நாரண. துரைக்கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாரண. துரைக்கண்ணன் (ஆகஸ்ட் 24, 1906 - ஜூலை 22, 1996) தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஜீவா என்ற புனை பெயரில் எழுதியவர். சி​று​க​தை​கள்,​​ புதினங்கள்,​​ தலை​வர்​கள் வர​லாறு,​​ நாட​கம்,​​ கவிதை,​​ அர​சி​யல் தலை​யங்​கம் என்று பல்​வேறு இலக்​கி​யத் துறை​க​ளில் எழுதியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

துரைக்கண்ணன் 1906 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் க. வே. நாராயணசாமி, அலர்மேல் மங்கை ஆகியோருக்குப் பிறந்தார். பெற்​றோர் சூட்​டிய பெயர் நட​ரா​சன்.​ ஆனால்,​​ அவர்​கள் "துரைக்​கண்ணு' என்று செல்​ல​மாக அழைத்​த​னர். எழுத்​து​ல​கில் நாரண துரைக்கண்ணன் என்ற பெயர் நிலை​பெற்​றது.​ 1932 ஆம் ஆண்டு,​​ தன் 25வது வய​தில் மீனாம்​பாள் என்ற பெண்​ணைத் திரு​ம​ணம் செய்​து​கொண்​டார்.​ 1982 ஆம் ஆண்டில் மனைவி காலமானார்.

இவரது இளமைக்கல்வி திண்ணைப் பள்ளியிலும், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் அமைந்தது. மறைமலை அடிகள் போன்றவர்களிடம் தமிழ் பயின்​றார்.​ மெய்ப்பு சரி​பார்க்​கும் பணி​யில் பல அச்​ச​கங்​க​ளில் பணி​யாற்​றி​னார்.​ மெய்ப்பு சரி பார்ப்​ப​தில் வல்​ல​வ​ரா​னார்.​

வ​ரு​வா​யைப் பெருக்க சில காலம் அடி​சன் கம்​பெ​னி​யில் பணி​யாற்​றி​னார்.​ நாரண துரைக்​கண்​ண​னின் முதல் கட்​டு​ரையே "சரஸ்​வதி பூஜை' என்​கிற பெய​ரில் ​ 1924-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இத​ழில் வெளியானது.

திரு.நாரணதுரைக்கண்ணர் நலவாழ்வு நிதி[தொகு]

பிற்காலத்தில், தமிழ் எழுத்துலகால் இவர் மறக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், 1973 ஆம் ஆண்டு சமயம் திருமயிலை சீனிவாச சாஸ்திரி அரங்கில் நிகழ்ந்த இலக்கியக் கூட்டத்தில் நாரண. துரைக்கண்ணன் தமது பேச்சில் தந்த தன்னிலை விளக்கம், பார்வையாளர்களுக்கு அவரது பொருளாதாரச் சூழலைப் புரிய வைத்தது. அதன்பின் ஒளவை நடராஜன் வழிகாட்டுதலில் ’திரு.நாரணதுரைக்கண்ணர் நலவாழ்வு நிதி’ எனும் நிதி திரட்டி அவரை வறுமைச் சூழலில் இருந்து விடுவிக்க முடிவுசெய்தனர். அதற்கு முன்னரே பலர் அவ்வாறு நிதி திரட்ட முயன்று பாதியிலேயே கை விட்ட நிலைமையில் ’அன்னை கலை, இலக்கிய நற்பணி மன்றம்’ சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவில் அமைந்திருந்த நாரண துரைக்கண்ணர் இல்லம் சென்று அவரிடம் அவருக்கு உதவக்கூடியோர் என்று அவர் கருதுவோரின் பெயர்ப்பட்டியல் பெற்று ஆர்வத்துடன் நிதி திரட்ட முயன்றது. அம்முயற்சியில் எழுத்தாளரான நாரண. துரைக்கண்ணன் வெள்ளை உள்ளத்துடன் இரும்புப்பெட்டிக்கும் இதயத்திற்கும் சம்பந்தம் இல்லை எனும் நடைமுறை யதார்த்தம் புரியாமல் பலரின் பெயரைத் தந்திருந்ததை உணர்ந்த அக்குழு தாங்கள் பெற்ற பல கசப்பான அனுபவங்களையும் நாரண. துரைக்கண்ணருக்குத் தெரியாமல் மறைத்து, சேர்த்த நிதியை 23.12.1973 அன்று கோகலே மண்டபத்தில் நடந்த விழாவில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி மூலம் நாரண. துரைக்கண்ணரிடம் ஒப்படைத்தது.[1] வள்​ள​லார் மற்​றும் மகா​கவி பார​தி​யின் நூல்​களை ஆர்​வத்​து​டன் கற்​றார்.​

பத்திரிகையாளராக அறிமுகம்[தொகு]

பரலி சு. நெல்லையப்பர் மூலம் லோகோபகாரி வார இதழில் உதவி ஆசிரியராக அறிமுகமானர். தேசபந்து, திராவிடன், தமிழ்நாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார். 1932 ”ஆனந்த போதினி” என்ற இதழின் ஆசிரியரானார். அந்த இத​ழில்​தான் "அழ​காம்​பிகை' என்ற சிறு​க​தையை எழு​தி​னார்.​ அதுவே அவருடைய முதல் சிறு​கதை என்று கூற​லாம்.​ 1934 ஆம் ஆண்டு ”பிரசண்ட விகடன்” ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார். 32 ஆண்​டு​க​ளுக்கு மேல் தொடர்ந்து அதன் ஆசி​ரி​ய​ரா​கப் பணியாற்றினார்.

