அணுக்கரு ஆயுதங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அணு குண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரோசிமா அணுகுண்டு வெடிப்பின் புகைமண்டலம்

அணுகுண்டு (ஒலிப்பு) என்பது அணுக்கருப் பிளவு மூலமோ அல்லது கருப்பிளவு மற்றும் கரு இணைவு ஆகிய இரண்டின் மூலமோ அழிவுச் சக்தியை உருவாக்கக் கூடிய வெடிபொருளாகும். இவ்விரு தாக்கங்களும் சிறியளவு திணிவிலிருந்து பெரியளவிலான சக்தியை வெளியிடக்கூடியன. மிகச்சிறிய கட்டமைப்பில் ஏராளமான ஆற்றலை அடக்கி வைத்திருந்து அதைப் பெருவேகத்தில் வெளிப்படுத்துவதே அணுகுண்டின் தத்துவமாகும்.முதல் அணுக்கருப் பிளவுக் குண்டின் பரிசோதனையின்போது அண்ணளவாக 20,000 தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது. முதல் ஐதரசன் குண்டின் பரிசோதனையின் போது அண்ணளவாக 10 மில்லியன் தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது.

2,400 pounds (1,100 kg) திணிவுடைய ஒரு ஐதரசன் குண்டு, 1.2 மில்லியன் தொன் TNTயின் வெடிப்பின்போது வெளியிடப்படும் சக்தியிலும் அதிக சக்தியை வெளியிடக்கூடியது. ஆகவே, பாரம்பரியமான ஒரு குண்டிலுஞ் சிறிய அணுவாயுதம் வெடிப்பு, தீ மற்றும் கதிர்ப்பு ஆகியவற்றின் மூலமாக ஒரு நகரத்தையே அழிக்கக் கூடியது. அணுவாயுதங்கள் பேரழிவு ஆயுதங்களாகக் கருதப்படுவதோடு, இவற்றின் பயன்பாடும் கட்டுப்பாடுகளும் சர்வதேச உறவுகளில் பெரிய தாகத்தை ஏற்படுத்த வல்லன.

இரண்டு அணுவாயுதங்கள் மாத்திரமே இதுவரை போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையிரண்டும் ஐக்கிய அமெரிக்காவால் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பயன்படுத்தப்பட்டன. ஆகஸ்ட் 6, 1945 அன்று, "சின்னப் பையன்" எனப் பெயரிடப்பட்ட யுரேனியம் கருப்பிளவு அணுகுண்டு ஜப்பானிய நகரமான இரோசிமாவில் வீசப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின், ஆகஸ்ட் 9 அன்று "குண்டு மனிதன்" எனப் பெயரிடப்பட்ட புளூட்டோனியம் கருப்பிளவு அணுகுண்டு இன்னொரு ஜப்பானிய நகரான நாகசாகியில் வீசப்பட்டது. இவ்விரு குண்டுகளின் காரணமாக ஏற்பட்ட கடுமையான காயங்களினால் கிட்டத்தட்ட 200,000 மக்கள் இறந்தனர்.[1] சப்பானின் சரணடைவிலும் அதன் சமூக நிலையிலும் இக் குண்டுவீச்சுக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்றும் முக்கிய விவாதப்பொருளாக விளங்குகிறது.

இரோசிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சின் பின், பரிசோதனை நோக்கத்துக்காகவும், செய்முறை விளக்கங்களுக்காகவும் இரண்டாயிரம் தடவைகளுக்கு மேல் அணுகுண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகள் மட்டுமே அணுவாயுதத்தை கொண்டுள்ளனவாக அல்லது அணுவாயுதத்தைக் கொண்டுள்ள நாடுகளாகச் சந்தேகிக்கப்படுவனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்ட நாடுகளாக (முதற்பரிசோதனைக் காலவரிசைப்படி) ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா ஆகியன அறிவித்துள்ளன. இஸ்ரேல் அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்டிருப்பினும் அது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.[2][3][4] தென்னாபிரிக்கா முன்பு அணுவாயுதங்களை உற்பத்தி செய்திருப்பினும், அதன் இனவெறி அரசாங்கம் முடிவுக்கு வந்தபின் தனது ஆயுதங்களை அழித்ததுடன் அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலும் ஒப்பமிட்டது.[5]

