஆட்சிக்காலக் கல்வெட்டுகள் உள்ளன.[2]

குறிப்புகள்[தொகு]

  1. வி. மஞ்சுநாத், பிரியன் (2017). அத்திமுகம் மரபு நடைப் பயணம். ஒசூர்: அறம் பதிப்பகம். பக். 3-4. 
  2. தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட கருத்தரங்க மலர்-10.11.2009

வெளியிணைப்புகள்[தொகு]