நாவலாசிரியராக அறிமுகம்[தொகு]

இத​ழா​சி​ரி​ய​ராக இருந்​த​தால் பல்​வேறு பகு​தி​களை எழு​தும்​போது வெவ்​வேறு புனைப் பெயர்​களை அமைத்​துக்​கொள்ள நேர்ந்​தது.​ தான் ஆசி​ரி​ய​ராக இருந்த ஆனந்த போதினி,​​ பிரசண்ட விக​டன் மாத,​​ மாத​மி​ரு​முறை இதழ்​க​ளில்,​​ மைவண்​ணன்,​​ வேள்,​​ துலாம்,​​ தராசு,​​ திரு​ம​யி​லைக் கவி​ரா​யர்,​​ துரை,​​ லியோ எனப் பல்​வேறு புனைப் பெயர்​க​ளில் கதை,​​ தொடர்​கதை,​​ அர​சி​யல் தலை​யங்​கம்,​​ விமர்​ச​னங்​கள்,​​ விவா​தங்​கள்,​​ நாட​கங்​கள் எழு​தினார்.​ அவ்​வாறு எழு​தும்​போது பல்​வேறு பெயர்​க​ளைச் சூட்​டிக் கொண்​டா​லும் "ஜீவா” என்ற பெயர்​தான் வாச​கர்​கள்,​​ எழுத்​தா​ளர்​க​ளி​டையே அன்று பிர​ப​ல​மா​னது.​

சமூகப் பணி[தொகு]

இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, எழுத்தாளர்களின் உரிமைக்கும் போராடியவர். பாரதியார் பாடல்களுக்குத் தனியொருவர் உரிமை கொண்டாடுவது சரியல்ல, அவை நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று உரிமைக்குரல் எழுந்தது. அதற்காக பாரதி விடுதலைக் கழகம் என்ற அமைப்பில் இவர் தலைவராக இருந்தார். 1949-இல் மகா​கவி பார​தி​யார் இலக்​கி​யங்​களை நாட்​டு​டை​மை​யாக்​கப் போராட ஏற்​பட்ட குழு​வில் முக்​கிய பங்​கு​வ​கித்து வெற்றி பெற்​றார்.​ அதற்​கென ஏற்​பட்ட குழு​வி​னர் சார்​பில் பார​தி​யின் துணை​வி​யார் செல்​லம்​மாளை திரு​நெல்​வே​லிக்​குச் சென்று,​​ கண்டு,​​ ஒப்புதல் கடி​தம் வாங்​கி​னார்.

பொறுப்புகள்[தொகு]

  1. தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கம்
  2. செயலாளர், கம்பர் கழகம், சென்னை
  3. தலைவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
  4. துணைத்தலைவர், தென்னிந்திய பத்திரிகையாளர் பெருமன்றம்
  5. தலைவர், தமிழ்க் கவிஞர் மன்றம்

படைப்புகள்[தொகு]

பதினைந்துக்கும் மேற்பட்ட புதினங்கள், கதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 130ற்கும் மேல் நூல்களை இவர் எழுதியுள்ளார். இவ​ரது நூல்​கள் அர​சு​டைமை ஆக்​கப்​பட்​டுள்ளன.​

  1. புதுமைப்பெண்; அருணோதயம், சென்னை.
  2. வள்ளலார் (நாடகம்)
  3. அருட்கவி அமுதம் (பக்திப்பாடல் தொகுப்பு)
  4. திருவருட்பா பற்றிய நூல்
  5. உயிரோவியம் (புதினம்)
  6. உயிரோவியம் (நாடகம்)
  7. நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்? (புதினம்
  8. தாசி ரமணி (தே​வ​தா​சி​கள் என்ற இழுக்கை சமூ​கத்​தில் இருந்து களைய வேண்​டும் என்ற கிளர்ச்சி நாட்​டில் பர​விய காலத்​தில் எழு​தப்​பட்ட புதினம்) ​
  9. தீண்டாதார் யார்? (நாடகம்)
  10. காதலனா? காதகனா? (மாணவர் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டும் புதினம்)
  11. இலட்சிய புருடன்
  12. வேலைக்காரி
  13. நடுத்தெரு நாராயணன்

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. பெருந்தலைவர் காமராசர்; அரு.சங்கர்; மணிவாசகர் பதிப்பகம்;பக்கம் 92-96
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரண._துரைக்கண்ணன்&oldid=3218324" இலிருந்து மீள்விக்கப்பட்டது