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின் மதிப்பீட்டின்படி 2012 அளவில் உலகில் 17,000க்கும் மேற்பட்ட அணுவாயுதங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கிட்டத்தட்ட 4,300 ஆயுதங்கள் செயற்பாட்டு நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.[2]

வகைகள்[தொகு]

அணுவாயுதத்தில் இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன. அவை அணுக்கருப் பிளவின் மூலம் மட்டும் தமது சக்தியைப் பிறப்பிக்கக்கூடியன மற்றும் அணுக்கரு இணைவின் மூலம் தமது சக்தியைப் பிறப்பிக்கக்கூடியனவாகும். இவற்றுள் அணுக்கரு இணைவின் மூலம் இயங்கும் அணுவாயுதத்தில் தாக்கத்தை ஆரம்பிப்பதற்கான சக்தி அணுக்கருப் பிளவின் மூலம் வழங்கப்படும். இதன் விளைவாக உருவாகும் அணுக்கரு இணைவுத் தாக்கம் அதிகளவிலான சக்தியை வெளிப்படுத்தும்.

அணுக்கருப் பிளவு ஆயுதங்கள்[தொகு]

இரண்டு அடிப்படை கருப்பிளவு ஆயுத வடிவமைப்புக்கள்

பாவனையிலுள்ள அனைத்து அணுவாயுதங்களும் தமது வெடிப்புச் சக்தியில் சிறியளவான பகுதியை அணுக்கருப் பிளவுத் தாக்கங்களினால் பெறுகின்றன. தனியே அணுக்கருப்பிளவுச் சக்தியை மாத்திரம் வெளியிடும் ஆயுதங்கள் அணுகுண்டு எனப்படும்.

அணுக்கருப் பிளவு ஆயுதங்களில் பிளவுறு பொருளொன்று (செறிவாக்கப்பட்ட யுரேனியம் அல்லது புளூட்டோனியம்) அவதித் திணிவிலும்-அடுக்குக்குறி வளர்ச்சியுடைய கருச் சங்கிலித் தாக்கத்தை ஏற்படுத்தத் தேவையான திணிவு-சிறிது கூடியளவில் சேர்க்கப்படும். இதற்காக இரண்டு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. முதல் வகையில் அவதித் திணிவிலும் குறைந்த பிளவுறு பொருளின் மீது இன்னொரு சிறு திணிவுடைய பிளவுறு பொருள் பாய்ச்சப்படும். மற்றைய வகையில் இரசாயன வெடிபொருள்களைப் பயன்படுத்தி பிளவுறு பொருள் நெருக்கப்பட்டு அதன் அடர்த்தி மிக அதிகமாக்கப்படும். இரண்டாவது முறையானது முதலாவது முறையிலும் மிகவும் சிக்கலானது என்பதுடன், புளூட்டோனியம் வகை ஆயுதங்களில் மாத்திரமே பயன்படுத்தப்படும்.

அணுக்கரு ஆயுத உருவாக்கத்தில் உள்ள பாரிய சவால் அணுவாயுதம் தானாக அழிவதற்கு முன் குறிப்பிட்டளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதாகும். பிளவு ஆயுதங்களினால் வெளியிடப்படும் சக்தி ஒரு தொன் TNT அளவு சக்தியிலிருந்து 5லட்சம் தொன் TNT அளவு வரை வேறுபடும்.[6]

அனைத்து பிளவுத் தாக்கங்களும் பிளவுப் பொருட்கள் எனப்படும், அணுக்கருவின் கதிர்த் தொழிற்பாடுடைய துகள்களை உருவாக்குகின்றன. பல பிளவுப் பொருட்கள் உயர்கதிர்த் தொழிற்பாடு (குறுகிய வாழ்காலம்) அல்லது நடுத்தரக் கதிர்த் தொழிற்பாடு (உயர் வாழ்காலம்) கொண்டன. இவை கட்டுப்படுத்தா நிலையில் கடும் கதிர்த்தொழிற்பாடு மாசுபாட்டை ஏற்படுத்தும். பிளவுப் பொருட்கள், கட்டுப்படுத்தா அணுக்கருத் தாக்கங்களின் முக்கிய கதிர்த் தொழிற்பாட்டு மூலகங்களாகும்.

அணுவாயுதங்களில் முக்கிய பிளவுப் பொருளாகப் பயன்படுவது யுரேனியம்-235 மற்றும் புளூட்டோனியம்-239 என்பனவாகும். மிகவும் குறைந்தளவில் பயன்படுவது யுரேனியம்-239 ஆகும். நெப்டியூனியம்-237 மற்றும் அமெரீசியத்தின் சில சமதானிகளும் பயன்படுத்தப்படலாம். எனினும் இச் சமதானிகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.[7]

அணுக்கரு இணைவு ஆயுதங்கள்[தொகு]

ஐதரசன் குண்டுக்கான டெல்லர் உலம் வடிவமைப்பின் அடிப்படைக் கூறுகள்:பிளவுக்குண்டு மூலம் உருவாகும் கதிர்ப்பு இணைவு எரிபொருளை நெருக்கவும் வெப்பமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

அணுவாயுதங்களில் மற்றைய அடிப்படை வகை அணுக்கரு இணைவின் மூலம் சக்தியை வெளிப்படுத்துவனவாகும். இவ்வாறான ஆயுதங்கள் வெப்ப அணுவாயுதங்கள் அல்லது ஐதரசன் குண்டுகள் எனப்படும். இவை ஐதரசனின் சமதானிகளுக்கிடையிலான (டியூட்டிரியம் மற்றும் டிரிடியம்) இணைவுத் தாக்கங்களில் தங்கியிருப்பதன் காரணமாக ஐதரசன் குண்டுகள் எனப்பட்டன. இவ்வனைத்து ஆயுதங்களும் அவற்றின் சக்தியில் குறிப்பிடத்தக்களவை அல்லது பெருமளவை கருப் பிளவுத் தாக்கங்களினூடாகவே பெற்றுக்கொள்கின்றன. ஏனெனின் இணைவுத் தாக்கங்களை மேற்கொள்வதற்கான தொடக்கியாக பிளவுத் தாக்கங்கள் பயன்படுத்தப்படுவதாலாகும்.[8]

ஐக்கிய அமெரிக்கா, ரசியா, ஐக்கிய இராச்சியம், சீனா, பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய ஆறு நாடுகள் மாத்திரமே இதுவரை வெப்ப அணுக்கரு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளன. (இந்தியா இவ்வாறான ஆயுதப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதா என்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது.)[9] வெப்ப அணுவாயுதங்களை உருவாக்குதலும் நடைமுறைப்படுத்தலும் அணுக்கருப் பிளவு ஆயுதங்களிலும் சிக்கலானதாகும். எனினும் இன்று உருவாக்கப்படும் பெரும்பாலான அணுவாயுதங்கள் வெப்ப அணுவாயுத வடிவமைப்பையே பயன்படுத்துகின்றன. ஏனெனில் இது மிகவும் வினைத்திறனுடையதாகும்.

வெப்ப அணுகுண்டுகள், இணைவு எரிபொருளை நெருக்குவதற்கும் வெப்பப் படுத்துவதற்கும் அணுக்கருப் பிளவு ஆயுதச் சக்தியைப் பயன்படுத்துகின்றன. மெகா தொன் சக்தியை வெளிப்படுத்தும் ஐதரசன் குண்டுகளில் பயன்படுத்தப் படும் "டெல்லர் உலம் வடிவமைப்பில்" கருப்பிளவு ஆயுதமும், இணைவு எரிபொருளும் (டிரிடியம், டியூட்டிரியம் அல்லது லிதியம் டியூட்டிரைட்) விசேடமான கதிர்ப்புத் தெறிப்பு கொள்கலன் ஒன்றினுண் அருகருகே வைக்கப்படும். பிளவு ஆயுதம் வெடிக்கும் போது வெளியாகும் காமாக் கதிர்களும் X-கதிர்களும் முதலில் இணைவு எரிபொருளை நெருக்கிப் பின்னர் அதன் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால் உருவாகும் கரு இணைவுத் தாக்கம் பெரும் எண்ணிக்கையான அதிவேக நியூத்திரன்களை உருவாக்கும். இந் நியூத்திரன்கள் வறிதாக்கப்பட்ட யுரேனியம் போன்ற வலுக்குறைந்த பிளவுப் பொருட்களில் பிளவுத்தாக்கத்தைத் தூண்டும். பிளவு ஆயுதத் தாக்கம் "முதற் படி" எனவும் இணைவுத் தாகம் "துணைப் படி" எனவும் அழைக்கப்படும். பெரியளவிலான மெகா தொன் சக்தி கொண்ட ஐதரசன் குண்டுகளில் வெளிப்படும் சக்தியில் அரைப்பங்கு வறிதாக்கப்பட்ட யுரேனியம் மூலமான பிளவுத் தாக்கத்திலிருந்தே பெறப்படும்.[6]

இண்று உருவாக்கப்படும் பெரும்பாலான வெப்ப அணுவாயுதங்கள் மேற்கூறப்பட்ட "இரு படி" ஒழுங்கமைப்பையே பயன்படுத்துகின்றன. ஆயினும் மேலதிக தாக்கப் படிகளையும் சேர்க்க முடியும். இவ்வாறு உருவாக்கப்படும் ஒவ்வொரு படியும் அடுத்த படிக்கான எரிபொருளை வெடிக்கச் செய்யும். இதன் மூலம் பெரும் சக்திக் கொள்ளளவு கொண்ட வெப்ப அணுவாயுதங்களை உருவாக்க முடியும். இதுவரை வெடிக்க வைக்கப்பட்டவற்றிலேயே மிகப்பெரியது சோவியத் ஒன்றியத்தின் "சார் குண்டு" ஆகும். இதன் வெடிப்பின் போது 50 மெகா தொன் TNT சக்தி வெளியிடப்பட்டது. இது ஒரு மூன்று படி ஆயுதமாகும். பெரும்பாலான வெப்ப அணுவாயுதங்கள் இதனிலும் சிறியன. இதற்குக் காரணம், ஏவுகணைகளின் இடப் பற்றாக்குறை மற்றும் நிறை என்பனவாகும்.[10]

வரலாறு[தொகு]

அணுகுண்டு கண்டுபிடிப்பு[தொகு]

முதன்மைக் கட்டுரை: மன்காட்டன் திட்டம்

முதன்முறையாக அணுஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியலாளர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டுமுயற்சியாலும், இரண்டாம் உலகப்போரின்போது Manhattan Project என்ற பெயரில் நடந்த இரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது. முதல் அணுஆயுதம் ஜெர்மானிய நாசிகளுடன் ஏற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டாலும், ஜப்பானியர்களுக்கு எதிராக ஜப்பானிய நகரங்களான இரோசிமா, நாகசாகி மீது பிரயோகிக்கப் பட்டது.

முதற் பயன்பாடு[தொகு]

உலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில், அமெரிக்கா தன்னை தாக்கிய ஜப்பானை, தாக்கியழிக்க 2 அணுகுண்டுகளை பயன்படுத்தியது. முதல் அணுகுண்டு சின்னப் பையன் (Little boy) என்று பெயரிடபட்டு, ஆகஸ்டு 6ஆம் நாள் முன்காலை இரோசிமா நகரின் மீது போடப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின், இரண்டாவது அணுகுண்டு கொழுத்த மனிதன் (fat man) நாகசாகி நகரின் மீது வீசப்பட்டது. இந்த குண்டு வீச்சுகளால் பலியானோர் எண்ணிக்கை சுமார் 120,000. கதிரியக்கத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா.

அணுகுண்டுப் பரிசோதனைகள்[தொகு]

இரோசிமா, நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, சுமார் இரண்டாயிரம் தடவைகள் சோதனைகளுக்காக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் தனது முதல் அணுஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் ஐதரசன் அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது. 1960களில் எற்பட்ட ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியினால், அணுஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன.

அணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகளாக உறுதிசெய்த நாடுகள் முறையே (காலமுறைபடி) ஐக்கிய அமெரிக்க நாடுகள், இரசியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வட கொரியா. பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் இருப்பினும், முழுமையாக அதை உறுதிசெய்ய இயலவில்லை. உதாரணமாக, இஸ்ரேல் அணுஆயுதவான்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தபடும் சில துணைக்கருவிகளை உருவாக்கியுள்ளதை கருத்தில்கொண்டால், அது அணுஆயுதங்களை கொண்டுள்ளதோ என்ற ஐயம் எழுவது திண்ணம். அண்மைகாலமாக, ஈரான் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

உலக அணுவாயுதப் போட்டி 1945–2007.[தொகு]

உலக வரலாற்றில், அணுவாயுதங்கள் நாட்டின் ராணுவ பலத்தின் சின்னமாகவும், ராணுவ தொழிநுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் முயற்சியாகவும் கருதப்பட்டன. அமெரிக்காவுக்கும், சோவியத் குடியரசுக்கும் இடையே நடந்த பனிப்போரின்போது, அணுஆயுதப் பரிசோதனைகள் எச்சரிக்கை சமிக்கைகள் போல் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில், மற்ற சில நாடுகளும், அணுஆயுத தொழிநுட்பத்தை கற்றுக்கொண்டு இருந்தன. அவையாவன, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா. இந்த ஐந்து அணுஆயுத நாடுகளும் இணைந்து அணுஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஒப்பந்ததை (NPT) உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தின. அணுஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் சரத்துகள் விவாதத்துகுரியவையாக சில நாடுகள் கருதியமையால், இந்த ஒப்பந்தம் முழு வெற்றி அடையவில்லை. ஒப்பந்தத்தை விட்டு விலகி சில நாடுகளும் (வட கொரியா), ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் சில நாடுகளும் (இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மற்றும் இஸ்ரேல்) அணுஆயுத தொழிநுட்பத்தை அடைந்தன. 1990 களின் தொடக்கத்தில், பனிப்போர் முடிவுற்ற சூழ்நிலையில, அமெரிக்காவும், ரஷ்ய கூட்டமைப்பும், தம் அணுஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வதாக அறிவித்தன.

2005 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தானை சார்ந்த பிரபல விஞ்ஞானி அப்துல் கதீர் கான், தான் ஈரான், லிபியா, வட கொரியா ஆகிய நாடுகளுக்கு அணுஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக ஒப்புக்கொண்டார். இது வளர்ந்த நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியலையை உருவாக்கியது. அக்டோபர் 9, 2005ல், வட கொரியா தனது, முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Frequently Asked Questions #1". Radiation Effects Research Foundation. Archived from the original on 19 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2007. total number of deaths is not known precisely … acute (within two to four months) deaths … Hiroshima … 90,000-166,000 … Nagasaki … 60,000-80,000 {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  2. 2.0 2.1 "Federation of American Scientists: Status of World Nuclear Forces". Fas.org. பார்க்கப்பட்ட நாள் 2012-12-29.
  3. "Nuclear Weapons – Israel". Fas.org. Jan 8, 2007. பார்க்கப்பட்ட நாள் 2010-12-15.
  4. See also Mordechai Vanunu
  5. "Nuclear Weapons – South Africa". Fas.org. 29 May 2000. பார்க்கப்பட்ட நாள் 2011-04-07.
  6. 6.0 6.1 The best overall printed sources on nuclear weapons design are: Hansen, Chuck. U.S. Nuclear Weapons: The Secret History. San Antonio, TX: Aerofax, 1988; and the more-updated Hansen, Chuck. Swords of Armageddon: U.S. Nuclear Weapons Development since 1945. Sunnyvale, CA: Chukelea Publications, 1995.
  7. David Albright and Kimberly Kramer (2005-08-22). "Neptunium 237 and Americium: World Inventories and Proliferation Concerns" (PDF). Institute for Science and International Security. பார்க்கப்பட்ட நாள் 2011-10-13.
  8. Carey Sublette, Nuclear Weapons Frequently Asked Questions: 4.5.2 "Dirty" and "Clean" Weapons, accessed 10 May 2011.
  9. On India's alleged hydrogen bomb test, see Carey Sublette, What Are the Real Yields of India's Test?.
  10. Sublette, Carey. "The Nuclear Weapon Archive". பார்க்கப்பட்ட நாள் 2007-03-07.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கரு_ஆயுதங்கள்&oldid=3771835" இலிருந்து மீள்விக்கப்பட்டது